<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மா. சண்முகசிவா</title>
	<atom:link href="http://shanmugasiva.vallinam.com.my/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://shanmugasiva.vallinam.com.my</link>
	<description></description>
	<lastBuildDate>Sun, 18 Mar 2012 05:56:43 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.1</generator>
		<item>
		<title>உணர்வின் வெளிப்பாடா? அறிவின் செயல்பாடா?</title>
		<link>http://shanmugasiva.vallinam.com.my/?p=123</link>
		<comments>http://shanmugasiva.vallinam.com.my/?p=123#comments</comments>
		<pubDate>Sun, 18 Mar 2012 05:55:49 +0000</pubDate>
		<dc:creator>மா. சண்முகசிவா</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://shanmugasiva.vallinam.com.my/?p=123</guid>
		<description><![CDATA[<p style="text-align: justify;">கவிதை என்ற மந்திரச் சொல்லுக்கு எத்தனை எத்தனை விளக்கங்கள் சொல்லப்பட்டுவிட்டன. இன்னும் சொல்வதற்கு நிறையவே இருக்கின்றன என்பதுதான் அதன் சிறப்பு. ஒரு வேளை கவிதை என்பது கடவுளைப்போலதானோ என எண்ணத்தோன்றுகிறது, எல்லோரும் தரும் எல்லாவிதமான விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் மீறி தள்ளி நின்று பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறது. கவிதை என்பது அடிப்படையில் அறிவின் செயல்பாடா அல்லது உணர்வின் வெளிப்பாடா என்பது குறித்தான விவாதம் தொடர்கின்றது. கவிதைக்கு இதுவரையில் முற்றும் முடிவுமான ‘definition’ வரைவிலக்கணம் இருப்பதாகத் தெரியவில்லை. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">கவிதை என்ற மந்திரச் சொல்லுக்கு எத்தனை எத்தனை விளக்கங்கள் சொல்லப்பட்டுவிட்டன. இன்னும் சொல்வதற்கு நிறையவே இருக்கின்றன என்பதுதான் அதன் சிறப்பு. ஒரு வேளை கவிதை என்பது கடவுளைப்போலதானோ என எண்ணத்தோன்றுகிறது, எல்லோரும் தரும் எல்லாவிதமான விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் மீறி தள்ளி நின்று பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறது.<br />
<span id="more-123"></span><br />
கவிதை என்பது அடிப்படையில் அறிவின் செயல்பாடா அல்லது உணர்வின் வெளிப்பாடா என்பது குறித்தான விவாதம் தொடர்கின்றது. கவிதைக்கு இதுவரையில் முற்றும் முடிவுமான ‘definition’ வரைவிலக்கணம் இருப்பதாகத் தெரியவில்லை. அறிவு ரீதியானா விசயங்களுக்குத்தான் இது சாத்தியமாகும். கலைவடிவங்களுக்கான விளக்கங்கள் திட்டவட்டமான வரையறைகளுக்குள்ளோ வார்த்தைகளுக்குள்ளோ கட்டுப்பட்டு நிற்காது என்றே தோன்றுகிறது.</p>
<p style="text-align: justify;">படைப்பு மனம் தன்னை பாதிக்கும் நினைவுகளை, உணர்வுகளை, அனுபவங்களை மொழிக்குள் தளமாற்றம் செய்யும்போது கவிதை பிறக்கிறது என்கிறார்கள். கவிதையினுள் இருக்கும் இந்த ‘உள்ளுறை’ அனுபவம் வாசகனிடத்தில் ஒரு கலை அனுபவமாக அகவயப்படும்போது அது வெற்றி அடைகிறது. எல்லமே ‘சொற்கூட்டம்’ தானே. எது வெறும் செய்தியாக நின்றுவிடுகிறது, எது அழகியலின் தேவையில் கலையாக உருமாற்றம் பெறுகிறது என்பதைப் பொறுத்து கவிதை தன்னை கட்டமைத்துக் கொள்கிறது.</p>
<p style="text-align: justify;">“வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே” என்ற வரிகள் இன்றைய கவிதை வாசகனுக்கு எந்தக் கவித்துவ அனுபவத்தையும் தராது. ஆனால் ‘விட்டு விடுதலையாகி நிற்பாய்’ என்ற வரியோ இன்றும் நம் மனங்களில் புதிய உடைப்புகளை உருவாக்குவதாக உள்ளது. இரண்டு வரிகளுமே விடுதலையைப் பற்றியதுதான் என்றபோதும் இரண்டிற்கும் இடையில் எவ்வளவு தூரம்” &#8211; (மனுஷ்ய புத்திரன்)</p>
<p style="text-align: justify;">கவிதைக்கு இலக்கண வரையறைகள், வரம்புகள் ஒரு காலத்தில் தேவையானதாக இருந்தது. இன்று கவிதையும் கூட “விட்டு விடுதலையாகி” தான் நிற்கிறது. வரையறைகள் அறிவு சார்ந்தவை. கவிதை தரும் கலையனுபவம் மனம் சார்ந்தது. அறிவு அதிகபட்சம் கவிதைக்கு மிக அருகில் நம்மை அழைத்துச் செல்லக்கூடும். அறிமுகம் செய்துவைக்கும். உள்ளுணர வைக்குமா? உணர்வதற்கென்றே மூளையில் வேறொரு வலைப்பின்னல் (neural network) இருக்கிறதே. ‘அறிந்து கொள்வது’ என்பதற்கும் இடையிலான தூரத்தை நிர்ணயம் செய்யும் இடத்தில் கவிதை வாழ்கிறது.</p>
<p style="text-align: justify;">சமீபத்தில் வெளியான “A GENERAL THEORY OF LOVE” என்ற மூன்று மனோவியல் மருத்துவர்களால் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல் “The secret” என்ற Denise levertov எழுதிய கவிதையில் ஆரம்பிக்கிறது. உடற்கூறு மனோவியல் நூலொன்று கவிதையுடன் திறப்பு காண்பது வியப்பாக இருக்கலாம். Poetry transpires at the junction between feeling and understanding- and so does the bulk of emotional life. (Thomas Lewis). உணர்தல் என்பதற்கும் புரிதல் என்பதற்குமான இடையில் இழையோடுகிறது கவிதையின் இருப்பு.</p>
<p style="text-align: justify;">முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சு கணித மேதை Blaise Pascel எழுதினார். The heart has its reasons whereof Reasons Knows nothing. ஆனால் அந்தக் கணித மேதைக்கு அன்று தெரிந்திருக்கவில்லை, உணர்வுகளை நிரப்பிக் கொண்டிருக்கும் மனம் வேறு, காரண காரியங்களை ஆராயும் அறிவு வேறு என்று. உணர்வுகள் ஊற்றெடுக்கும் சுரங்கமும், அறிவு வேலை செய்யும் அலுவலகமும் அருகருகே இருந்தாலும் அவை மூளையின் வெவ்வேறு பகுதிகள் என்பதை சமீபத்தில்தான் நாம் புரிந்துகொண்டுள்ளோம். உணர்வின் பெருக்கைப் போலவே சில நேரங்களில் கவிதையையும் நாம் தர்கித்து புரிந்துகொள்ள முடியாது போவதும் இதனால்தான். மனதோடு பேசும் கவிதையில்தான் கலையின் மர்மம் ஒளிந்துகொண்டிருக்கிறது. கவிதை நேரடியாக அறிவுரை சொல்ல முற்படும் போது, நம் அறிவோடு பேசும்போது கலையம்சம் விடைபெற்ருக் கொள்கிறது. கவிஞனின் பேரனுபவத்தின் பரப்பில், விரிவில் வாசக மனங்களை உள்ளிழுத்துக் கொள்வதற்கான முயற்சிதானே கவிதை என்பது.</p>
<p style="text-align: justify;">தன் சுய அனுபவத்தின் சாரம்சத்தை கண்டு சொல்ல முற்படும் கவிதையில்தானே கலையின் உயிர்ப்பு இருக்கிறது. கவிஞனின் நுட்பமான உணர்வு, அழகுணர்ச்சி, உண்மையை தொட அவன் மனம் கொள்ளும் முன்நகர்வு, மொழியின் வீச்சு, அவனது தனி அனுபவத்தை சக மனிதனோடு அவன் கொள்ளும் பகிர்வில் உள்ள நேர்மை உண்மை, என்பன கவிதையின் தரத்தை நிர்ணயம் செய்கின்றன. உணர்வில் அரும்பி மொழியினூடாக பயணம் செய்து மலரும் கவிதை இறுதியில் வாசகனிடத்தில் விட்டுச்செல்வது கவித்துவமான அனுபவமின்றி வேறு என்னவாக இருக்கமுடியும். மொழியின் போதாமையால் துன்புறும் கவிஞன், தேங்கிப்போன, பழசாகிப்போன, பொருட்ச்செறிவற்ற சொற்களை பட்டை தீட்டி, புதுமெருகேற்றி, அதற்கு புதிய பரிமாணங்களை காட்டி ‘சொல்புதிது, பொருள் புதிது, சுவை புதிது, சோதி மிக்க நவ கவிதையை’ அதன் மரபான வடிவங்களை மாற்றி, கவிதைக்குள், சொல்லின் பொருள் தொடர்ந்து நகர்ந்து கொண்டும் மொழியை நகர்த்திக் கொண்டும் இருக்கும் வண்ணம் தன் கவிமொழியைப் புனைந்து கொள்கிறான்; புதுபித்தும் கொள்கிறான். கவிதையின் உருவத்தை உள்ளடக்கத்தை உத்திகளை தொடர்ந்து மாற்றம் கொள்ளச் செய்யும் முயற்சியின் விளைவுதானே புதுக்கவிதை.</p>
<p style="text-align: justify;">மலேசியா சிங்கப்பூரில்தான் மரபுக்கவிதை புதுக்கவிதை சர்ச்சை இன்னும் தொடர்கின்றது. உண்மையில் மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையே பிரச்சனை ஏதுமில்லை. மாற்றம் கொண்டு வரும் மனித வாழ்வில் தனிமனித, சமூக, மொழி, பண்பாட்டுச் சூழலில் தன்னையும் தன் மொழியையும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் கவிஞனுக்கும் காலத்துக்குமான பிரச்சனைதான் அது.</p>
<p style="text-align: justify;">அவலமாகட்டும் ஆனந்தமாகட்டும், அவை மொத்த மனித சாதிக்குமான அடிப்படையான உணர்வுகள். ஆனால் அவ்வனுபவங்களை உணர்வது புரிந்துகொள்வது உணர்த்துவது என்பதில் ஏற்படும் மாற்றங்களில் காலங்காலமாகக் கவிதையில் கட்டுமானங்களும்&#8230; உடைப்புகளும்&#8230; ஒழுங்கமைவுகளும்&#8230; மீறல்களும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதானே இருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">இந்தப் புரிதல் இல்லாத சூழலில்தான் மலேசியாவின் புலமைமிக்க மரபுக்கவிஞர்கள் புதுக்கவிதைக்கு இன்றுவரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்க்கவிதை மரபு தெரியாத பல புதுக்கவிஞர்கள் வாக்கியங்களை வெட்டிப் போட்டுவிட்டு அதனை புதுக்கவிதை என்கின்றனர். இந்த இரண்டு சாரார்களுக்கும் நடுவில் நம்பிக்கை தரும் சில இளைஞ்ர்களின் கைகளில் கவிதை உயிர்த் துடிப்போடு தன் இருப்புக்கான போராட்டத்தைத் தொடர்கிறது.</p>
<p style="text-align: justify;"><strong>மா.சண்முகசிவா</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://shanmugasiva.vallinam.com.my/?feed=rss2&#038;p=123</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சாமிமூர்த்தி சிறுகதை தொகுப்புக்கு எழுதிய கருத்துரை :மௌனமாய் சில தருணங்கள்&#8230;</title>
		<link>http://shanmugasiva.vallinam.com.my/?p=120</link>
		<comments>http://shanmugasiva.vallinam.com.my/?p=120#comments</comments>
		<pubDate>Sun, 18 Mar 2012 05:52:22 +0000</pubDate>
		<dc:creator>மா. சண்முகசிவா</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://shanmugasiva.vallinam.com.my/?p=120</guid>
		<description><![CDATA[<p style="text-align: justify;">எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு பின் மாலைப் பொழுது&#8230;</p> <p>“கிளினிக்” முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல மழை ஓய காத்திருந்தேன். மழைச் சாரலுடன், பொட்டு பொட்டாக நனைந்த சட்டையும், கலைந்த ஈரமான வெண்கேசமும், கையில் புத்தகக் கட்டுமாக அறையினுள் நுழைந்தவரை “சாமிமூர்த்தி” என்று அறிமுகப்படுத்தியவர் ஜீவானந்தந்தான். என் மேஜையின் மீது இலக்கியச் சிந்தனையின் சிறுகதை தொகுப்பு, புளியமரத்தின் கதை (சுந்தர ராமசாமி) கடல்புரத்தில் (வண்ணநிலவன்) சாயாவானம் (சா. கந்தசாமி) கிடை (கி. ரா.) க.நா. சுவின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு பின் மாலைப் பொழுது&#8230;</p>
<p>“கிளினிக்” முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல மழை ஓய காத்திருந்தேன். மழைச் சாரலுடன், பொட்டு பொட்டாக நனைந்த சட்டையும், கலைந்த ஈரமான வெண்கேசமும், கையில் புத்தகக் கட்டுமாக அறையினுள் நுழைந்தவரை “சாமிமூர்த்தி” என்று அறிமுகப்படுத்தியவர் ஜீவானந்தந்தான்.<br />
<span id="more-120"></span><br />
என் மேஜையின் மீது இலக்கியச் சிந்தனையின் சிறுகதை தொகுப்பு, புளியமரத்தின் கதை (சுந்தர ராமசாமி) கடல்புரத்தில் (வண்ணநிலவன்) சாயாவானம் (சா. கந்தசாமி) கிடை (கி. ரா.) க.நா. சுவின் விமர்சனக் கட்டுரை தொகுப்பு என ஒவ்வொன்றாய் அடுக்கி வைத்துவிட்டு “இந்த பொஸ்தகங்கள ஒங்களுக்கு வேண்டியத எடுத்துக்குங்க டாக்டர்” என்றவரை புத்தகங்களோடு சேர்த்து ஒரு புத்தகமாக பார்க்க நேர்ந்ததும் ஒரு விந்தைதான்.</p>
<p>அவரை இன்றுவரை அப்படித்தான் பார்த்தும், படித்தும் வருகின்றேன்.</p>
<p>உணர்ச்சி வசப்பட்டு உருகி வழியும் பக்கங்கள்,<br />
சின்னச் சின்ன சலனங்களுக்கெல்லாம் சிலிர்த்துக் கொள்ளும் பக்கங்கள்,<br />
அழுத்திக் கொண்டிருக்கும் வாழ்வின் சுமைகளைத் தாங்கமுடியாது<br />
வலிக்கும் தோள்களுக்கு தடவிய, இலக்கிய களிம்புகளின் மீதியை<br />
விரல் நுனியிலிருந்து புரட்டுகையில், பதிவாக்கிக் கொண்ட பக்கங்கள்,<br />
ஞாபகத்தின் பொருட்டு முனைகள் மடக்கப்படாத பக்கங்கள்,</p>
<p>பாவனைகளற்ற, இயல்பான வாழ்வையும், ஒப்பனைகளற்ற உண்மையான<br />
மனதையும் காட்டும் பக்கங்கள் என புரட்டப் புரட்ட சில சமயங்களில்<br />
புதிராகவும், பல சமயங்களில் மனிதத்தை நேரடியாக ஸ்பரிசித்த பரவசம்<br />
தரும் பக்கங்களாகவும் இருக்கும்,</p>
<p>இவரது அப்பாவித்தனத்தைப் பார்த்து ஆத்திரம் வந்த தருணங்களும் உண்டு.</p>
<p>ஜீவாவின் (அரு.சு.ஜீவா) வசவுகளை வாங்கிக்கொண்டு, தள்ளி நிறுத்தி அடிக்கும் தாயை, முட்டி முட்டி மார்பில் விழுந்து அழுதவாறே அணைத்துக்கொள்ளும் குழந்தையைப் போலாகும்; அவரை பார்க்க வேடிக்கையாக இருக்கும். அடித்துக் கொண்டே அணைத்துக்கொள்ளும் அந்த நட்பின் வலி தரும் சுகமும், எந்த மூடித் திறப்பிலோ நுரைத்துப் பொங்கி வழிகிற நேயத்தின் சுகம் தரும் வலியையும் பார்க்க பார்க்க அழகாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.</p>
<p>***<br />
பாறைகளின் இடுக்குகளில், போருக்கு முந்திய (PRE WAR) பழைய கட்டிடங்களின் ஜன்னல் விளிம்புகளில் என்றெல்லாம் எந்த நம்பிக்கையில் செடிகள் வளர்ந்து காற்றில் திசைகளில் கைகளை வீசிக்கொள்கிறது.</p>
<p>சற்றும் சாதகமற்றச் சூழலில்தானே இங்கேயும், இவரும் இவரைப் போன்றோரிடமிருந்தும் எழுத்துக்கள் முகிழ்கின்றன.</p>
<p>ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.</p>
<p>அடுக்குமாடிக் கூண்டுக்குள், அளவான டெலிகம்ஸ் ஊதியத்தில் பிள்ளைகள் வளர்ந்து பெரிதாகிக் கொண்டிருந்த வேளையில், செலவினங்களுக்கு மூச்சு முட்டிக்கொண்டிருந்த காலமது.</p>
<p>ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கத்தின் நகர வாழ்க்கையில் மனிதனை விட்டு நகர்ந்து சென்றவைதான் ஏராளம். நகராதது வறுமைதான்.</p>
<p>ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் பகுதிநேர வேலை கிடைத்திருந்தது. தன்னையும் தன் எழுத்துக்களையும் விலைபேசி, பேரத்தை முடித்து, பேனாவின் மசியில் இழைத்து இழைத்து எழுதி கொடுத்துவிட்டு துண்டை விரித்து ஏந்தி வாங்கிக்கொள்ளாமல்,</p>
<p>“மன்னிச்சிடுங்க&#8230; என்னால முடியாது, நா வர்ரேன்” என்று மட்டும் சொல்லிவிட்டு, ஹெல்மட்டை மாட்டிக்கொண்டு மோட்டார் சைக்களில் அவர் கடந்து சென்றது முந்தியநாள் மழையில் சேறும் சகதியுமான பிரிக்பீல்ட்ஸின் புறக்கடை வீதியும் ஒரு பத்திரிக்கை அலுவலகமும் மட்டுமல்ல.</p>
<p>“மனசுக்கு, நல்லா இல்லே சார்&#8230; எல்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டு வந்துட்டேன்” என்றபோது அவரது மை பூசப்படாத மீசையின் மேல் வரிசை நரையுடன் கூடிய முகம் அசாதாரணமானதாக இருந்தது.</p>
<p>கடக்க வேண்டியதையெல்லாம் கடந்தாயிற்று.</p>
<p>உருண்டு, உருண்டு, நடந்து, நடந்து, கடந்து, கடந்து&#8230; ஊமைக் காயங்களோடுதான் எனினும் நண்பர்களை காண்கையில் கூப்பிய கரங்களோடு “வணக்கம் வாழ்க” என்று கூறும் கண்களின் ஒளியில் வாழ்வை தூக்கி நிறுத்தும் நம்பிக்கையின் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.</p>
<p>கதைகளைப் பற்றி, கதை சொல்லிகளைப் பற்றி, வாழ்வின் மேடு பள்ளங்களைப் பற்றி, சுக துக்கங்களைப் பற்றி, என்றெல்லாம் கனல் கொண்ட மனதோடு சிலரோடு மட்டும்தானே இந்த நீளமான பேச்சுக்களை தொடர முடிகிறது.</p>
<p>அதற்கு இசைவான, இணக்கமான மனங்களை நாடிச் சென்று அணுக்கமாக வைத்துக்கொள்ள முடிகிறதும் அபூர்வமாகத்தான் நடக்கிறது.</p>
<p>எழுத்தாளர்கள், அல்லது இவர்கள் எழுதுகிறார்கள் என்பதனால் மட்டுமேவா இந்த நட்பின் நீட்சி தொடர்கிறது.</p>
<p>அவரவரது சுபாவங்களை வைத்துத்தானே உறவுகள் தீர்மானிக்கப்படுகிறது.</p>
<p>மழை ஓய்ந்த மாலையின் மஞ்சள் வெயில் பூசிய மதில்களுக்கருகில் உட்கார்ந்து சாமிமூர்த்தி, ஜீவா, கந்தா, ரெசாவுடன் பேசிவந்த பௌத்த கோவிலின் பனிக்குடம் சுமந்த புல் வெளிகளில், நேயம் நீர்த்துப் போகிற அன்றாட வாந்வின் பாவனைகளிலிருந்து விலகி, கலை, இசை, இலக்கியம், மானுடம் என்று சம மன அலை வரிசையில் சிநேகம் உணர்கிற நெருக்கமான பொழுதுகளில், விரும்பிக் கூடினது போன்ற ஒரு சுகம் வருமே, அது அலாதியானதுதான்.</p>
<p>“அகம்” இலக்கிய வட்டம் அங்கு தோன்றியதுதான்.</p>
<p>எல்லோரிடமிருந்து பெறுவதற்கும், பகிர்வதற்கும் நிறைய இருக்கிறதை உணர முடிகிறது. தமிழகத்திலிருந்து அவ்வப்போது வெளிவரும் நாவல்கள், சிறுகதை தொகுப்புக்கள், சுபமங்களா, கணையாழி என நூல்களை அங்கே கொண்டு வந்து சேர்ப்பதுவும், அவைகளை தொட்டு விவாதங்கள் செய்வதும் சாமிமூர்த்தியாகத்தானிருக்கும்.</p>
<p>ஒரு முறை எழுத்தாளர் சுஜாதா என்னிடம், விமர்சனக் கட்டுரைகளில் அடிக்கடி பேசப்படுகின்ற “கரிச்சான் குஞ்சு” என்ற பழம்பெரும் எழுத்தாளர் எழுதிய எந்த நூலும் தனக்கு கிடைக்கப்பெற்றதில்லை என்று கூற, “எங்கவூர் சாமிமூர்த்தியிடம் உள்ளது, அவர் எழுதிய “பசித்த மானுடம்” என்று மகிழ்ச்சியோடு சொல்ல முடிந்தது.</p>
<p>தற்கால இலக்கியம் குறித்த சிந்தனை நூல்களை கொண்ட நூல்நிலையம் ஒன்றை தனிமனிதரான இவரிடம்தான் கண்டிருக்கின்றேன்.</p>
<p>புத்தகங்களையெல்லாம் சுமந்து திரியும் புத்தகம் இவர்.</p>
<p>***</p>
<p>உடைந்த தர்மாமீட்டரிலிருந்து குமிழிகளாக சிதறி உருண்டு ஓடும் பாதரசத்தைப் பார்க்க ஒரு சுட்டிப்பையன் அதனை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.</p>
<p>உள்ளம் உடைந்து கைகளைப் பற்றி விழிகளில் திரண்டு வழியும் கண்ணீர் சொட்டுக்களில் வாழ்வின் மொத்த சோகத்தையும் ஒரு கணத்தில் பார்த்த தருணங்களும் உண்டு.</p>
<p>அப்படித்தான் அவரால் அன்பொழுக “அம்மோய்” என்றழைக்கப்படும் அவரது மனைவி, கடும் விஷக் காய்ச்சலில் நினைவிழந்து, மூளையில் ரத்தக் கசிவிருக்குமோ என மருத்துவ நிபுணர் நம்பிக்கையற்றுச் சொல்லி சென்ற அந்த கணங்களில் அவருக்கு ஆறுதல் சொல்லி, தேற்றிவிட்டு மூளையை ஸ்கேன் எடுக்க ஏற்பாடு செய்யும் பொருட்டு கீழிறங்கிச் செல்கையில், மனதுள் சோகமும் பீதியுமென புயல் திரள்கிற நேரத்தில், நைந்து போன வார்த்தைகளைக் கொண்டு நான் என்ன சொல்ல முடியும் என இறுகிப் போன பொழுதுகள் உண்டு.</p>
<p>வாழ்க்கை அவரை அடித்து துவைத்துக் கொண்டிருந்த நேரமது. அன்று மாலை நான் அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்ட போது, என்னை வழியனுப்ப கார் பார்க் வந்தவர்,</p>
<p>என்னை கொஞ்சம் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு திரும்புகையில், கையில் புத்தகங்கள்!</p>
<p>“நம்ம திலிப்குமார் மெட்ராஸிலிருந்து அனுப்பி இருக்கிறார். சமீபத்துல வெளியான புஸ்தகங்கள். ஜெயமோகன், தோப்பில் மீரான் நாவல்கள், இந்தாங்க&#8230; படிச்சிட்டு குடுங்க” என்றார்.</p>
<p>“கத புஸ்தகம் படிக்கிற நேரமா இது. என்ன சார்&#8230; என்ன பேசுறீங்க&#8230; என்று எரிச்சலோடு சொல்லிவிட்டுத் திரும்புகையில், அவர் கொடுத்ததும், நான் மறுத்ததும் வெறும் புத்தகங்கள் மட்டுமல்ல, என எனக்கு புரிய வெகுநேரமானது.</p>
<p>அன்றும் சரி, இன்றும் சரி, சாமிமூர்த்தி எனக்கு ஒரு புத்தகம் தான்.</p>
<p>இன்னும் படித்து முடிக்காத புத்தகம்.</p>
<p><strong>-    மா. சண்முகசிவா</strong><br />
<strong> 23-11-2000</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://shanmugasiva.vallinam.com.my/?feed=rss2&#038;p=120</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அறிவுமதியில் &#8216;நட்புகாலம்&#8217; கவிதை நூலுக்காக எழுதிய அணிந்துரை!</title>
		<link>http://shanmugasiva.vallinam.com.my/?p=115</link>
		<comments>http://shanmugasiva.vallinam.com.my/?p=115#comments</comments>
		<pubDate>Sun, 18 Mar 2012 05:41:26 +0000</pubDate>
		<dc:creator>மா. சண்முகசிவா</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://shanmugasiva.vallinam.com.my/?p=115</guid>
		<description><![CDATA[<p style="text-align: justify;"> <p class="wp-caption-text">நட்புகாலம்</p> <p>அகத்துறைப் பாடல்கள் முதல் அப்பாதுரை மகன் ஐந்தாம்படிவம் அகிலனின் கையெழுத்துப் பிரதிவரை காதலைச் சொன்ன கவிதைகள் கானகமாய் அடர்ந்து கிடக்கையில், நளினமாதொரு நட்பைச் சொன்ன கவிஞனின் ‘நட்புக்கால’ கவிதைகள் மட்டும் அற்புதமாக இதழ் விரித்து, அபுர்வமான சின்னச்சின்ன பூக்களாய் உயிர்தொட்டுச் சிரிக்கின்றன.</p> <p style="text-align: justify;"> ‘அடிவானத்தை மீறிய / உலகின் / அழகு என்பது / பயங்களற்ற / இரண்டு மிகச் சிறிய / இதயங்களின் / [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">
<div id="attachment_116" class="wp-caption alignleft" style="width: 289px"><a rel="attachment wp-att-116" href="http://shanmugasiva.vallinam.com.my/?attachment_id=116"><img class="size-full wp-image-116" title="நட்புகாலம்" src="http://shanmugasiva.vallinam.com.my/wp-content/uploads/2012/03/நட்புகாலம்1.jpg" alt="" width="279" height="180" /></a><p class="wp-caption-text">நட்புகாலம்</p></div>
<p>அகத்துறைப் பாடல்கள் முதல் அப்பாதுரை மகன் ஐந்தாம்படிவம் அகிலனின் கையெழுத்துப் பிரதிவரை காதலைச் சொன்ன கவிதைகள் கானகமாய் அடர்ந்து கிடக்கையில், நளினமாதொரு நட்பைச் சொன்ன கவிஞனின் ‘நட்புக்கால’ கவிதைகள் மட்டும் அற்புதமாக இதழ் விரித்து, அபுர்வமான சின்னச்சின்ன பூக்களாய் உயிர்தொட்டுச் சிரிக்கின்றன.</p>
<p style="text-align: justify;"><span id="more-115"></span><br />
<em>‘அடிவானத்தை மீறிய / உலகின் / அழகு என்பது / பயங்களற்ற / இரண்டு மிகச் சிறிய / இதயங்களின் / நட்பில் / இருக்கிறது’</em></p>
<p style="text-align: justify;">
வானத்திற்குக் கூட அழகு அடிவானத்தில்தான். இதயங்களில் உதயமாகும் நட்பின் அழகிற்கு ஆதி எது? அந்தம் எது? ‘அழகு’ என்பதற்குத்தான் எது ஆரம்பம்? முடிவு?</p>
<p style="text-align: justify;">
<em>‘தோள் சாய்ந்து / தூங்கிய / உன் மூடிய விழிகளில் / விழித்தேன் / முதன்முதலாய் / நான்’</em></p>
<p style="text-align: justify;">
தந்தையின் மடியில் குழவியாய், தனையனின் கைகளில் சிறுமியாய், கணவனின் மார்பில் மனைவியாய், கண்மூடும் பெண்மை இன்று தோழனின் தோள்களில் துயில் கொள்ளும் உறவு எவ்வளவு தூய்மையானது! மென்மையான நட்பைக் காட்டி மனிதனை மேன்மைப்படுத்துகிற கவிதை எவ்வளவு சாத்தியமானது!</p>
<p style="text-align: justify;">
<em>‘அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த நீ / முதன் முதலாக என்னை / அழைத்துச் / சென்றிருந்தபோது / வழக்கமான அம்மாக்களின் / சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு / நடுவே&#8230; / ‘எப்போதும் இவன் உன் / மருமகனாக முடியாது / இவன் என் / நிச்சயிக்கப்பட்ட நண்பன்’ / இப்போதும் கேட்கிறது / எனக்குள் / உன் குரல்.</em></p>
<p style="text-align: justify;">இரு விழிகளாகப் பாலியல் ஒன்றே பார்வையாகக் கொண்ட இந்தப் பாழும் சமூகத்தின் பிடரியைப் பிடித்துத் திருப்பிச் சொல்லுகிறது கவிதை&#8230; ‘பார் இந்த நட்பை. பழகிக்கொள்ளலாம் இப்படியும்&#8230; பண்பட்ட மனங்களுக்கில்லை பாலியல் அச்சம். பெண்ணும் ஆணும் பேதமையின்றிப் பழகுவதே பண்பாட்டின் உச்சம்.</p>
<p style="text-align: justify;">
<em>‘எனக்குத் தெரிய / அண்ணன் தங்கை / என்று / ஆரம்பித்தவர்களே / கணவன் மனைவியாகவும் / ஆகியிருக்கிறார்கள் / ஆனாலும் சொல்கிறேன் / நட்பு என்பது மட்டும் / நம்மைபோல் / என்றும் / நட்பாகவே இருப்பதுதான்’.</em></p>
<p style="text-align: justify;">
அறிமுகம் காதலாகி, காதல் கல்யாணமாகி, கல்யாணம், “நான் கொடுத்தது இவ்வளவு நீ தந்தது எவ்வளவு?’ என்று காலத்தின் போக்கில் கணிதமாகி, இல்லறம் இளைத்துச் சுருங்கிப் போகுமெனில் திருமணம் என்பது திருந்தா மனங்களின் சேர்க்கையா என எண்ணத் தோன்றும். நட்பு மட்டுந்தான் நட்பின் பொருட்டு விரும்பி அரும்பி நட்பாகவே மொட்டவிழ்ந்து மலர்ந்து நட்பாகவே காயாகிக் கனிந்து நட்பாகவே, கடைத்தேறும் காலம்வரை கனன்று கொண்டிருக்கும்.</p>
<p style="text-align: justify;">
<em>‘நீ / நிருபித்த / பெண்மையிலருந்து / வாய்த்தது / நான் / மதிக்கும் / ஆண்மை.’</em></p>
<p style="text-align: justify;">
ஆண் என்றும் பெண் என்றும் அடையாளங்களைக் கழிவறைகளின் கதவுகளுக்குக் கொடுத்துவிட்டு நான் என்றும் நீ என்றும் நட்பென்பது நமதென்றும் ஆத்மாவின் இராகங்களை மீட்டிக்கொண்டு நுட்பமான இந்த உறவுக்குக் கவிதைத் தகுதி கொடுத்த கவிஞனைப் பாராட்ட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">
<em>‘என் துணைவியும் / உன் / கணவரும் / கேட்கும்படி / நம் / பழைய மடல்களையெல்லாம் / படித்துப்பார்க்க / ஒரு மழை தொடங்கும் / நாள் / வேண்டும்.’</em></p>
<p style="text-align: justify;">
இல்லற உறவு என்பது தகிக்கும் உடல் தணலுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொள்வது. அதில் சந்தேகத்தையும் பொறாமையையும் தருவித்துக் கொண்டால் உள்ளம் ஏது? உறவு ஏது? எல்லாமே தணலுக்குத் தீனியாகிவிடும்.</p>
<p style="text-align: justify;">
மனைவியின் நண்பனையும் கணவனின் தோழியையும் நேசிக்கும் மனம் வாய்த்தால், உண்மை அன்பின் நேர்மை அதிலிருந்தால், ‘வாழ்வே’ உடலை மீறி வாழும் உன்னதமாகி விடும். அன்பை மட்டுமே பொழியும் மழையாகிவிடும்.</p>
<p style="text-align: justify;">
<em>‘கனவில்கூட / என்னைக் / கிள்ளிப் / பார்க்கும் இந்தச் / சுரப்பிகள் / உன்னைக் / கண்டதும் எப்படி / இவ்வளவு / இயல்பாய்த் / தூங்கிவிடுகின்றன.’</em></p>
<p style="text-align: justify;">
ஆண் பெண் உறவில் அரிதாரம் பூசிக்கொண்டு அலங்காரமாய்ப் பவனிவரும் ‘காதல்’ என்பதினுள் கூரிய நகங்களும் கோரைப் பற்களுமாய்ப் பதுங்கியே இருக்கும் புலன்களின் வேட்கை. அங்க அடையாளங்களைப் புறக்கணித்து அம்மணக் குழவியாய் அகலக் கைவிரித்து அழகாய் ஓடிவரும் ‘நட்பு’ ஒன்றுதான் அன்பின் பரிமாணங்களிலேயே ஆழமானதும் ஆத்மார்த்தமானதும் கூட.</p>
<p style="text-align: justify;">
காமம் அற்ற காதல் தானே ‘நட்பு’ என்பது!</p>
<p style="text-align: justify;">
<strong>அன்புடன்,</strong><br />
<strong> மா. சண்முகசிவா</strong><br />
<strong>10.7.1999</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://shanmugasiva.vallinam.com.my/?feed=rss2&#038;p=115</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>என்னடா செய்வீங்க</title>
		<link>http://shanmugasiva.vallinam.com.my/?p=112</link>
		<comments>http://shanmugasiva.vallinam.com.my/?p=112#comments</comments>
		<pubDate>Sun, 18 Mar 2012 05:31:02 +0000</pubDate>
		<dc:creator>மா. சண்முகசிவா</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://shanmugasiva.vallinam.com.my/?p=112</guid>
		<description><![CDATA[<p>முனீஸ்வர சாமி நெனவு தெரிஞ்ச நாளா எங்க குடும்பமே கும்பிட்டு வர்ற எங்க குலசாமி சாம்பிராணி புகையில முண்டாசு, முறுக்கிய மீச கையில அருவா கம்பீரமா இருக்கும் எங்க காவல் தெய்வம்</p> <p>துடியான தெய்வம்னு தாத்தா சொல்வாரு காய்ச்சல்ல கிடந்த என்ன காப்பாத்துனது இந்த ஐயனாருனு அப்பத்தா சொல்லும் அடிக்கடி கடப்பாறையில அவர இடிச்சி கோயில தரமட்டமாக்கி லோரியில தூக்கிப்போட்டு போனான்ங்க அவுனுங்க “எங்க கடவுள காப்பாத்துங்களே”னு கதறுனா என் தங்கச்சி அன்னிக்கு தொலைஞ்சு போன [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><em>முனீஸ்வர சாமி</em><br />
<em>நெனவு தெரிஞ்ச நாளா</em><br />
<em>எங்க குடும்பமே</em><br />
<em>கும்பிட்டு வர்ற</em><br />
<em>எங்க குலசாமி</em><br />
<em>சாம்பிராணி புகையில</em><br />
<em>முண்டாசு, முறுக்கிய மீச</em><br />
<em>கையில அருவா</em><br />
<em>கம்பீரமா இருக்கும்</em><br />
<em>எங்க காவல் தெய்வம்</em></p>
<p><em><span id="more-112"></span></em><em>துடியான தெய்வம்னு</em><br />
<em>தாத்தா சொல்வாரு</em><br />
<em>காய்ச்சல்ல கிடந்த என்ன</em><br />
<em>காப்பாத்துனது இந்த ஐயனாருனு</em><br />
<em>அப்பத்தா சொல்லும் அடிக்கடி</em><br />
<em>கடப்பாறையில அவர இடிச்சி</em><br />
<em>கோயில தரமட்டமாக்கி</em><br />
<em>லோரியில தூக்கிப்போட்டு</em><br />
<em>போனான்ங்க அவுனுங்க</em><br />
<em>“எங்க கடவுள காப்பாத்துங்களே”னு</em><br />
<em>கதறுனா என் தங்கச்சி</em><br />
<em>அன்னிக்கு தொலைஞ்சு போன சாமி</em><br />
<em>இன்னிக்கு வந்தாரு</em></p>
<p><em>தண்ணி அடிச்சானுங்க</em><br />
<em>சுத்தி புகையா கெளம்புச்சி</em><br />
<em>எல்லோரும் ஓடுனாங்க</em><br />
<em>நா ஓடல&#8230;</em><br />
<em>முண்டாசு, முறுக்கிய மீச</em><br />
<em>கையில அருவா</em><br />
<em>முனீஸ்வரசாமி இப்ப</em><br />
<em>எனக்குள்ள</em><br />
<em>“டேய்ய் இப்ப வாங்கடா&#8230;</em><br />
<em>என்னடா செய்வீங்க”</em><br />
<strong>-பத்தாங்கட்டை பத்துமலை</strong></p>
<p><strong>(மா.சண்முகசிவா)<br />
</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://shanmugasiva.vallinam.com.my/?feed=rss2&#038;p=112</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜீவானந்தன் சிறுகதை தொகுதிக்காக 1994ல் எழுதிய கருத்துரை&#8230;</title>
		<link>http://shanmugasiva.vallinam.com.my/?p=109</link>
		<comments>http://shanmugasiva.vallinam.com.my/?p=109#comments</comments>
		<pubDate>Sun, 18 Mar 2012 05:23:55 +0000</pubDate>
		<dc:creator>மா. சண்முகசிவா</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://shanmugasiva.vallinam.com.my/?p=109</guid>
		<description><![CDATA[<p style="text-align: justify;">அன்பு ஜீவா, குறுந்தாடியும் குறுநகையுமாய், தலைநிறந்த கேசங்களோடு பழுப்பேறிய ‘நேசனின்’ தாள்களில் புகைப்படமாய்&#8230; நீங்களும் உங்களின் கதைகளுமாய்&#8230; பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன், அறிந்து கொண்டவை எவ்வளவோ&#8230; இனி அறியக் கிடப்பவை எவ்வளவோ&#8230; நிச்சயமாக நான் எழுதவேண்டியவை இன்னும் எவ்வளவோ&#8230; இன்னும் எவ்வளவோ என நீங்களும் உங்கள் பேனாவுமாய்&#8230;</p> <p style="text-align: justify;"> ஆழத்தில் தகித்து எரியும் பாலுணர்வின் வேட்கை, அகத்தினுள் புழுங்கித் தவித்த ‘அந்த’ப் பருவ வயதின் உக்ரமான வெக்கை, இவை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">அன்பு ஜீவா,<br />
குறுந்தாடியும் குறுநகையுமாய், தலைநிறந்த கேசங்களோடு பழுப்பேறிய ‘நேசனின்’ தாள்களில் புகைப்படமாய்&#8230; நீங்களும் உங்களின் கதைகளுமாய்&#8230; பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன், அறிந்து கொண்டவை எவ்வளவோ&#8230; இனி அறியக் கிடப்பவை எவ்வளவோ&#8230; நிச்சயமாக நான் எழுதவேண்டியவை இன்னும் எவ்வளவோ&#8230; இன்னும் எவ்வளவோ என நீங்களும் உங்கள் பேனாவுமாய்&#8230;</p>
<p style="text-align: justify;"><span id="more-109"></span><br />
ஆழத்தில் தகித்து எரியும் பாலுணர்வின் வேட்கை, அகத்தினுள் புழுங்கித் தவித்த ‘அந்த’ப் பருவ வயதின் உக்ரமான வெக்கை, இவை வடிகால் தேடி sublimation உருமாறிக் கவிதையாய், கதையாய், எழுத்தாய் உருகி ஆறு பெருக்கெடுக்க, நீங்களும் உங்களின் உணர்வுகளுமாய்&#8230;</p>
<p style="text-align: justify;">
இளமையோடும் அந்த இளமைக்கே உரிய வேகத்துடன், கெண்டைக் கால் ஆடுதசையின் முறுக்கேறிய நார்கள் ஆக்ரோஷமான பந்து எத்தலின் பின்னும், இன்னும் இன்னும் என்று குதித்த வண்ணம், நீங்களும் உங்களின் எண்ணங்களுமாய்&#8230;</p>
<p style="text-align: justify;">
புரிந்ததுபோன்றும், ஆனால் முழுதுமாய்ப் புரியாதது போன்றும் நடு மயக்கத்தில், விடிந்ததும் விடியாததும் போன்ற நடுச் சாம்பல் கருக்கலில் மனம் மையம் கொண்டு, அநத நேரத்து மனப்பதிவுகளை அந்தப் பின்னணியில், படைப்பாளர் மூலம் நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ள எத்தனிக்கும் முயற்சியில், நீங்களும் உங்களின் ‘அந்தக் காலமுமாய்&#8230;’ இக் கதைகளின் வழி நான் படிக்கும் மிகவும் சுவாரஸ்யமான விஷயம்&#8230; நீங்கள் தான். படைப்பைப் புறந்தள்ளிவிட்டுப் படைப்பாளியைப் பார்ப்பது அந்தப் படைப்புகளுக்குச் செய்யும் நியாயமாகது என்பீர்கள்.</p>
<p style="text-align: justify;">
தவறு.</p>
<p style="text-align: justify;">
படைப்பைப் புறந்தள்ளவில்லை.<br />
அப்படைப்பினூடே, எழுத்துகளை ஊடுருவி எழுதியவனைப் பார்ப்பது, கலையின் வழியே கலைஞனைக் காண்பது, ஆக்கத்திற்கும் ஆக்கியவனுக்கும் செய்யும் கௌரவமாகும். இந்தப் பார்வை, மனிதனுள் நுழைந்து அவன் மனதைத் தொட்டுப்பார்க்க எத்தனிக்கும் பார்வை. அதன் உன்னதங்களில் மெய்சிலிர்த்து, பெருமைகளில் பெருமிதம் கொண்டு, சிறுமைகளில் சீற்றமும் கொள்ளும் தேவை.</p>
<p style="text-align: justify;">
இப்பார்வையின் மூலமே என்னால் அந்த எழுத்துகளில் எழுதிய ஜீவாவையும் அவர் எழுத்துக்களையும், தொண்ணூறுகளில் நானறிந்த ஜீவாவையும் அவர்தம் சிந்தனைகளையும் வெவ்வேறு தளங்களில் பார்க்கமுடிகிறது. இந்தக் கால இடைவெளியை மனத்தில் நிறுத்திய இந்தக் கதைகளையும் தங்களையும் நானும் வாசகர்களும் பார்க்க வேண்டியுள்ளது. மீண்டும் மீண்டும் உங்களிடம் எத்தனை முறை கேட்டிருப்பேனே ஜீவா&#8230; பத்தாம் பர்சுந்தையின் பால்மரச் சருகுகளின் மத்தியில் எப்படி ஒரு ரோஜாச் செடி வளர்ந்து முளைத்தது என்று.</p>
<p style="text-align: justify;">
யார் அதை விதைத்தார்கள், அதன் ஆரம்பம் எப்படி நிகழ்ந்தது, அதன் மூலம் எது, அந்த வளமான வரிகள் எழுதி வைக்கப்பட்ட அந்த முதல் புள்ளி யாரால் எங்ஙனம் வைக்கப்பட்டது&#8230; அன்றைய வாழ்வின் நெருக்கடியில் உங்களுக்கும் உங்களைப் போன்றோர்களுக்கும், முற்றிலும் சாதகமற்ற சூழலில், இந்த இலக்கியத் தேடல், தாகம், ஏன் எப்படி ஏற்பட்டது என்று எத்தனை முறை கேட்டிருப்பேன். விடைகளை நானும் நீங்களும் இன்னமும் தேடிக் கொண்டுதானிருக்கிறோம். எண்பதுகளின் தொடக்கத்தில், கவிதைக் களத்தில் ‘மரபும் புதுக்கவிதையும்’ நடத்திச் சென்ற போராட்டத்தில் நாமிருவரும் பார்வையாளர்களாக அறிமுகமானோம்.</p>
<p style="text-align: justify;">
இரண்டையும் புரிந்துகொண்ட நீங்கள் அந்தக் கயிற்றில் லாவகமாக நடந்தீர்கள். மரபு வெல்வதே மரபாகிவிட்ட அந்தக் களத்தில் நான் அன்னியமானேன். பின் நண்பர் திரு. சாமிமூர்த்தியுடன் நானும் நீங்களும் சந்தித்து, இலக்கியம் பற்றி ஒரே தளத்தில், ஒரு முனைப்பாகச் சிந்தித்து, தீர்க்கமான கருத்துக்களை, நேரங்களை, நூல்களைப் பறிமாறிக்கொண்டு பயணித்த அந்தக் காலங்களில்தான், அந்த ‘விபத்து’ உங்களுக்கு நிகழ்ந்தது. தெரிந்தோ தெரியாமலோ க. நா. சுப்பிரமணியம், ரஃமான், வெங்கடசாமிநாதன், கைலாசபதி, சிவதம்பி, தமிழவன், கேசவன், ஞானி என்னும் அந்த விமர்சன, திறனாய்வுக் கூட்டத்தினுள் தூக்கி எறியப்பட்டீர்கள்.</p>
<p style="text-align: justify;">
படைப்பிலக்கிய மனதோடும் இவர்களின் திறனாய்வுக் கொள்கைகளோடும் நீங்கள் போராட்டம் நடத்த, நடத்த&#8230; உங்களின் படைப்புலகம், படைப்பில் மனவுலகம் தன்னைச் சுருக்கிக்கொண்டு, உங்களின் அறிவுலகம் ஆய்வியலில் விரியத்தொடங்கி, வியாபித்து உங்களைத் தன்னோடு ஆகர்ஷ்த்திக்கொண்டது. இன்னும் ஈரம் காயாத உங்களின் இலக்கிய விளைநிலத்தில் இவர்களின் விமர்சனச் சக்கரங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் ஆழ்த்திய, இலக்கியக் கொள்கை கோட்பாடுகள் விதிகளை நிர்ணயித்துக் காட்டி விழி உருட்ட&#8230; உங்களின் படைப் புலகம், படைப்பில் மனவுலகம் உறைந்து போய்விட்டது. மறுபக்கம் பகுப்பாயும் ஆய்வு மனம் தன்னை அடையாளம் கண்டுகொண்டது.</p>
<p style="text-align: justify;">
இதுவும் ஒரு பரிணாமம்தான்.<br />
மனத்தின் வேறொரு பரிமாணமும்கூட. ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்றின் தேக்கம் தேவைப்படுகிறது. ஒரு மேடு உருவாக ஒரு பள்ளம் தோண்ட வேண்டியுள்ளதே! உங்களின் ‘படைப்புலகம்’ கூட்டுப் புழுவின் “குளிர் உறைநிலைப்” பருவத்தில் இருந்தது போலும்.</p>
<p style="text-align: justify;">
நம் வட்டம் திரு. கந்தசாமி, திரு. ரெ. ச., திரு சோதிநாதன் என்றும் ‘அகம்’ என்றும் விரிவடையப் படைப்பிலக்கியம் உங்களை ஒரு எதிர்ப்பார்ப்புகளோடு பார்க்கிறது. நாம் தமிழ்நாட்டுக்கு அப்பால், தமிழ் வளர்க்கும் ஒரு பாரம்பரியத்தின் கூறுகளாய், சங்ககாலம் தொட்டு வளரும் இந்தத் தொன்மையான தமிழ் மரபின், மாபெரும் சங்கிலியின் தொடரும் கண்ணிகளாய் நம் மனம் தரிசனம் கொள்ளும்போது, இரண்டாயிரம் ஆண்டுகால இலக்கிய வரலாற்றை நம்முள் செறித்துக் கொண்டவாறே, கடந்து வந்த பின்புலத்தைப் புரிந்துகொண்டபோது, ‘வீர்யம்’ கொள்ளும்போது, பெருமிதம் கொள்கிறோம்.</p>
<p style="text-align: justify;">
இந்தப் பெருமிதம் வெறும் தற்புகழ்ச்சியாய் ஆகிவிடாமல் செயலாக்கம் மிக்க படைப்புகளாய், கவிதைகளாய், கதைகளாய், கட்டுரைகளாய் வடிவம் பெறவேண்டும். இந்நாட்டின் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் கேள்விகளோடு நம்மை எதிர்கொள்ளும் போது, நாமும் அதற்கான பதில்களோடு அதை வரவேற்போம்!</p>
<p><strong>ஜூன், 1994 </strong><br />
<strong>அன்புடன்,</strong><br />
<strong>மா. சண்முக சிவா</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://shanmugasiva.vallinam.com.my/?feed=rss2&#038;p=109</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மையம்</title>
		<link>http://shanmugasiva.vallinam.com.my/?p=95</link>
		<comments>http://shanmugasiva.vallinam.com.my/?p=95#comments</comments>
		<pubDate>Sat, 11 Feb 2012 14:01:44 +0000</pubDate>
		<dc:creator>மா. சண்முகசிவா</dc:creator>
				<category><![CDATA[சிறுகதை]]></category>

		<guid isPermaLink="false">http://shanmugasiva.vallinam.com.my/?p=95</guid>
		<description><![CDATA[<p style="text-align: justify;">காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து விட்டு சமையலை ஆரம்பிப்பது என்பது, அவன் விழிக்கும்போது ஈரத்தலையில் கூந்தல் தழையத் தழைய, அந்த சந்தன முகத்தில் சற்றுக் கூடுதலாக மஞ்சளும், நெற்றியில் விபூதிக் கீற்றுடன் குங்குமமும். லேசான சிரிப்புடன் “ம்ம் எந்திரிங்க&#8230; நேரமாச்சு” என்று சொல்ல வேண்டும் என்பதும் அவள் தனக்காக விதித்துக் கொண்ட நியதி. இந்த ஒரு வருடமாக அதைச் செய்ய அவள் தவறவிட்டதே இல்லை; அவன் அங்கு இல்லாத காலைப் பொழுதுகளைத் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து விட்டு சமையலை ஆரம்பிப்பது என்பது, அவன் விழிக்கும்போது ஈரத்தலையில் கூந்தல் தழையத் தழைய, அந்த சந்தன முகத்தில் சற்றுக் கூடுதலாக மஞ்சளும், நெற்றியில் விபூதிக் கீற்றுடன் குங்குமமும். லேசான சிரிப்புடன் “ம்ம் எந்திரிங்க&#8230; நேரமாச்சு” என்று சொல்ல வேண்டும் என்பதும் அவள் தனக்காக விதித்துக் கொண்ட நியதி. இந்த ஒரு வருடமாக அதைச் செய்ய அவள் தவறவிட்டதே இல்லை; அவன் அங்கு இல்லாத காலைப் பொழுதுகளைத் தவிர. ஆனால் ஆறுமணி வாக்கில் அவன் புரண்டு படுக்கையில், கையை வீசிப் போடுகையில் அவளின் இடத்தில் அவள் இல்லாதிருப்பதால் அவனும் விழித்துக் கொள்ளலாம், ஏதாவது எரிச்சலோடு முணங்கி விட்டு புரண்டு படுத்துக் கொண்டு மீண்டும் உறங்கிப் போகலாம், மடார் மடார் என்று தண்ணீர் ஊற்றி அவள் குளிக்கும் சப்தத்தில் இன்னும் கொஞ்ச நேரத்தில் சோப்பும் மஞ்சளும் கலந்த நறுமணத்தோடு குறுக்காக மட்டும் கட்டியிருக்கும் ஈரச்சேலையோடு வனப்பாக அவள் வரலாம் எனக் காத்திருந்துவிட்டு எழலாம்.<br />
<span id="more-95"></span><br />
அப்போதைய அவனுடைய குறும்புகளில் அவளுக்கு பொய்மையான கோபம் இருக்கும். அவன் தன்னை இனி என்றைக்குமே நிரந்தரமான ஒன்று என்றாக இருந்துவிடக்கூடாதா என்ற ஏக்கமும் இருக்கும். இது வெறும் உடல் வசீகரிப்பு மட்டும்தானா. இதற்கும் அப்பால் உள்ளத்தில் இவன் என்னுடன் இருக்கும்படியான ‘உள்ள ஆகர்ஷிப்பு’ தனக்கு இல்லையோ என்ற சோகமும் கூடவே படரும்.</p>
<p style="text-align: justify;">குளித்துவிட்டு வரும் அவனின் அடர்ந்த சுருண்ட கேசங்களை துவட்டி விட வேண்டும் போல் தோன்றும். அப்படித் துவட்டிவிடும்போது மார்போடு அவன் தலையை சேர்த்து சின்னக் குழந்தையை அணைத்துக் கொள்வதுபோல் அணைத்து உச்சிமுகர வேண்டும் என்ற கற்பனை அவளுள் தழைக்கும். அவனாக அப்படிச் செய்யச் சொன்னதில்லையே என்று மறுகணம் ஏங்கும்.</p>
<p style="text-align: justify;">அந்த காலைப்பொழுதுக்கெ உள்ள அவளின் மலர்ச்சியின் ஊடே, குளித்துவிட்டு கலைத்தாலும் இன்னும் முற்றிலும் போகாத தூக்கம், இன்னும் கொஞ்சம் இதோ இருக்கிறேன் என்பதுபோல் அவன் பார்வையில் தேங்கி நிற்கும், பள்ளிக்கூடத்திற்கு போக தயங்கி நிற்கும் பிள்ளை போல.</p>
<p style="text-align: justify;">அந்த அழகான, அமைதியான விடியலை விரும்பாதவன் போல திடீரென்று அவன் வேலைக்குக் கிளம்பும் அவசரத்தை வரவழைத்துக் கொள்வான். சட்டையை எடுத்து மாட்டிக் கொள்வதில் ஒரு வேகம் இருக்கும். அடிக்கடி மணியை பார்த்துக் கொள்வதில் ஒரு பரபரப்பு இருக்கும். அவள் கேட்கப் போகும் கேள்வியை சொல்லாமலே தவிர்க்க வேண்டிச் சாப்பிடும்போதும் கூட முன்கூட்டியே எச்சரிக்கையுடன் அவன் குரலின் தொனியில் ஒருவித எரிச்சல் தருவிக்கப்படும். அது அந்த காலையின் எல்லா சந்தோஷத்தையும் ஒரே மடக்கில் விழுங்கி விடுவதாக இருக்கும்.</p>
<p style="text-align: justify;">“இங்கெல்லாம் காலை ரொட்டிதான் எல்லாரும் சாப்பிட்டுட்டு வேலைக்கு ஓடுறாங்க.. நீ என்னானா இட்லி, தோசை, சாம்பாருனு போட்டு உயிரவாங்குற&#8230; ருசியத்தான் இருக்கு&#8230; ஆனா, பத்து பதினோரு மணிக்கெல்லாம் தூக்கம் வருதே&#8230;” முன்பெல்லாம் சிரித்துக் கொண்டே இதைச் சொன்னவன் இப்பொது கொஞ்சம் கோபமாகச் சிடுசிடுவெனச் சொல்வது, அல்லது அந்தக் கேள்வி நிறைந்து வழியும் அவளது விழிகளை தவிர்க்க என்பதும் அவளுக்கும் அவனுக்கும் பரஸ்பரம் தெரிந்ததுதான்.</p>
<p style="text-align: justify;">ஆனாலும், அவனுக்கும் இனி அவள் கேட்கமாட்டாள் என்பது தீர்க்கமாகத் தெரியும். அவளுக்கும் அப்படி ஒன்று நடந்துவிட்ட பிறகு இனிக் கேள்வி கேட்பதில் அர்த்தமில்லை என்பதும் தெரியும். இருந்தாலும் அவன் தன் கால்களுக்கு ஷு மாட்டிக்கொள்ளும் அந்தக் கணங்கள், அந்த வீட்டைவிட்டு வெளியேற இன்னும் சில வினாடிகளே உள்ளன என்ற அந்தத் தருணங்கள் “கேள்வி நேரம்” என்பது போல் இத்தனை நாட்களாக ஆகிவிட்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">சில நாட்களுக்கு முன்னம் வரை, அவளுக்கு உண்மை தெரியும் வரை, ஆறுமுகம் சம்சாரம் கோமதியக்கா இவளிடம் அதைக் கூறும் வரை, இவளும் தன்னுள் அதனைப் புதைத்து வைத்திருந்து புழுங்கித் தவித்து ஒரு நாள் இந்த மாதிரியான ஒரு நேரத்தி கேட்டு, பதிலாக பளீரென்ற ஒரு அறையும், இந்த மாதிரிக் கண்டவங்க சொல்றதலாம் நம்பி என்னைக் கேள்வி கேட்டா&#8230; அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்.. ஆமா.. சொல்லிட்டேன்&#8230;” என்று படாரென்று கதவை அடித்துச் சாத்திவிட்டுச் சென்றவரை, இந்த நேரம் சகஜமான நேரமாக, இவ்வளவு உணர்ச்சிகரமான, சங்கடமான அந்த வேதனை நிறைந்த நிகழ்ச்சியோடு சேர்த்து எண்ணக்கூடிய நேரமாக இல்லாத, வெறுமே விஷயம் தெரிந்து கொள்ளும் நேரமாக, “இன்னிக்கு ராத்திரி டூட்டியா” என்று அந்த டூட்டிக்கு ஒரு அர்த்தம் மட்டும்தான் இருக்க முடியும் என்ற அப்பாவித்தனமான எண்ணத்தோடு கேட்க, “ஆமா.. கோலாலம்பூருக்கு கேஸ் எடுத்துகிட்டு போவணும்&#8230; அங்கே ராவுக்குத் தங்கிடுவேன்.. நாளைக்குச் சாய்ந்தரம் தான் வருவேன்.. ஒண்டியா இருக்கே&#8230; கதவ பூட்டிக்க&#8230;” என்பதாக இருக்கும். அவளுக்கு அது அவன் வேலை சம்பந்தப்பட்ட செய்தியாகவும், அவனுக்கு அது அவள் மனமறிந்து சொல்லும் சாமர்த்தியமான பொய்யாகவும் இருக்கும்.</p>
<p style="text-align: justify;">மிகச் சாதாணமாக அந்த நேரம் கடந்து செல்ல, அவள் ரேடியோவைத் தட்டிவிட்டு அதன் பாடல் வரிகளை தானும் மென்மையாகப் பாடிக் கொண்டே தன்வீட்டு வேலைகளில் கரைந்து போவாள். ஆனால் இப்பொழுதெல்லாம் அவ்வளவு சாதாரணமாக அந்த பொழுது கழியாமல் தன்னைப் பற்றியும் தன் வாழ்வு பற்றியுமான ஒரு நம்பிக்கையற்ற காலமாக, அவளை ஏதோ ஒரு விளிம்பில் நிறுத்தி, ஒரு உயரமான கட்டிடத்தின் உச்சியில் நின்று கீழே பார்க்கும் ஒரு இனம் புரியாத பீதியுடன் அவளை அச்சுறுத்துகின்றது.</p>
<p style="text-align: justify;">பள்ளியில் படிக்கும் போதும், படித்துவிட்டு வீட்டில் கல்யாணத்துக்குக் காத்திருந்த நாட்களிலும், அது குறித்த குழப்பமான காலங்களில் இருந்த நம்பிக்கைக்கூட இப்போது தன்னிடம் இல்லாதது வேதனையாக இருந்தது.  முன்பின் தெரியாத ஒருத்தரிடம் கழுத்தை நீட்டி, உடலை ஒப்படைத்து, வாழ்வைச் சமர்பித்து வாழப்போகிறோம் என்ற எண்ணத்தில் ஒட்டியிருந்த அச்சத்தோடு, அந்த ஒருத்தர் எப்படித் தன்னை எதிர்கொண்டு தன் வாழ்வில் என்னையும் ஒரு பாதியாக்கி, தனக்கு அவன் எல்லாமுமாகி வாழப்போகிறோம் என்பதில் இருந்த அடர்த்தியான அந்த, வாழ்க்கைப் பற்றி இனம் புரியாத அந்த பருவத்தில் கூட எப்படியோ உள்ளுக்குள் ஏற்பட்டுவிட்ட ஒரு நம்பிக்கையோடிணைந்த எதிர்பார்ப்பு, நிச்சயம் எல்லாம் நல்லாதான் அமையும் என்பதில் இருந்த குருட்டாம் போக்கான பிடிப்பு, வாழ்க்கையில் வாழ்வதில் இருந்த முனைப்பு&#8230; எல்லாமே மெல்ல&#8230; மெல்லக் கழண்டு.. உருவி&#8230; சுருக்கிச் சென்றுவிடுமோ என்ற பயம்&#8230; பெண்மையின் இந்த பயமும் பலஹீனமும் அதற்கே உரித்தானதா&#8230; அதன் இயல்பா&#8230; இல்லை காலங்காலமாக அதனுள் இதனை விதைத்து&#8230; அது வேரூன்றி வளர வேண்டுமென்று பாத்தி கட்டி, நீருற்றி, பத்திரமாகப் பாதுகாத்து, கவனமாக அமைத்துக் கொடுக்கப்பட்டதா?</p>
<p style="text-align: justify;">அவன் போன பின்பு சோபாவில் அமர்ந்திருந்தவள் சில நேரம் சிந்தனையே அற்று இருக்க எண்ணினாள். ரேடியோவைத் திருகிவிட்டுத் துவைத்து உலர்ந்து போயிருந்த துணிகளை எடுத்து மடிக்க ஆரம்பித்தாள்.</p>
<p style="text-align: justify;">ஒலி அலை ஆறில் ஒரு பெண் சமையல் குறிப்பு ஒன்றைச் சொல்லப் போவதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருந்தாள். நேயர்கள் பேனா, பேப்பருடன் தயாராகும்படி வலியுறுத்தினாள். எழுதுவதற்கு தோதாக நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக உரித்து விரித்து சொன்னாள்.</p>
<p style="text-align: justify;">கணவரின் ருசி அறிந்து அந்தப் பதார்த்தத்தைத் தயார் செய்து அவருக்கு கொடுத்து மகிழும்படி கேட்டுக் கொண்டாள். பெண்களின் அழகுக் குறிப்பு பற்றி ஒப்பனை கலைஞர் ஒருவரை மிகவும் சிரத்தையுடன் பேட்டி கண்டாள். அந்த வானொலிப் பெண் தன் நேயர்களை இப்படியாகத் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்டு தன் கணவனின் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சி தரும்படி மன்றாடிவிட்டு “சகோதரிகளே” என்ற சொந்தத்தோடு பாசமுடன் விடைபெற்றாள்.</p>
<p style="text-align: justify;">ஆணின் ருசிக்கும், ரசனைக்கும் தங்களைப் பெண்கள் எப்படிச் சமைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியதான மகளிர் நேரம் முடிந்ததும் இவள் எழுந்து அரிசி களைந்து குக்கரில் போட்டுவிட்டு இனி காய்கறிக்காரி வந்தபின்தான் இன்றைக்கு என்ன குழம்பு, கூட்டு என்று தீர்மானிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டாள்.</p>
<p style="text-align: justify;">வாசலில் போஸ்ட்மேனின் மோட்டார் சைக்கிளின் சப்தம் கடந்து சென்று அவளுக்கு இன்று கடிதம் ஏதுமில்லை என்றது. கடிதம் வந்தாலும் அம்மா ஒரே கேள்வியைத் தான் வெவ்வேறு விதத்தில் கேட்டிருப்பாள். “ஏதும் உண்டாகலையா” “டாக்டரை போய் பார்த்தாயா” “இத்துடன் பிள்ளையாருக்கு உன் பெயருக்கும் மருமகன் பெயருக்கும் அர்ச்சனை செய்த விபூதி பிரசாதம் இருக்கு.. திருச்சி உச்சிமலை பிள்ளை மிகவும் சக்தி வாய்ந்தவர்.” என்கிற மாதிரி இருக்கும் அவளுடைய கடிதம்.</p>
<p style="text-align: justify;">அம்மாவுக்கு தன் அருமைந்த புதல்வியை பிடித்து ஒருத்தன் கையில் கொடுத்தாகிவிட்டது என்பதில் மனம் நிறைந்த திருப்திதான். இனி இந்த மகள் ஒரு பிள்ளை பெற்றுத் தந்து தன் பெண்மையை உலகுக்கு நிரூபிக்கும் வரை ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் மாணவனைப்போல் நிலை கொள்ளாது தவிப்பாள். பெண்களுக்கு இயற்கையால் விதிக்கப்பட்டு, மனிதர்களால் மார்க் போடப்படும் பரீட்சை இந்த மகப்பேறு. தேர்வு இருவர் எழுதியுள்ளதால் வெற்றியும் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். ஆனால், தோல்வி&#8230; பெண்ணுக்கு மட்டுமே உரித்தானதாகத் தீர்ப்பளிக்கப்படும் வினோதமான பரீட்சை இது.</p>
<p style="text-align: justify;">அம்மா இதில் அரை டஜன் பெற்று அமோகமாக தேறியவள். அப்பாவோடு இருபத்தைந்து வருடம் வாழ்ந்தவளிடம் இவ்வளவு எளிதில் உனக்கு எப்படி இது சாத்தியமாயிற்று என்று கேட்டால் என்ன சொல்வாள்? இந்தக் கேள்வி அம்மாவின் நாணத்தோடு கூடிய சிரிப்பையும், அந்த சிரிப்போடு கூடிய போலியான கோபத்தையும் ஒரு வினாடி காட்டி மறைத்தது. அவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.</p>
<p style="text-align: justify;">இந்த அப்பாவும் இவர் மாதிரி வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருப்பாரா? அப்படி வைத்திருந்தால் அம்மா அதை எப்படி எதிர் கொண்டிருப்பாள். சண்டை போட்டு வென்றிருப்பாளா? “எல்லா ஆம்பிளைகளும் இப்படித்தான், ஏன் அலட்டிக் கொள்ளனும். பிள்ளை குட்டினு வந்தபுறம் எல்லாம் சரியாயிடும்னு” சரணடைந்திருப்பாளா? நான் பார்த்த அம்மா பரம சாது. அவளுக்குக் கோபம் வந்தால் அழுவாள். சந்தோஷம் வந்தால் கணவனைப் பூஜிப்பாள். பூஜைக்குரிய தகுதியைப் பற்றியெல்லாம் அவள் சிந்தித்தவளில்லை. பூஜையை மட்டும் தவறாது செய்வதைப் பற்றி மட்டுமே சிந்தித்தவள். இந்த அம்மாகிட்ட இருந்து நான் எத கத்துக்கிட்டேன். “ராமன் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தி”ன்னு அடிக்கடி சொன்னதுதான் ஞாபகம் இருக்கு. ஆனால், அவன் ராமனாக இல்லாதிருந்தால் எது அயோத்தினு சொல்லலையே.</p>
<p style="text-align: justify;">ஆம்புலன்ஸ் டிரைவர் ஆறுமுகம் சம்சாரம் கோமதியக்கா சொல்லித்தான் தெரிஞ்சது. ஒரு தாயின் வாஞ்சையோடு நிதானமாகச் சொன்னாள். “இந்தாப் பாரம்மா, சொல்ரேன்னு ரொம்ப வருத்தப்படாத&#8230; ஒன் புருஷனுக்கு அந்த கோலாலம்பூர் ஆஸ்பத்திரியில நர்ஸ் வேலை பார்க்கிற ஒருத்தருக்கும் ரொம்ப நாளா தொடர்பு&#8230; அவரு கேஸ் கொண்டு போரேன்னு  போய் தங்கிட்டு வரது அவளுக்காகத்தான். இல்லாட்டி ஒங்க வீட்டுக்காரரு ஒரு ஹெச்.ஏ. அவரு கோலாலம்பூர்ல தங்குரதுக்கு எந்த ஜோலியும் நியாயமும் இல்ல. உன் வீட்டுக்காரரு வண்டியிலேயே அந்த ராவே திரும்பிடலாம் பாரு&#8230; இது அறிஞ்ச ரகசியம்&#8230; பாவம் நீ சின்னப் பொண்ணு&#8230; ஊர்ல இருந்து ஒண்டியா வந்திருக்கே&#8230;” அவளுக்கு காலுக்கு கீழ் தரைதிறந்து தான் உள்ளே போய்விட மாட்டோமா என்றிருந்தது.</p>
<p style="text-align: justify;">அடுத்த நாளே இது உண்மையாக இருக்க கூடாது என்று கடவுளிடம் வரமெல்லாம் வாங்கிக் கொண்டு, அவன் வேலைக்குப் புறப்படும்முன் கேட்டுவிட்டாள். அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அவள் கன்னத்தில் விழுந்த அறையைக் காட்டிலும் உள்ளத்தில் விழுந்த அந்த உண்மை நெஞ்சில் ஆழமாய் இருந்தது.</p>
<p style="text-align: justify;">மேற்போக்கான மறுப்பும் ஆத்திரமும் அவனைக் குற்றவாளியெனக் காட்டிக் கொடுத்தபோதிலும் அதைப்பற்றித் தீவிரமாக பேசித் தெரிந்துகொள்ள வேண்டும் எனத் தோன்றியும், கேட்கும் தைரியம் இல்லாமல் இருந்தாள். ஒருவேளை “ஆமா&#8230;அப்படித்தான்”ன்னு சொல்லிவிட்டால்,  ஒத்துக்கொண்டுவிட்டால் என்ன செய்வது. சிந்திக்கவே தைரியமில்லாமல், உண்மையைச் சந்திக்க வலுவில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குள் சிதைந்து போவதே அப்போதைக்கு சௌகரியமாகப்பட்டது எத்தனை நாளைக்கு?</p>
<p style="text-align: justify;">இனிச் சகிப்பதற்கில்லை என்றாகிவிட்டபோதில் ஒரு மழைநாளின் சாயங்காலப் பொழுதில், இரவின் எதிர்பார்ப்புக்கள் அடங்கிய பார்வைகளில், லாபம் கருதிய கடைக்காரரின் வரவழைக்கப்பட்ட சிரிப்போடு அவன் அவளை நெருங்கிய தருணத்தில் மெல்ல மீண்டும் ஒருமுறை அதைப்பற்றி கேட்டுவிட்டாள். அதற்கு அவன் சமாதானமாகவோ சமரசமாகவோ எதுவும் சொல்லக்கூடியவனாக இல்லை. அவனுக்கு “அது” நிராகரிக்கப்பட்ட நேரத்தில் அவன் பார்த்த அந்தப் பார்வை அன்றைக்கு அவள் வாங்கிக் கொண்ட அறையின் மொத்த வலிமையுடன் அவளின் இதயத்தில் இறங்குவதாக இருந்தது.</p>
<p style="text-align: justify;">“இஷ்டம்னா இரு&#8230; கஷ்டம்னா போய்விடு” என்று சொல்லிவிட்டு சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு போய்விட்டான். இழப்பதற்கு ஒன்றுமில்லை, அப்படியே இழப்பதானாலும் பரவாயில்லை என்பதாக அவனது ஆண்மையின் ஆளுகை பிரகடனப்படுத்தியது போல் இருந்தது. வாழ்க்கை ஒரு கூர்மையான வளைவில் சடக்கென்று அவளைக் கீழே தள்ளிவிட்டுத் திரும்பிக்கூடப் பார்க்காமல் போவதுபோல் இருந்தது. இவ்வளவு நெருக்கத்திலும் தான் எவ்வளவு தூரத்தில் அவனிடம் தனிமைப்பட்டுப் போவதைத் திடீரென்று அவளால் உணர முடிந்தது.</p>
<p style="text-align: justify;">அவனுக்கு அவளின் தொடர்பு நீண்ட காலமாக இருந்ததென்றால் ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த நான் எதற்கு? பக்கத்தில் படுத்துக் கொள்ள, அவன் ருசியறிந்து பக்குவமாய்ச் சமைத்துப் பரிமாற, வீட்டைப் பெருக்கி சுத்தமாய் வைத்திருக்க, அவன் “அங்கே” போகாத நாட்களில் மாலைகளில் வீடு திரும்புகையில் அழகாய் அலங்கரித்துக் குளிர்ச்சியாய் அவன் களைப்பு, நீக்க இந்த மாதிரியான புறத் தேவைகளை பூர்த்தி செய்ய&#8230; இரவில் சுகிக்க&#8230; மையம் அவனாக இருக்கும் வரை தனது வாழ்க்கைச் சுழற்சியின் கதி இப்படியாகத்தான் இருக்கும். அந்த மையம் இருவரும் இனைந்த குடும்பமாகவும், அதன் சுழற்சியின் இயக்கம் இருவரின் ஆத்மார்த்தமான அன்பாகவும் இருக்க வேண்டும் என்பது ஒரு யதார்த்த உண்மையாக இருந்துவிடக் கூடாதா? ஏக்கம் நெஞ்சில் நிரம்பி விழிகளின் விளிம்பில் நீராய் கோர்த்து நின்றது.</p>
<p style="text-align: justify;">வாசலில் வேன் நிறுத்திய சப்தம் அவளை அழைத்தது. காய்கறிக்காரி வந்துவிட்டாள். அவள் வெளியே வந்து காய்கறிகளை நோட்டம் விட்டாள். பசுமையாகவும் புதியதாகவும் இருந்த அவைகளை வாங்குவதில் இன்று மனதுக்கு உற்சாகம் இல்லாது இருந்தது. இவளது பார்வை காய்கறிகளிடமிருந்து அதை விற்கும் அந்த சீனத்தியிடம் படர்ந்தது. அவள் இப்போது கொஞ்சம் தளர்ந்துவிட்டிருந்தாள். முன்பெல்லாம் அவள் தன் கணவனோடு வரும்போது வேறு மாதிரித் தோன்றினாள். சத்தமாகப் பேசுவாள் கொஞ்சம் அதிகமாகவே பேசுவதாய்த் தோன்றும். வாய்விட்டுச் சத்தமாகச் சிரிப்பாள். சிரித்துக் கொண்டே பேசுவதால் எச்சில் தெறிக்கும்.</p>
<p style="text-align: justify;">அவனும் அமைதியாக சிரித்த வண்ணமே இருப்பான். அவளது சத்தம், சாமர்த்தியம், எல்லாவற்றிலுமே அவனுக்கு சம்மதமும் கொஞ்சம் பெருமிதமும் இருப்பதாக தோன்றும். வேன் ஓட்டுவதும் காய்கறிகளை நிறுத்துக் கொடுப்பதும் தான் தனது வேலை என்றிருப்பான். பேரம் பேசுபவர்களிடம் பேரம் பேசுவது, விலைவாசி நிலைமைகளை அனாயாசமாக அலசுவது, “தௌகே’’ மொத்த வியாபாரிகளின் விலை, சில்லறை வியாபாரிகளின் விலை, நிகர லாபம், இதில் எதை எப்படிக் குறைக்க முடியும் என்பதெல்லாம் பற்றியதாக இருக்கும் அவள் பேச்சு, அவள் விலை சொல்லும் குரலின் தொனியில் இருந்தே வாங்குபவர்கள் கொள்ளத்தக்க வகையில் அவளால் பேச முடிந்திருந்தது ஆச்சரியம்தான். வாடிக்கையாளர்கள் பெண்களாக இருப்பதால் அவள்தான் அங்கே எல்லாருமே என்பதுபோல் தோன்றும், அவன் புற்று நோயில் போன வருடம் இறந்தபின், அவள்தான் வேன் ஓட்டி வருகிறாள். முன்புபோல் அவ்வளவு கலகலப்பாக இல்லைதான். முகமும் கூடத் திடீரென்று ஐந்தாறு வருடம் கூடி காட்சி தந்தது. இருந்தாலும் அவள் அவன் இல்லாத சோகத்தினின்றும் மீண்டு விட்டது போல் தோன்றுவது இவளுக்கு ஒரு நிம்மதியைத் தந்தது.</p>
<p style="text-align: justify;">அவளுக்கு பிள்ளைகள் உண்டா என்று இது வரையில் கேட்டதில்லை. இருந்திருந்தால் எப்போதாவது ஒரு நாளாவது, விடுமுறையிலாவது வேனில் வந்திருப்பார்கள் தானே. இப்போது வியாபாரம் முன்னைக் காட்டிலும் அதிகமாக நடப்பது போலிருக்கு.</p>
<p style="text-align: justify;">காய்கறி வாங்கத் தோன்றவில்லை. அவளையே, அவள் காய்கறிகளை விலை சொல்லி நிறுத்துப் பிளாஸ்டிக் பையில் போட்டும், காகித்ததில் சுற்றியும் கொடுத்து, காசு வாங்கிப் போடும் லாவகத்தையும் அதை அவள் ஒரு யந்திர கதியில் செய்வதையும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. இவளது பெருந்தொடைக்கும் மேல் இவள் அணிந்திருந்த கட்டையான கால்சட்டை, மார்பைப் பாதி மூடியிருந்த “டி” ஷெர்ட்டும், தனது உடம்பைப் பற்றி எள்ளளவும் எண்ணங்கொள்ளாத மிக இயல்பான மனப்பாங்கும், முழங்காலுக்கு கீழே விரிந்து நின்ற கருப்பு ரப்பர் பூட்சும், சிறு கொண்டையாய்த் தலைமுடியை இழுத்துச் சுற்றியிருந்த “ரப்பர்பேன்”டும் சற்றுக் குள்ளமாகத் தோன்றச் செய்யும் சரீர கனமும்&#8230; இவளது வாழ்க்கையின் மையம் எதுவாக இருக்கும். மையமும் இவளே&#8230; சுழற்சியும் இவளே தானோ?</p>
<p style="text-align: justify;">வேன் புறப்பட்டு போய்விட்டது.</p>
<p style="text-align: justify;">இன்னமும் அவள் வாசலில்தான் நின்று கொண்டிருந்தாள். பார்வை தொலைதூரத்தில், இன்ன தென்றில் என்றில்லாமல் எதையோ பார்த்துக் கொண்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">அன்று அவள் காய்கறி எதுவும் வாங்கவில்லை.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://shanmugasiva.vallinam.com.my/?feed=rss2&#038;p=95</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>திரைகடலோடி</title>
		<link>http://shanmugasiva.vallinam.com.my/?p=91</link>
		<comments>http://shanmugasiva.vallinam.com.my/?p=91#comments</comments>
		<pubDate>Sat, 11 Feb 2012 06:05:32 +0000</pubDate>
		<dc:creator>மா. சண்முகசிவா</dc:creator>
				<category><![CDATA[சிறுகதை]]></category>

		<guid isPermaLink="false">http://shanmugasiva.vallinam.com.my/?p=91</guid>
		<description><![CDATA[<p style="text-align: justify;">“இன்னிக்கு எப்படியும் ரெண்டுல ஒன்னு பார்த்தரணும்&#8230; ஆமா” மணிராசு தீர்மானித்துக் கொண்டான்.</p> <p style="text-align: justify;">“இன்னும் எத்தன நாளைக்கு இந்த வூர்ல இந்த சீரழிந்த பொழப்பு…”</p> <p style="text-align: justify;">மனமும் வாழ்வும் கசந்தது.</p> <p style="text-align: justify;">சிந்தனையைச் சற்று நிறுத்திவிட்டு சாலையைப் பார்த்தான்.</p> <p style="text-align: justify;">எதையுமே பொருட்படுத்தாது அசுர வேகத்தில் கடந்து செல்லும் வாகனங்களைப் பார்த்தான்.</p> <p style="text-align: justify;">சாலையைக் கடக்கும் போது இதில் ஏதாவது ஒன்று தன்னை மோதிக்கொன்றாலும் கேட்க [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">“இன்னிக்கு எப்படியும் ரெண்டுல ஒன்னு பார்த்தரணும்&#8230; ஆமா” மணிராசு தீர்மானித்துக் கொண்டான்.</p>
<p style="text-align: justify;">“இன்னும் எத்தன நாளைக்கு இந்த வூர்ல இந்த சீரழிந்த பொழப்பு…”</p>
<p style="text-align: justify;">மனமும் வாழ்வும் கசந்தது.</p>
<p style="text-align: justify;">சிந்தனையைச் சற்று நிறுத்திவிட்டு சாலையைப் பார்த்தான்.</p>
<p style="text-align: justify;">எதையுமே பொருட்படுத்தாது அசுர வேகத்தில் கடந்து செல்லும் வாகனங்களைப் பார்த்தான்.</p>
<p style="text-align: justify;"><span id="more-91"></span>சாலையைக் கடக்கும் போது இதில் ஏதாவது ஒன்று தன்னை மோதிக்கொன்றாலும் கேட்க நாதி இல்லை என்று தோன்றியது. அப்படியே மோதினாலும் பரவாயில்லை என்று கூட தோன்றியது. அடுத்தக் கணமே&#8230; “சே..சே.. என்ன நெனப்பு இது&#8230; வாழணும்&#8230; வாழ்ந்தே ஆகணும்&#8230; எனக்காக இல்லேனாலும் சரசுக்காகவாவது வாழ்ந்தே ஆகணும்&#8230; அவ வயித்துல வளர்ர என் பிள்ளைக்காக வாழ்ந்துதான் ஆகணும்&#8230;” என்று எண்ணிக்கொண்டான்.</p>
<p style="text-align: justify;">சரசு பற்றி எண்ணிய மாத்திரத்தில் மனதின் இறுக்கம் தளர்ந்து கசிந்தது.</p>
<p style="text-align: justify;">கழிவிரக்கத்தில் நெஞ்சுக்குழி அனலாய் தகித்தது.</p>
<p style="text-align: justify;">கண்களை துடைத்துக் கொண்டு நெடுஞ்சாலையைக் கடந்து ஓடினான்.</p>
<p style="text-align: justify;">ஹாரனை அலற அடித்துக்கொண்டு கடந்து சென்ற ஒரு லாரிக்காரன் முஷ்டியை உயர்த்தி திட்டினான்.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">போன கிழமை சுஹாய்மி நீட்டின பத்து வெள்ளியை மணிராசு வாங்கிக் கொள்ளவில்லை.</p>
<p style="text-align: justify;">“எனக்கு ஏழு மாசம் என் சம்பள பாக்கியை சேர்த்துக் கொடுத்துடுங்க துவான்&#8230; ஊருக்கு அனுப்பணும்&#8230; மனைவி கர்ப்பமா இருக்கா&#8230;” என்று அரைகுறை மொழியில் கெஞ்சாத குறையாக கேட்டுப் பார்த்தான்.</p>
<p style="text-align: justify;">சுஹாய்மி நிதானமான குரலில் புகை நடுவே சொன்னதை டிரைவர் குஞ்சு நாயர் மொழிபெயர்த்தான்.</p>
<p style="text-align: justify;">“இங்க பாரு&#8230; ஒன் சம்பளத்த எல்லாம் என் பாஸ் லிங்கம் வந்து வாங்கிட்டு போயிடுச்சு&#8230; நீ அவர்கிட்ட கேளு&#8230; நீ பாக்க பாவமா இருக்கே&#8230; அதனாலத்தான் துவான் அப்பப்ப அஞ்சு பத்த தர்ரதா சொல்லுது&#8230;”</p>
<p style="text-align: justify;">சுஹாய்மியின் காலை பிடிக்காத குறையாக நா தழதழக்கச் சொன்னான்.</p>
<p style="text-align: justify;">“துவான்&#8230; லிங்கம் எனக்கு வொர்க் பர்மிட் வாங்கி தரதா ஏழுமாசமா ஏமாத்திக்கிட்டு வர்ராரு. என் பாஸ்போர்ட்ட பிடுங்கி வச்சிக்கிட்டாரு. எனக்கு சம்பளமும் வேணாம்&#8230; வேலையும் வேணாம்&#8230; நான் இந்தியாவுக்கு போவணும், லிங்கத்துக்கிட்ட இருந்து என் பாஸ்போர்ட்ட வாங்கிக் கொடுத்துடுங்க துவான்&#8230;”</p>
<p style="text-align: justify;">சுஹாய்மிக்கு சுத்தமாகத் தமிழ் தெரியாது இருந்தாலும் மணிராசின் மொத்தப் பிரச்சனையையும் ஓரளவு புரிந்து கொண்டதை முகம் காட்டியது.</p>
<p style="text-align: justify;">“வொர்க் பர்மிட் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. லிங்கத்துக்கிட்ட நான் சொல்றேன். நீ வேலைய பாரு” என்று மணிராசின் தோளைத் தட்டிச் சொல்லிவிட்டு ட்ரூப்பரில் ஏறி சென்றுவிட்டான்.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">இவர்களில் யார் தன்னை ஏமாற்றுகின்றான் என்று மணிராசுக்குத் தெரியவில்லை.</p>
<p style="text-align: justify;">இந்நேரம் ஊரா இருந்தா இவன்கள இப்படியா விட்டு வச்சிருப்பேன்&#8230; த்தா&#8230; தூக்கிப் போட்டு கொடல வகுந்திருப்பேன்&#8230; “வேத்தூர்ல வினயமா நடந்துக்கப்பா&#8230; ஒன் முன் கோபத்த எல்லாம் காட்டிராதே” ன்னு ஆத்தா சொல்லி அனுப்பினா&#8230;</p>
<p style="text-align: justify;">ஆத்தாவைப் பத்தி நினைக்கும் போதே அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.</p>
<p style="text-align: justify;">“கொல்லங்குடி மகமாயிக்கு ஆறுநாள் அன்னந்தண்ணி ஆகாரம் இல்லாம விரதமிருந்து பெத்தவடா உன்ன&#8230; அப்பன் இல்லாத பிள்ளையாச்சேன்னு அரும பெருமயா வளர்த்தவடா.. என்ன&#8230; நா சொல்றேன்னு கேளு ராசா&#8230; காசு பணமாடா பெரிசு&#8230; என் ராசா. ஆயிசுக்கும் கஞ்சித் தண்ணிய குடிச்சிக்கிட்டாவது ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துக்கிட்டு இங்கனக்குள்ள கிடந்தா என்ன ஆகாதாடா ராசு&#8230;’ன்னு தாவங்கட்டைய பிடிச்சுக் கெஞ்சினியே ஆத்தா&#8230; கேக்லய ஆத்தா&#8230; நா கேக்லய&#8230;’ நெற்றியெல்லாம் முத்து முத்தாய் திரண்டிருந்த வேர்வைத் துளிகள் கன்னங்கள் வழியே கண்ணீரோடு கலந்தன.</p>
<p style="text-align: justify;">பலனின்றி உழைக்கும் தேகம் சிந்தும் கண்ணீர்தான் வேர்வையோ.</p>
<p style="text-align: justify;">நெஞ்சம் கொள்ளாத சுமையோடு ஆத்தாவைப் பற்றி நினைத்தால் இந்நேரத்தில் அது வெடித்தாலும் வெடித்துவிடும் என்று அஞ்சினான்.</p>
<p style="text-align: justify;">அந்த குறுகலான ஜனநெருக்கடி மிகுந்த சாலையின் உயிரோட்டத்தில் இவன் மட்டும் ஜீவனற்று நடப்பது போல் உணர்ந்தான்.</p>
<p style="text-align: justify;">நினைத்தால் நினைவுக்குள் வந்துவிடவும் நினைக்காத போது மறந்து விடவும் கூடிய முகமா ஆத்தாவுடையது.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">கண்ணு முழிச்ச நாளிலிருந்து இனி கண்ண மூடும் நாழி வரைக்கும் அவ முகத்த எப்படி மறக்க முடியும்.</p>
<p style="text-align: justify;">எந்த ஆத்தாளும் போய்ச் சேர்ந்துட்டான்னு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கடிதாசி வந்திச்சோ அப்பவே நானும் போயிருந்திருக்கனும் என எண்னிக் கொண்டான்.</p>
<p style="text-align: justify;">சாகாம காப்பாத்தனது சரசுதான்.</p>
<p style="text-align: justify;">அவ கருப்பைல வளர்ர அந்த சிசுவும்தான்.</p>
<p style="text-align: justify;">டிராக்டர் ஒன்று அவனைக் கடந்து சென்றது. அதன் பெரிய சக்கரங்களின் சுழற்சி எதையோ சொல்வது போல் தோன்றியது.</p>
<p style="text-align: justify;">வாழ்வின் குறியீடோ.</p>
<p style="text-align: justify;">உடல் முறுக்கேறி, வலியின் உச்சத்தில் சில வினாடிகள் நின்று நிதானித்து விட்டுத் தளர்ந்தது.</p>
<p style="text-align: justify;">வயிறு “பசி” என்றது.</p>
<p style="text-align: justify;">மணி பதினொன்று இருக்கும்.</p>
<p style="text-align: justify;">மார்க்கெட்டுக்கு எதிரில் உள்ள சலீம் பாய் கடைக்குச் சமீபித்து விட்டதை வயிறு எப்படியோ உணர்ந்து கொண்டது.</p>
<p style="text-align: justify;">சலீம் பாய்க்கு நம்மூர்ப் பக்கம்</p>
<p style="text-align: justify;">அளகன்குளம்.</p>
<p style="text-align: justify;">நல்ல வாஞ்சையான மனுசன்.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">இவனைப் பார்த்தவுடன் தலைக்கு மேல் கையைத் தூக்கி நுரை பொங்க ஆற்றும் டீயை டக்கென்று மேஜை மீது வைத்து விட்டு, “என்ன ராசு ஒரு மாதிரியா இருக்கே&#8230; டீ சாப்பிடு என்றார்.</p>
<p style="text-align: justify;">இரண்டடொரு சீனர்கள் சப்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">ஸ்டாலின் பின்புறம், அடுப்பை ஒட்டிய மரத்தின் மறைவில், பாய் சில நேரங்களில் பேசும் ரகசிய குரலின் சப்தம் கேட்கும் தூரத்தில் அமர்ந்து கொண்டான்.</p>
<p style="text-align: justify;">திடீரென்று இமிகிரேசன், போலீஸ் என்று எவனாவது வந்தால் சலீம்பாய் எச்சரிக்க ஏதுவாக அந்த இடம்தான் அமைந்திருந்தது.</p>
<p style="text-align: justify;">கல்லில் காய்ந்த ரொட்டிகளின் மேல் எண்ணையில் தோய்த்த கரண்டியை லாவகமாக இழைத்துவிட்ட வேகத்தில் அவற்றைத் திருப்பிப் போட்டுவிட்டு, கழுத்தை மட்டும் திருப்பி மணிராசின் முகத்தை ஒரு கணம் கூர்ந்து பார்த்தார்.</p>
<p style="text-align: justify;">கணித்து விட்டார்.</p>
<p style="text-align: justify;">இருதோள்களும் மாறி மாறி மேலும் கீழுமாக ஏறி இறங்க மாவை பிசைந்த வாரே கொஞ்சம் கனிவான குரலில் கேட்டார். “என்ன நேத்து வந்த கடிதாசினாலயா ஒன் மூஞ்சு இப்படி வாடி போயிருக்கு&#8230; என்ன விசயம் சொல்லு&#8230; மனுசனுக்கு தகிரியம் வேணும்ப்பா&#8230; ச்சேச்சேச்சே&#8230; என்ன ஆளயா நீ.. ஊர் கடிதாசிப் பார்த்தா ஒடிஞ்சு போயிரியே&#8230;”</p>
<p style="text-align: justify;">ஆற்றி வைத்திருந்த ‘த்தா தாரேக்’கை பெரிய குவளையிலிருந்து மூன்று சின்னக் கிளாஸ்களில் ஊற்றி அதில் ஒன்றை எடுத்து அவன் பக்கம் நீட்டினார்.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">எண்ணெய் பிசுக்கும் அழுக்குமான அந்த முரட்டுக் கைகளுக்குரிய மனிதனின் மனதுக்குள் இவ்வளவு கனிவு கசிய முடியுமா?</p>
<p style="text-align: justify;">அந்த அன்பு மணிராசை மேலும் நெகிழ வைத்தது.</p>
<p style="text-align: justify;">டீயை வாங்கியவாறே</p>
<p style="text-align: justify;">“ஒண்ணுமில்லண்ணே&#8230; சரசுக்கு இது ஏழாவது மாசமில்ல&#8230; வயித்துப் பிள்ளதான் குறுக்கால கிடக்குதாம்&#8230; இது ஆயுதக் கேசாத்தான் முடியுமா&#8230; மருத பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான் போவனும்னு கிராமத்து மருத்துவச்சி சொல்லிட்டாளாம்&#8230; அந்த பயந்தானோ என்னவோ தெரியல&#8230; சரசுக்கு மாறி மாறி சூட்டு வலியும் குறுக்கு வலியுமா போட்டு வாட்டுதாம்&#8230; அள்ளி ரெண்டு பருக்க&#8230; எடுத்து வாயில போட முடியலயாம்&#8230; வாந்திதானாம்&#8230; ஆத்தா இருந்தா தகிரியம் சொல்லுவா&#8230; தனியா கிடந்து அவதிப்பட்ரேன்னு எழுதியிருக்கா.. இருந்த நெலத்தையும்ல வித்துட்டு நான் வந்திருக்கேன்.. காசும் அனுப்ப முடியல&#8230; திரும்பிப் போகவும் முடியல&#8230;” இதற்கு மேல் பேசினால் குரல் உடைந்து காட்டிக் கொடுத்துவிடுமே என்று டீயை உறிஞ்சினான்.</p>
<p style="text-align: justify;">“அட நீ என்னப்பா&#8230; மசக்கைன்னா அப்படித்தான்&#8230; அதான் அபீதா&#8230; என் வீட்டுக்காரி.. மூணு பிள்ளைகளுக்குமே படாத பாடு பட்டுட்டாளாக்கும்&#8230; மூத்தது எட்டு பவுண்டாம்&#8230; அடுத்தது கொடி சுத்தி பொறந்ததாம்&#8230; ஆனா நான் காசு அனுப்பிடுவேன்&#8230; எல்லாம் பிரைவேட்டா மிஷின் ஆஸ்பத்திரியில தான் பொறந்திச்சீங்க&#8230; நான் ஊருக்குப் போயிட்டு படுத்து எந்திரிச்சு வந்திடரது தான்&#8230; பாவம் அவள்ள படாதபாடுபட்டு பொறதவிச்சு&#8230; ச்சேச்சே&#8230; பாவம்பா இந்த பொம்பளைங்க&#8230; என்னப் பண்றது பொண்ணா பொறந்தா அப்படித்தான்&#8230; அப்படித்தான் நம்ம ஆத்தா நம்பள பெத்தா. அவ ஆத்தா அவள பெத்திருப்பா. விடு&#8230; இதெல்லாம் சகஜம்தான்” என்று சொல்லிவிட்டு,</p>
<p style="text-align: justify;">கொஞ்சம் ரகசியமான குரலில், “ இந்தா இந்த மீகோரெங்க அதோ அந்த தொந்தியும் தொபக்கையுமா பீர் போத்தலோடு ஒக்காந்திருக்கானே அந்த தடியனுக்கு வச்சிட்டு வா&#8230;” என்று சொன்னார். சற்று எட்டத்தில் அமர்ந்திருந்த அந்த மனிதரிடமே கைகளை உயர்த்தி புன்னகைத்த வண்ணம் சற்று உயர்ந்த குரலில், “என்ன சௌக்யமா தலைவரே&#8230; மீகோரெங் வருது.. வேரென்ன வேணும்.. மீனு தலையா.. கொஞ்ச நேரமாகும்” என்றார்.</p>
<p style="text-align: justify;">காஸ் அடுப்பின் தீயைக் குறைத்த வண்ணம், “எப்ப பார்த்தாலும் போத்தலும் கையுமா இருந்தா உருப்புட்டு போவீங்கடா.. குடிகார குப்பன்களா&#8230;” என்று தனக்குள்ளேயே முணங்கிக் கொண்டார்.</p>
<p style="text-align: justify;">மீண்டும் வந்து மரத்தடியில் அமர்ந்த மணிராசு வைத்துவிட்டுச் சென்ற டீயை எடுத்து உறிஞ்சினான்.</p>
<p style="text-align: justify;">“ஏண்ணெ&#8230; இந்த லிங்கத்துக்கிட்ட இருந்து பாஸ்போர்ட்ட வாங்கிட்டேன்னா&#8230; எப்படியாவது சுஹாய்மி டிக்கெட்டுக்கும் கைச்செலவுக்கும் காசு கொடுத்துடுவான்&#8230; ஊருக்கு கிளம்பிடலாம்னு ஒரே முடிவா இருக்கேண்ன&#8230;”</p>
<p style="text-align: justify;">“ஆறுமாசம் ஓவர் ஸ்டே பண்ணியிக்கியே இமிகிரேசன்காரன்கிட்ட பினால்டி யார் கட்டுவான்&#8230; ஒங்கப்பன்னா கட்டுவான்&#8230;”</p>
<p style="text-align: justify;">“அதுக்குத்தாண்ணே லிங்கத்த இன்னிக்கு பார்த்து ரெண்டுல ஒன்னு முடிவு பண்ணனும்னு இருக்கேன். வொர்க் பர்மிட் வாங்கித்தரேன்.. கைநிறை சம்பளம் கிடைக்கும்&#8230; இப்படிலேம் சொல்லி என்னை அவருதான கூட்டியாந்தாரு&#8230; என் சம்பளத்த எல்லாம் சுஹாய்மிகிட்ட அவருதான வாங்கியிருக்காரு&#8230; இருந்த ஒரே நெலத்த வித்து சொளையா அம்பதனாயிரம் கொடுத்தேண்ண&#8230; ஆத்தா தடுத்துப் பார்த்தா&#8230; சரசு அழுதும் பார்த்தா&#8230; கேக்காம&#8230; கிராமத்து பெரிய தனக்காரரு முத்துராம சேர்வ மருமவன் ஏமாத்தமாட்டாகனு கொடுத்தேண்ணா&#8230;”</p>
<p style="text-align: justify;">“பெரிய தனக்காரரு&#8230; பெரிய பணக்காரருன்னு இந்த வூர்ல வந்தும் சொல்லிக்கிட்டு இருக்கே&#8230; நல்ல ஆளப்பா நீ&#8230; பெரிய மோசடிக்காரனுக&#8230; பெரிய திருடன்னு சொல்வீயா&#8230;”</p>
<p style="text-align: justify;">“இல்லேண்ணே முத்துராம சேர்வ நல்லவருண்ணே&#8230; அவருக்குத் தான நான் உளுதுகிட்டு இருந்தேன்&#8230; மலேயா மாப்பிள்ளைன்னு வயசு வித்தியாசம் கூட பார்க்காம பொம்பள பிள்ளய இந்த தில்லு முல்லுகாரனுக்கு கட்டி கொடுத்துட்டாரு&#8230; இங்க இவருக்கு பொண்டாட்டி வப்பாட்டி எல்லாம் இருக்குன்னு தெரியாம&#8230;”</p>
<p style="text-align: justify;">“ஊரு கதயெல்லாம் எதுக்கு எனக்கு&#8230; பாஸ்போர்ட்ட அவருகிட்டயிருந்து வாங்குர வழிய பார்ப்பியா&#8230; பொண்டாட்டி, வப்பாட்டின்னு கிட்டு&#8230; நீ கேட்டா லிங்கம் என்ன தெரியுமா சொல்வாரு&#8230; பாஸ்போர்ட் ஏஜண்டுகிட்ட இருக்கு. இமிகிரேசன்ல இருக்கு&#8230; இந்தா வந்திரும்&#8230; அந்தா வந்திரும்னு இழுப்பாறு. ஒன் சம்பளத்த அடி தண்டமா சுஹாய்மி கொடுப்பான்&#8230; அதையும் இவரு வாங்கி பாக்கெட்ல போட்டுக்குவாறு&#8230; உன்னை மாதிரி எத்தனை பேரு இவன்ககிட்ட மாட்டியிருக்காங்க&#8230; இவன்க பொழப்பே இப்படித்தான்&#8230; நீயும் ராப்பகலா ஊர்ல இருக்கிற அத்தன அல்லூர்லயும் இறங்கி எத்தன வருசம் வேல பார்த்தாலும், சுஹாய்மியும் உன்ன விடமாட்டான்&#8230; லிங்கமும் உன்ன வச்சி காச  கறந்துருவான்&#8230; வேல பார்த்தது போதும்டா சாமினு பாஸ்போர்ட்ட வாங்கிகிட்டு ஊர் நாடிப் போய்ச் சேரு&#8230; என்னத்த உழச்சி என்ன&#8230; புத்திசாலித்தனமாக உழைக்க தெரிஞ்சிருக்கனும்&#8230; இல்லாட்டி இந்த மொதலாளிகளும் சரி, முதலையும் சரி.. ஒன்னுதான்&#8230; உறிஞ்சிறுவானுங்க&#8230; உறிஞ்சி..”</p>
<p style="text-align: justify;">டக் டக் கென்று ஒரு கணித துல்லியத்தோடு அளவாக வெட்டப்பட்ட தவ்வு, கையும் கத்தியுமாய் இருமருங்கும் அணைவாக எடுக்கப்பட்டு காய்ந்து கொண்டிருந்த எண்ணெய் சட்டியில் போடப்பட்டது.</p>
<p style="text-align: justify;">மணிராசுக்கு அவனது நிலைமை இன்னும் தெளிவாக தெரிந்தது.</p>
<p style="text-align: justify;">ஒரு தேர்ந்த வீணை வித்வானின் விரல்கள் செயல்படும் லாவகத்துடன், சலீம் பாயின் கைகள் அந்தந்த இடங்களில் இருக்கும் வெங்காயம், கீரைத் தண்டு, தௌகே, முட்டை குவா, பலகாரம் என்று மீட்டு நறுக்கி, சட்டியில் ஒர் தாளகதியில் போட்ட வண்ணமாய் இருக்க&#8230; பார்வை வாடிக்கைக்காரர்கள் மேல் கவனத்துடன் பரவ, வார்த்தைகள் மட்டும் மணிராசவுக்கு பிரத்யேகமாகச் சொல்லப்படுபவைகளாகவும், அந்தந்த நேரத்தின் அழுத்த ஆழங்களோடும் வந்து கொண்டிருந்தன.</p>
<p style="text-align: justify;">அந்த மரங்களடர்ந்த விளையாட்டுத் திடலைக் கடக்கும் போது, அதன் குளுமையான நிழலும், காற்றும், சலீம் பாயின் இதமான அன்பும், தொண்டையில் இறங்கி வயிற்றை நனைத்த டீயும் மணிராசின் மனப்புழுக்கத்தைக் கொஞ்சம் மாற்றிவிட்டிருந்தன.</p>
<p style="text-align: justify;">அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் கொஞ்சம் இளைப்பாற அமர்ந்தான்.</p>
<p style="text-align: justify;">எதிரில் ஒரு பெரிய சாக்கடை.  இந்த ஊரின் விஷேசமே இங்கே பெய்யும் மழையும், அவற்றை அள்ளிக் கொண்டோடும் சாக்கடைகளும் தான் என்று நினைத்தான்.</p>
<p style="text-align: justify;">வயல்காட்டின் சேறும், சகதியும் உழும்போது எழும் அந்தப் புழுதியின் மணமும் மகிமையும்&#8230; என்று திளைத்தவனுக்கு இந்த நாட்டின் சாக்கடைகள்தான் புகலிடம் தந்தன. பெட்டாலிங் ஜெயாவின் எந்த அல்லூறு எங்கே போய் எதனோடு சேரும் என்பதை மட்டும்தான் அவன் நன்கு அறிந்திருந்தான்.</p>
<p style="text-align: justify;">மழைக் காலங்களின் பின்னிரவுகளில் அடைப்பட்டு பெருகி நிற்கும் இந்த சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்ய இவன் அழைத்துச் செல்லப்படுகையிலும் அங்கே வேலை செய்கையில் இவன் அங்கமெல்லாம் ஆரத்தழுவி உறவாடும் நகரத்தின் கழிவுகளின் சந்திப்பின் போதும்&#8230; இவன் வருந்தியது இந்த அகால நேரத்து வேலையின் தன்மைக்காக அல்ல&#8230; இந்த வேலைக்குக் கூட கூலி இல்லையே என்று எண்ணும்போதுதான்.</p>
<p style="text-align: justify;">இன்னும் கொஞ்ச நேரத்தில் சந்திக்கப் போகும் லிங்கத்திடம்  என்ன கேட்பது&#8230; எப்படி ஆரம்பிப்பது&#8230; என்று சிந்தித்த வண்ணம் கால்களை மடக்கும் போது, அமர்ந்திருந்த பெஞ்சின் கீழ் பதுங்கியிருந்த பூனை ஒன்று வேகமாக ஓடி சாக்கடையில் விழுந்தது.</p>
<p style="text-align: justify;">பதறிப் போய் எழுந்து பார்த்தான்.</p>
<p style="text-align: justify;">அந்த பெரிய சாக்கடையின் நடுப்பகுதியில் மட்டும் கொஞ்சம் நீரோட்டம் இருந்தது.</p>
<p style="text-align: justify;">பூனை அந்த விளிம்பில், நிறைமாத கர்ப்பிணியாய் மூச்சு இறைத்து கிடந்தது.</p>
<p style="text-align: justify;">நகர இயலாமல் கால்களை உதைத்துக் கொண்டு விட்டு விட்டு ஓலமிட்டது.</p>
<p style="text-align: justify;">மனம் துணுக்குற்றது.</p>
<p style="text-align: justify;">மேலும் அங்கே நிற்க மனமின்றி திரும்பி வேகமாக நடந்தான்.</p>
<p style="text-align: justify;">அந்த பூனையின் அழுகுரல் அவனைத் துரத்தியது.</p>
<p style="text-align: justify;">சரசு நிறைமாத கர்ப்பிணியாய் படுத்திருக்கின்றாள்&#8230; புரள்கின்றாள். முணங்கல் அழுகையாய்&#8230; அழுகை கதறலாய்&#8230; யாருமே அற்ற தனிமையில் அவள்&#8230; கண்களை எத்தனை முறை தேய்த்தாலும் காட்சிகள் மறைய மறுக்கின்றன.</p>
<p style="text-align: justify;">மரம், நிழல், காற்று&#8230; எல்லாம் காணாமல் போய்விட்டிருந்தன.</p>
<p style="text-align: justify;">உஷ்ணம் உள்ளும் புறமுமாக.</p>
<p style="text-align: justify;">ஆக்ரோஷமான ஒரு உள்ளுணர்வு அவனை ஆகர்ஷித்திருந்தது.</p>
<p style="text-align: justify;">வேகமாக நடந்தான்.</p>
<p style="text-align: justify;">முகம் வேர்வை கொப்பளிக்கும் ஊற்றுக்கண்ணாக ஆகியிருந்தது.</p>
<p style="text-align: justify;">வெளியில் நின்று கொண்டு ஏதோ வேலை ஏவிக் கொண்டிருந்தார் குத்தகைக்காரரான மகாலிங்கம், எதிரே நின்றிருந்த லாரியின் டயர்களை நாலைந்து பேர்கள் கழட்டிக் கொண்டிருந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">மணிராசு அவர் அருகில் சென்று கைகளை குவித்தான்.</p>
<p style="text-align: justify;">அவர் அவனை கண்டும் காணாதவராக நின்றிருந்தார்.</p>
<p style="text-align: justify;">காதுகளில் சரசுவின் அலறலும், அந்த பூனையின் அவலக்குரலுமே ஒலித்துக் கொண்டிருந்தன.</p>
<p style="text-align: justify;">“என் பாஸ்போர்ட்ட குடுங்கய்யா&#8230; ஊருக்குப் போகணும்&#8230;” என்றான்.</p>
<p style="text-align: justify;">திரும்பிப் பார்த்த லிங்கம், எரிச்சலோடு, “போடா&#8230; போய் வேலய பாரு&#8230; ரெண்டு நாள் வேலைக்கு  போவலயாமே&#8230; திமிரா&#8230; பாஸ்போர்ட்டு கீஸ்போர்ட்டெல்லாம் கிடையாது&#8230; கிடைக்க அஞ்சாறு மாசமாகும்&#8230; போ&#8230; போய் வேலய பாரு&#8230;” என்றார்.</p>
<p style="text-align: justify;">மணிராசு சற்று கடுமையான குரலில், “ஐயா&#8230; நீங்க பணமும் பாஸ்போர்ட்டும் கொடுக்கலைன்னா நான் இன்னிக்கு இங்கிருந்து போகப் போறதில்ல&#8230; ஆமா&#8230;” என்று சற்று அழுத்தமாக, தீர்க்கமாகச் சொன்னான்.</p>
<p style="text-align: justify;">இந்த திடீர் மாற்றம் கண்டு சற்று அதிர்ச்சி அடைந்தவராய் லிங்கம் இவனைக் கூர்ந்து பார்த்தார்.</p>
<p style="text-align: justify;">“தண்ணி கிண்ணி போட்டுட்டு வந்திருக்கியா&#8230; கண்லாம் சிவப்பா இருக்கு&#8230; என்னை தெரியும்ல&#8230; இது ஒங்க ஊரில்ல&#8230; சொன்னேனா கைய கால வாங்கிருவான்க&#8230;”</p>
<p style="text-align: justify;">தசைநார்கள் முறுக்கேறி நின்றன. உதடுகள் துடித்தன.</p>
<p style="text-align: justify;">ஆத்திரத்தின் எல்லை கடந்து செல்வது அவனுக்கு தெரிந்தது.</p>
<p style="text-align: justify;">“சரிதாண்டா.. எந்த வூரா இருந்தா என்ன&#8230; என் பாஸ்போர்ட்ட&#8230; என் அம்பதாயிரம்&#8230; என் உழைப்பு&#8230; என் சம்பளம் குடுடா நாயே&#8230;” என்று கத்தியவாறு ஆவேசத்தோடு லிங்கத்தின் சட்டையை பிடித்து குலுக்கினான். சற்று தொலைவில் பணிவாக நின்றுக் கொண்டிருந்த ஒரு முரட்டு மனிதனை பார்த்து கையசைத்தார் லிங்கம்.</p>
<p style="text-align: justify;">அவன் ஓடி வந்து மணிராசின் கையை திருகி பிடரியில் ஓங்கி அறைந்தான்.</p>
<p style="text-align: justify;">டயர் மாற்றிக் கொண்டிருக்கும் இடத்தில் போய் விழுந்தான் மணிராசு.</p>
<p style="text-align: justify;">செவிகளில் ஒரே இரைச்சல்.</p>
<p style="text-align: justify;">சரசுவின் அழுகுரல்.</p>
<p style="text-align: justify;">புரண்டு புரண்டு கதறுகிறான்.</p>
<p style="text-align: justify;">அங்கே கீழே கிடந்த ஸ்பானர் மணிராசின் கைகளுக்கு கிட்டியது.</p>
<p style="text-align: justify;">சக்தியெல்லாம் திரட்டி, தன் வலுகொண்ட மட்டும் அந்த ஸ்பானரை லிங்கத்தின் முகத்தை நோக்கி வீசினான்.</p>
<p style="text-align: justify;">“ஐயோ&#8230; அம்மா&#8230;” என்ற லிங்கத்தின் அலறல் கேட்டது.</p>
<p style="text-align: justify;">ஆனாலும் அது சரசுவின், அந்த கர்ப்பிணி பூனையின் சகிக்க முடியாத அலறலைப் போல் அவ்வளவு குரூரமாக இல்லை.</p>
<p style="text-align: justify;">லிங்கத்தின் அடியாட்கள் தத்தம் கைகளுக்குக் கிடைத்த இரும்பு குழாய்களோடு மணிராசை நோக்கி வேட்டை நாய்களைப் போல் வெறியோடு ஓடி வந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">ஆனால் அப்பவும் மணிராசு அசையாமல் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு அங்கேயே தான் நின்று கொண்டிருந்தான்.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://shanmugasiva.vallinam.com.my/?feed=rss2&#038;p=91</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுருதி பேதம்</title>
		<link>http://shanmugasiva.vallinam.com.my/?p=87</link>
		<comments>http://shanmugasiva.vallinam.com.my/?p=87#comments</comments>
		<pubDate>Sat, 03 Dec 2011 08:48:55 +0000</pubDate>
		<dc:creator>மா. சண்முகசிவா</dc:creator>
				<category><![CDATA[சிறுகதை]]></category>

		<guid isPermaLink="false">http://shanmugasiva.vallinam.com.my/?p=87</guid>
		<description><![CDATA[<p style="text-align: justify;">கடைசியாக ஒரு முறை ‘திரு கனகசபாபதி &#8211; தலைமை ஆசிரியர்’ என்றிருந்த அந்த பெயர் பலகையை கண் நிறைய பார்த்துக் கொண்டேன். கண்களின் விளிம்பில் ஈரம் கசிகிறது.</p> <p style="text-align: justify;">இந்த பள்ளி ஆசிரியர் வாழ்க்கைதானே எனக்கு வாய்த்தது. எனது வாழ்வின் அர்த்தங்களை இங்கேதானே ஓடி ஓடி தேடினேன். காலையிலிருந்து இரவு வரை என் காலங்கள் இங்கேதானே கரைந்தது. ஐந்து வயதில் மாணவனாக நுழைந்து ஐம்பத்தி ஐந்து வயதில் தலைமை ஆசிரியனாக வெளியேறும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">கடைசியாக ஒரு முறை ‘திரு கனகசபாபதி &#8211; தலைமை ஆசிரியர்’ என்றிருந்த அந்த பெயர் பலகையை கண் நிறைய பார்த்துக் கொண்டேன். கண்களின் விளிம்பில் ஈரம் கசிகிறது.</p>
<p style="text-align: justify;">இந்த பள்ளி ஆசிரியர் வாழ்க்கைதானே எனக்கு வாய்த்தது. எனது வாழ்வின் அர்த்தங்களை இங்கேதானே ஓடி ஓடி தேடினேன். காலையிலிருந்து இரவு வரை என் காலங்கள் இங்கேதானே கரைந்தது. ஐந்து வயதில் மாணவனாக நுழைந்து ஐம்பத்தி ஐந்து வயதில் தலைமை ஆசிரியனாக வெளியேறும் வரை என் இளமையும் முதுமையுமான இந்த வாழ்வு இந்த பள்ளிக்கூடங்களைச் சுற்றி சுற்றியேதானே வளர்ந்து, வாழ்ந்து தேய்ந்துள்ளது. மனைவி மக்களற்ற வீட்டில் கழித்த நேரங்களைக் காட்டிலும் இந்த கல்விக் கூடங்களில் வசித்த பொழுதுகள்தானே அதிகம்.<br />
<span id="more-87"></span><br />
இன்றோடு இதற்கும் ஒரு முடிவு.</p>
<p style="text-align: justify;">முடிவு இல்லாதது எது.</p>
<p style="text-align: justify;">முப்பத்தைந்து ஆண்டுகால உழைப்பிற்குப் பின் இந்த ஆசிரியர் பதவிக்கு ஓய்வு. இரண்டு ஹார்ட் அட்டாக்கிற்கு பின்னும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த இதயத்திற்கு ஒரு நாள் இந்த ஓட்டம் சலித்து, கசந்து&#8230; ஓய்வு. அதன் பின் கிடைக்கும் பதவி சிவலோக பதவி&#8230; அப்போதும் கூட இந்த ‘ பதவி ’ நம்மை விடாதோ.</p>
<p style="text-align: justify;">ஏதோ ஒரு விசித்திரமான உணர்வோடு திரும்பி நின்று அந்தப் பள்ளிக்கூட கட்டிடத்தைப் பார்க்கிறேன். வெறிச்சோடி கிடக்கிறது. ஏதோ ஒரு அர்த்தத்தோடு, வானுயர்ந்த மரங்களின் பின்னணியில் அது கண்களை இடுக்கிக்கொண்டு என்னைக் கூர்ந்து பார்ப்பது போல் தோன்றுகிறது.<br />
அதோ அந்த ஆலமரம்.</p>
<p style="text-align: justify;">அந்தப் பொந்தில் பாம்பு இருக்கும் என்று எல்லோரையும் பயமுறுத்தி வைத்திருப்போம். இந்த இடைநிலைப் பள்ளியில்தான் என் பால்ய காலம். அந்த காதல் பருவம்&#8230; கொஞ்சம் பிஞ்சிலே பழுத்து வெம்பியதும் இங்கேதான். இந்த ஆலமரத்தின் பொந்தில்தானே நானும் ராஜியும் எங்களின் காதல் கடிதங்களை பரிமாறிக்கொள்வோம். இந்த ஆலமரத்தின் பொந்தில்தான் நான் என் கடிதத்தைப் பதுக்கி வைத்துவிட்டு வந்துவிடுவேன். கைகளால் தன் அடிவயிற்றைப் தாங்கிப் பிடித்தவாறு சாய்ந்து நிற்கும் நிறைமாத கர்ப்பிணி போல் மறுநாள் ராஜியின் கடிதத்தோடு அந்த ஆலமரம் எனக்காக காத்து நிற்கும். ஆனால் இந்தக் கடிதப்போக்கு வரத்துக்கு முன்பாக டீயுஷன் டீச்சர் வீட்டில்தான் எங்களின் சந்திப்பு ஆரம்பமானது.</p>
<p style="text-align: justify;">தன் முன்னால் ஏழை ஆசிரியரின் மகன் என்பதால் எனக்கும், அந்த ஊருக்கு புதிதாக மாற்றலாகி வந்திருந்த செல்வாக்குமிக்க ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் மகள் என்பதால் ராஜிக்கும் மட்டுமே அந்த சுசிலா டீச்சர் டீயுஷன் சொல்லிக் கொடுத்தார்.</p>
<p style="text-align: justify;">ஆனால் நாங்கள் எங்கே படித்தோம்.</p>
<p style="text-align: justify;">ஒரு அழகான பெண்ணின் நட்பு எனக்கும், ஒரு சம வயது ஆணின் பரிச்சயம் அவளுக்கும், டீச்சர் ஏற்படுத்திக் கொடுத்த தனிமை எங்களுக்கும் புதிது.</p>
<p style="text-align: justify;">&#8220;நீங்க பாய்ஸ் எல்லாம் என்ன பேசிக்குவிங்க&#8230;?&#8221;</p>
<p style="text-align: justify;">&#8220;என்ன பேசுவோம்&#8230; ஊர்க்கதைதான்.. நம்ம வீரப்பன் கிட்ட ‘ஒன் அப்பா ரொம்ப வட்டி, குட்டி எல்லாம் வாங்கராரே&#8230; காசெல்லாம் எங்கடா பதுக்கி வச்சிருக்காரு’ன்னு சுந்து கேட்டான், ‘அவரோட அந்த கறுத்த பெருத்த தொந்தியிலதா’ன்னு கந்தா சொல்வான்&#8230; வீரப்பன் எங்கள அடிச்சு வெரட்டுவான்&#8230;&#8221;</p>
<p style="text-align: justify;">குலுக்கி விட்ட கால் சலங்கையின் ஓசையைப் போல கலகலவென்று சிரிப்பாள்.</p>
<p style="text-align: justify;">“நாங்க கேர்ல்ஸ் எல்லாம் இப்படி மோசமாலாம் பேசிக்கமாட்டோம். சுந்தரி அம்மா ஏண்டி இந்த வயசுலேயும் இப்படி சின்னப் பொண்ணு மாதிரி மேக்கப் போட்டுகிட்டு அலுக்கி தளுக்கிகிட்டு கோவிலுக்கு வராங்கனு என் காதில கிசுகிசுப்பா ரஞ்ஜினி&#8230;.”</p>
<p style="text-align: justify;">“ஆகா&#8230; புல்லரிக்கிது&#8230; எவ்வளவு உயர்வான விஷயங்கள பேசுறீங்க..”<br />
மீண்டும் அதே சிரிப்பு.</p>
<p style="text-align: justify;">வாய்விட்டு&#8230; வானம் பார்த்து சிரிக்கும் சிரிப்பு. மனிதர்கள் மனம் விட்டு சிரிக்கும் போது எவ்வளவு அழகு கொள்கிறது அந்த முகம்.<br />
அந்த ரசனைக்கும் ஓர் முடிவு வந்தது.</p>
<p style="text-align: justify;">என் பெயரை அவளது நோட்புக்கில் கண்ட அவளது தந்தை டியூசனை நிறுத்தினார்.</p>
<p style="text-align: justify;">அதன் பிறகுதான் இந்த ஆலமரப் பொந்தில் கடிதம் எழுதி வைக்கும் ‘ஐடியா’ வந்தது. எனக்கல்ல. வீரப்பனுக்கு. ராஜிக்கும் எனக்கும் உண்டான நட்பை ‘காதல்’ என்று பெயரிட்டதும், என்னை கடிதம் எழுதச் சொன்னதும் இந்த வீரப்பன் தான்.</p>
<p style="text-align: justify;">குண்டாக, அளவில் சிறியதான ‘டவுசர்’ புடைத்துக் கொண்டும், கால்கள் எங்கும் உரோமாபுரியுடன், எப்ப பார்த்தாலும் காதல் கதைகள், செக்ஸ் விஷயங்கள், அவனுக்கு தெரிந்த பெரியவர்களின் கூடாத நட்பு, இப்படியாக வயதுக்கு மீறிய பேச்சு பல நேரங்களில் கேட்கவே கூச்சமாகவும் அருவருப்பாகவும் இருக்கும். ஆனாலும் சுவாரஸ்யமாக அவன் சொல்வதை கேட்கத்தான் தோன்றும்.<br />
“எங்க அப்புச்சிக்கு ஒரு பெரிய வீடு&#8230; ரெண்டு சின்ன வீடு” என்பான் கண்களைச் சிமிட்டிக் கொண்டு.</p>
<p style="text-align: justify;">“வாழ்க்க ரகசியம் எல்லாம் பொஸ்தகத்தில இல்லடா&#8230; எனக்குத்தான் தெரியும்&#8230; உங்களுக்குத் தெரியாது நீங்க சின்ன பசங்க&#8230;” என்று பெரிய மனித தோரணையில் பேசுவான்.</p>
<p style="text-align: justify;">அவன் சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டு நம்புவதா வேண்டாமா என்று நாங்களெல்லாம் தூக்கமின்றித் தவிப்போம்.</p>
<p style="text-align: justify;">அந்த இடைநிலைப் பள்ளியின் இறுதி நாட்களை கழித்துக் கொண்டிருந்த நேரம். தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. ஒரு நாள் வீரப்பன் என்னை தனியாக ஆலமரத்தடிக்கு அழைத்து சென்றான்.</p>
<p style="text-align: justify;">“நேத்து ஒன் ராஜேஸ்வரி அப்பா, அதான் அந்த திமிரு பிடித்த ஸ்டேஷன் மாஸ்டர் எங்க அப்புச்சிக்கிட்ட பேசிக்கிட்டிருந்தாரு&#8230; ராஜி பரீட்சைக்குக் காத்திருக்காராம்&#8230; அப்புறம் கோலாலம்பூருக்கு வேலைய மாத்திக்கிட்டு போயிடுவாங்களாம்&#8230; ஏண்டா.. உன் காதல் என்னடா ஆகப்போவுது&#8230; பாவம்டா அந்த பொண்ணு&#8230; ஒன்ன நம்பி காதலிக்கிறாளே&#8230; அத நெனச்சாதான் கவலையா இருக்கு&#8230; நீ ஒன்னும் செய்யலனா&#8230; “ச்சீ&#8230; நீயும் ஒரு ஆம்புளையா”ன்னு காரி துப்ப போறா&#8230; இத நெனச்சா எனக்கு வெக்கமாவும் இருக்கு&#8230;”</p>
<p style="text-align: justify;">“ஏய்.. என்ன பேசிக்கிட்டே போரே&#8230; நான் இப்ப என்ன செய்யனும்.. அதச் சொல்லு முதல்ல&#8230;”</p>
<p style="text-align: justify;">“அப்டி கேளு&#8230; ஒரு திட்டம் வச்சிருக்கேன்&#8230; அத நீ நெரவேத்தினா ராஜி காலம் பூரா ஒன்னோடத்தான் வாழ்ந்தாகணும்&#8230;”</p>
<p style="text-align: justify;">“சுத்தி வளைக்காமச் சொல்லு&#8230;”</p>
<p style="text-align: justify;">“நாளைக்கு கடைசி நாளு&#8230; நீ அவ ஸ்கூல் விட்டு வெளியே வரும் போது&#8230; பாஞ்சிப் போய் கட்டிப் பிடிச்சி ஒரு முத்தம் கொடுத்துடு&#8230; அப்புறம் எல்லோரும் கொஞ்சம் ஆய்&#8230; ஊய்ன்னு கத்துவாங்க&#8230; பிரச்சனதான். எல்லாத்தையும் சமாளிப்போம்&#8230; கவலப்படாத நாயிருக்கேன்&#8230; என்ன பண்றது&#8230; போராட்டம் இல்லாம காதல் இல்லயே&#8230;”</p>
<p style="text-align: justify;">“ச்சீ..சீ..உளராத.. நான் ஏண்டா பப்ளிக்கா இப்படி ஒரு மோசமான காரியத்த செய்யனும்&#8230; நெனச்சாலே உடம்பு நடுங்குது.. நான் படிச்சி, வேல பார்த்து, முறப்படி பொண்ணு கேட்டு அவள கல்யாணம் பண்ணிக்குவேன்.”</p>
<p style="text-align: justify;">“முட்டாள். ஒன் குடும்பம் எங்கே&#8230; ராஜி குடும்பம் எங்கே&#8230; ஏணி வச்சாலும் எட்டுமாடா&#8230; இப்படி நான் சொல்றமாதிரி செஞ்சினா&#8230; அவள வேறு யாருடா கல்யாணம் பண்ணிக்குவான்&#8230; வேற வழியில்லாம அவ அப்பன் உங்க அம்மா கால்ல வந்து விழுந்து உனக்குத்தான் ராஜ்ஜின்னு கெஞ்சிடுவான்&#8230; இப்ப விட்டுடீன்னா வேற எப்பவுமே ஒன்னால இந்த காதல வெற்றியாக்க முடியாது&#8230; சொல்லிட்டேன்&#8230; பின்னால நீதான் வருத்தப்படபோரே&#8230; படிப்புல கெட்டிக்காரனா மட்டும் இருந்துட்டா என்னடா புரயோசனம்&#8230; என்னை மாதிரி வாழ்க்க பத்தி அறிவும் அனுபவமும் உள்ளவன் சொல்றது கேட்டு நடக்கவாவது தெரியணும்&#8230;”</p>
<p style="text-align: justify;">குழப்பமும் கவலையும் என்னை விழுங்கி விட்டிருந்தன. மறுநாள் வீரப்பன் பள்ளி முடிந்ததும் என் தோள்களின் மேல் கையை போட்டு ஏதேதோ பேசியவாறு என்னை அழைத்துச் சென்றான். அவனது முரட்டுக் கைகள் என் கழுத்தைச் சுற்றி இறுக்கியது வலித்தது. இந்த கூடுதலான நெருக்கம் ஏன் என்று தெரியாமல் ஏதோ ஒரு மந்திரத்தில் கட்டுண்டவன் போல் அவனோடு போய்க்கொண்டிருந்தேன்.</p>
<p style="text-align: justify;">எதிரே ராஜியும் சில மாணவிகளும் சிரித்து பேசியவாறு வந்து கொண்டிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">எங்கள் அருகில் அவர்கள் வந்த அந்த கண நேரத்தில், என்னை ஒரு கோழிக்குஞ்சைத் தூக்கி எறிவது போல் ராஜியை நோக்கித் தள்ளிவிட்டான் வீரப்பன்.</p>
<p style="text-align: justify;">பெண்கள் வீலென்று அலறி ஓடிச் சிதறினர். கண்ணிமைக்கும் நேரம்தான்.</p>
<p style="text-align: justify;">நான் அவன் சொன்னதைச் செய்துவிட்டிருந்தேன்.</p>
<p style="text-align: justify;">ராஜி நிலைகுலைந்து அதிர்ச்சியும் அழுகையுமாய் நின்றிருந்தாள். செய்யத்தகாத ஒன்று செய்துவிட்ட பீதியுடனும் கலவரத்துடனும் என் கண்கள் வீரப்பனை தேடின. அவன் காணாமல் போய்விட்டிருந்தான்.</p>
<p style="text-align: justify;">பெரிய வாத்தியார் என் பிடரியில் அசுர வேகத்தில் அடிக்கும் வரைக்கும்தான் எனக்கு நினைவு இருந்தது. அதன் பின் வெகுநாட்களுக்கு பிரமை பிடித்தவன் போல்தான் இருந்து வந்தேன்.</p>
<p style="text-align: justify;">“தகப்பன் இல்லாத பிள்ளை தறுதலனு நிரூப்பிச்சிட்டியேடா&#8230;” என்று என் முகத்திலும் மார்பிலும் மாறி மாறி அறைந்தாள் அம்மா.</p>
<p style="text-align: justify;">தாங்கிக் கொண்டேன்.</p>
<p style="text-align: justify;">மற்றைய பள்ளிக் கூடங்களிலும் அவ்வூர் கோவிலின் திருவிளக்கு பூஜையிலும் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது.</p>
<p style="text-align: justify;">உள்ளுர் பத்திரிக்கை நிருபர், ‘மாணவனா.. காமக் களியாட்டம் ஆடும் காமுகனா’ என்று பெயர் குறிப்பிடாமல் ஒரு நாளிதழில் துணுக்குச் செய்தியாக இந்நிகழ்ச்சியை எழுதியிருந்தார்.</p>
<p style="text-align: justify;">ஸ்டேஷன் மாஸ்டர் போலீஸில் புகார் கொடுத்து பள்ளியின் பெயரையும் தன் பெயரையும் கெடுத்துவிடாமல் தடுக்கும் பொருட்டும், அவரை திருப்திபடுத்தும் பொருட்டும் கொஞ்சம் கூடுதலான தண்டனை வழங்கும்படியான ஒரு ‘பெரிய விசாரணை’ நடத்த சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தார் தலைமை ஆசிரியர்.<br />
ஆலமரத்தடியில், பள்ளி முழுவதும் ‘ அசெம்பிளியில்’ நிறுத்தப்பட்டது.<br />
நான் ராஜியின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி பணிக்கப்பட்டது. செய்தேன்.</p>
<p style="text-align: justify;">சட்டையை கழற்றி, டிசிப்ளின் டீச்சரின் நீண்ட பிரம்பு, நான் வலிதாங்கும் மட்டும், அவரது கை ஓயும் மட்டும் என் முதுகோடு பேசியது.<br />
பொறுமையாக கேட்டுக்கொண்டேன்.</p>
<p style="text-align: justify;">என் விடலைப் பருவத்து உணர்வுகளை என் வசப்படுத்தி வாழத் தெரியாமல் போனதனால், ‘காதல்’ என்ற அந்த மெல்லிய உணர்வுகளை எப்படிக் கைக்கொள்வது என்று புரியாததனால், நான் என்னென்ன கைக்கொள்வது என்று புரியாததனால், நான் என்னென்ன விதமான மான பங்கங்களுக்கு உள்ளாக முடியுமோ அத்தனைக்கும் உட்படுத்தப்பட்டேன்.</p>
<p style="text-align: justify;">எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகள் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு மிகவும் தாராளமாகவே கொடுக்கப்பட்டதால், என் சுய கௌரவம் நசுக்கப்பட்டு, நான் சிறுமைப்படுத்தப் பட்டு, என் உணர்வுகள் கொச்சைப்படுத்தப்பட்டு, ஒரு குற்றவாளிக்கு காட்டப்படும் குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட மறுக்கப்பட்டேன்.</p>
<p style="text-align: justify;">சகித்துக் கொண்டேன்.</p>
<p style="text-align: justify;">பின்னொரு நாள் ராஜி என்னிடம் வந்து “ஏன் கனகு&#8230; இப்படியெல்லாம் செய்து என் வாழ்க்கைய கொலச்சிட்டீங்களே&#8230;” என்று அழுது விடை பெற்றபோது.<br />
நான் சிதைந்துதான் போனேன்.</p>
<p style="text-align: justify;">நடந்த இந்த அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் இந்த ஆலமரம் தான் சாட்சியாக நின்றிருக்கிறது. என்னைக் கனிவோடு பார்த்த ஜீவன் அது ஒன்றுதான், இன்றுவரையில். அதன் அருகில் சென்று, அதனைத் தொட்டு தடவுகிறேன் ஒரு வாஞ்சையோடு. அதனை நான் தொடுவதும், அது இப்படியாக என் நினைவுகளைக் கிளர்வதும், இதுவே கடைசி முறையாக இருக்கக்கூடும்.<br />
ஏனோ இதனைக் கடந்து அப்பால் செல்ல முடியாது நிற்கிறேன்.<br />
நினைவுகள்&#8230; நினைவுகள்&#8230; மூச்சு முட்டும் வரை நெஞ்சை இறுக்கும் நினைவுகள் தொடர்கின்றன.</p>
<p style="text-align: justify;">வீரப்பன் ஒரு மோசமான நண்பன் தான். இருந்தாலும் ஒரு தீர்க்கதரிசி என்றுதான் சொல்வேன்.</p>
<p style="text-align: justify;">அவன் சொன்னதுபோல் நான் ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு நாட்டின் ஒரு மூலையில் அமைதியாக வேலைபார்த்து வந்த ஒரு நாள் இருபது வருடங்கள் கழித்து என் வீடு தேடி ஸ்டேஷன் மாஸ்டர் வருவார். அம்மாவிடம் என் திருமணத்தைப் பற்றி, ராஜியை எனக்காகவே வைத்திருப்பதாக மணம் பேசுவார் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்.<br />
நான் அசட்டுத்தனமான மகிழ்ச்சியில் மூழ்கினேன்.</p>
<p style="text-align: justify;">என் கனவுகளில் மட்டுமே வந்து சென்ற என் பால்ய காதலியைக் கரம் பிடித்து, காலமெல்லாம் இன்பத்தில் களிக்கப் போவதை எண்ணி ஆனந்த வெள்ளத்தில் திளைத்தேன்.</p>
<p style="text-align: justify;">இருபது ஆண்டுகளாக எனக்காக காத்திருந்த அந்த தேவதையின் தெய்வீக காதலின் மகோன்னதத்தை எண்ணி எண்ணி மருகி உருகினேன். நண்பர்களிடத்திலெல்லாம் இந்த அற்புதத்தை சொன்னேன்.<br />
ஆனால் ராஜி முதலிரவில் சொன்னது வேறுவிதமாக இருந்தது.<br />
விதி வாழ்க்கை நதியின் சலனமற்ற ஓட்டத்தில் சற்றும் எதிர்பாராத வண்ணம், திடீரென்று ஒரு அதள பாதாளத்தில் பாயும் நீர்வீழ்ச்சியை ஏற்படுத்திச் செல்லும். இந்தத் திருப்பங்கள் கதைகளில் படிக்கவும், நதிகளை நீர்வீழ்ச்சியாய் எட்ட நின்று பார்க்கவும் சுவாரஸ்யமாக இருக்கும்.</p>
<p style="text-align: justify;">அந்த வீழ்ச்சியின் துன்பமும் துயரமும் நீருக்குத்தானே தெரியும். அந்த முதலிரவில், தலை குனிந்தவாறு, மங்கிய ஒளியில், மனதை கவரும் மெல்லிய அலங்காரத்தோடு, மிருதுவான குரலில் மெதுவாக பேசினாள் ராஜி.<br />
“நீங்க அப்படி செஞ்சதனாலேயே நாங்க ஊர் மாத்திக்கிட்டு கோலாலம்பூர் போயிட்டோம். அன்னிலிருந்து எனக்கு அப்பாகிட்டேயும் அம்மாகிட்டேயும் நெதமும் அடியும் உதையும்தான். ஒரு நாளாவது&#8230; ஒரே ஒரு நாளாவது என்னை அவுங்க ஒழுக்கம் கெட்டவ, பேரக் கெடுத்தவ, மானத்த வாங்கினவ, தரித்திரம் பிடிச்சவனு திட்டாம  இருந்ததில்லை. மேல படிக்கிறதுக்கு நான் எவ்ளோ கெஞ்சினே, கதறினே. வீட்ல போட்டு அடைச்சி வெளில போனாலே என் கால ஒடிச்சி போட்டுடுவேனு சொல்லிட்டாங்க.</p>
<p style="text-align: justify;">என் அத்தை மகன்.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சின்னப்பிள்ளைலேர்ந்து சொல்லி கிட்டு வந்தவுங்க அப்புறம் எங்க வீட்டுப்பக்கமே வரல. அவுங்க இப்ப ஒரு டாக்டராக இருக்காங்க.<br />
அதுக்கப்புறம் பல இடங்கள இருந்து என்னை பொண்ணு பார்க்க வந்தாங்க&#8230; அந்தத் தோசம்&#8230; இந்தத் தோசம்னு சொல்லி எப்படியோ எல்லாம் தட்டிட்டுப் போயிடுச்சு அப்புறம் அப்பாதான் வேற வழியில்லாமல் உங்களுக்கே என்னை பண்ணி வச்சிறதுன்னு முடிவு பண்ணினாங்க.</p>
<p style="text-align: justify;">நான் விபரம் புரியாத அந்த வயசுல உங்கள நேசிச்சேன்தான். ஆனா&#8230; அது ஒரு சின்ன சலனம்தான். உண்மையிலேயே அது காதல் இல்ல. எது நட்பு, எது சலனம், எது காதல், எது வாழ்க்கைனு யோசிக்க எனக்கு அப்ப அறிவு போதல.<br />
இல்லாட்டி ஒரு டாக்டருக்கு மனைவியா ஆகாம ஒரு சாதாரண பள்ளிக்கூட வாத்தியாருக்கு வாழ்க்கப்பட்டு இங்கே இப்படி நிப்பேனா. யாரோ பண்ணின தப்புக்கு எனக்கு ஆயுள் தண்டனையா&#8230;?”</p>
<p style="text-align: justify;">விசும்பலுக்கிடையில், மிக மென்மையாகத் தான் தரையை பார்த்தபடி பேசினாள்.</p>
<p style="text-align: justify;">பாவம்தான், அவளும். நியாயம் தானே அவள் கேட்பதும். நான் தான் மெல்ல,மெல்ல, அதிர்ந்து சிதறினேன். மனதுள்&#8230; மீண்டுமொரு பள்ளி அசெம்பிளியில் எல்லோர் முன்னிலையிலும் ஆடைகளின்றி, பிரம்பால் அடிவாங்கினேன். இந்த முறை உடம்பும் உணர்வும் மட்டுமல்ல உயிருந்தான் வாங்கிக்கொண்டது.</p>
<p style="text-align: justify;">என் ஆறிய ரணங்களை குத்திக் குதறவா இவள் இருபது ஆண்டுகள் காத்திருந்தாள் என்று எண்ண எண்ண&#8230; நதியும், அதன் கதியும், அதன் எழுதிச் சென்ற விதியும், அதள பாதாளத்தில் வீழ்ச்சியுற்று, பாறையில் மோதிச் சிதறிய நீரின் வேதனையுமாய்&#8230; என் வாழ்வும், நானும், என் மனமும்.<br />
எல்லோரும் நாங்கள் ஒரே வீட்டில் வசித்ததால் குடும்பம் நடத்துவதாக கூறினார்கள்.</p>
<p style="text-align: justify;">எனது வாழ்க்கைக்கு கொஞ்சம் அர்த்தத்தையும் மகிழ்ச்சியும் கொடுத்து வந்தது எனது எழுத்துக்கள்தான். என் கவிதை, கதைகளுக்கு வரும் வாசகர் கடிதங்கள் முதல் என் நாட்குறிப்பு வரை அனைத்தும் என் மாமனார், மாமியார், மனைவி சகிதம் அவர்களின் தீவிர புலன்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. மார்க்கெட்டில் என்னைப் பார்த்து புன்முறுவலிக்கும் என் மாணவிகள் முதல் என்னோடு சகஜமாக பேசும் என் சக ஆசிரியைகள் வரை அனைவரும் வேவு பார்க்கப்பட்டார்கள். இருப்பினும் ஒரு குழந்தை பிறந்தது.<br />
அதன் பின்னும் அவளோ, அவளுக்கு துர்போதனை செய்யும் அவளது பெற்றோர்களோ மாறவில்லை.</p>
<p style="text-align: justify;">எனக்கு மண வாழ்க்கை சுகிக்கும்படியாக இல்லை என்பதைக் காட்டிலும் சகிக்கும்படியாக கூட இல்லை என்றுதான் கூறவேண்டும்.<br />
நிதமும் சந்தேகமும் சண்டையும்தான்.</p>
<p style="text-align: justify;">அவையிரண்டும் ஒளியும் நிழலும் போலன்றோ.</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு சண்டைக்குப் பின்னும் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடப்பது நானாகத்தானிருப்பேன்.</p>
<p style="text-align: justify;">என் பழைய தவறு ஒன்றினை முன்னிறுத்தி ஒரு காமாந்தகனாக என்னைப் பாவித்து இழிவாக பேசுவதும் நடத்துவதும், புண்படுத்துவதும், இந்த திருமணமே அதற்கு நான் செய்யும் பிராயசித்தம் என்பதுபோல் குத்திக்காட்டுவதும் வழக்கமாகிவிட்டபின் ஒரு நாள் அச்சு முறிந்தது.<br />
இனியும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்ற நிலைக்கு வந்தபின் நாங்கள் விவாகரத்து செய்து கொண்டோம்.</p>
<p style="text-align: justify;">முப்பத்தைந்து ஆண்டுகால ஆசிரியர் தொழில், என் மாணவர்கள், என் மனைவியும் மக்களுமாய் இருந்து வந்தனர்.</p>
<p style="text-align: justify;">ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்கள்தான் இருந்தன. இதே பள்ளிக்கு மாற்றல் கேட்டு வாங்கி வந்தேன். இங்கேதான் நான் ஓய்வு பெற வேண்டும். அதுவும் இந்த, இதே ஆலமரத்தடியில் நின்று, அதனை தொட்டு, நுகர்ந்து, ஒருநாள் ஒரு பொழுதாவது என் வாழ்க்கையைத் திரும்பி பார்க்க வேண்டும். என் காதலிலும், என் கசந்து போன வாழ்விலும் இந்த ஆலத்தின் பங்கு கணிசமானது.<br />
இங்கே வந்த முதல் நாள் மாலை என் அறைக்கு ஒரு வழக்கு வந்தது.<br />
ஒரு பையனின் பிடரியை பிடித்து தள்ளியவாரே என் அறைக்குள் நுழைந்தார் டிசிப்ளின் ஆசிரியர் மகாதேவன்.</p>
<p style="text-align: justify;">இறுகிய முகமும், நகர மறுத்து பின் மகாதேவனின் சட்டை இழுப்பால் அவரது கையை தட்டிவிட்டு விரைப்பாக முன் நகர்ந்து, முறைப்பான பார்வையால் அவரை பார்த்துவிட்டு என்னை நோக்கினான் அந்த பையன்.</p>
<p style="text-align: justify;">இடது கன்னம் நன்றாகவே வீங்கிப் புடைத்திருந்தது. சட்டை கிழிந்திருந்தது. கேசம் குலைந்திருந்தது.</p>
<p style="text-align: justify;">“சார்&#8230; இந்த ஸ்டுடண்ட் ஒரு பொம்பளபிள்ளய கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்துட்டான் சார். ராஸ்கல்&#8230; முறைக்கிறத பாருங்க&#8230;” என்று கையை ஓங்கி என் பொருட்டு நிறுத்திக் கொண்டார் அந்த ஆசிரியர்.</p>
<p style="text-align: justify;">“இது இந்தப் பள்ளிக்கூடத்து ராசி போலிருக்கு” என்று சிரித்தவாறு சொன்னேன்.<br />
என் சகஜமான குரலும் அதன் கிண்டலான தொனியும் அவரை மேலும் உணர்ச்சி வயப்படுத்தியிருக்கும் போலிருந்தது.</p>
<p style="text-align: justify;">“இதுவர இந்த ஸ்கூல்ல இந்த மாதிரி நடந்ததே இல்ல சார்..” கரகரத்த குரலில் தன்னைத் தற்காத்துக் கொண்டார் மகாதேவன்.</p>
<p style="text-align: justify;">நிதானமாக எழுந்து அந்த பையனின் தோள்களில் கைகளை போட்டு அழைத்து வந்து என் எதிரில் அமர வைத்தேன்.</p>
<p style="text-align: justify;">மிரண்டு விழித்தான் இப்போது. தணிவான குரலில்,”ஏன் தம்பி அப்படிச் செய்தே?” என்றேன்.</p>
<p style="text-align: justify;">என் கனிவு அவனை கரைத்ததோ!</p>
<p style="text-align: justify;">கலவரமிக்க கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க என்னைப் பார்த்தான்.<br />
“பந்தயம் கட்டினான்க சார். இப்படி செஞ்சாத்தான் நான் ஆம்பிளனு சேலஞ்ச் பண்ணினான்க என் ஃபிரண்ட்ஸ்&#8230; ஏதோ ஒரு வேகத்தில் யோசிக்காம செஞ்சிட்டேன் சார்&#8230; சாரிங்க சார்.. மன்னிச்சிடுங்க சார்&#8230;” உடைந்தான் அவன். அழுதான் அவன்.</p>
<p style="text-align: justify;">வாட்டசாட்டமான மகாதேவனைப் பார்த்தேன். அவரது பெரிய விழிகளிலும் மீசையிலும் ஒரு முரட்டுத்தனமான கோபம் இருந்தது.</p>
<p style="text-align: justify;">பையனின் நாசித்துவாரம் வழியாக லேசா ரத்தம் கசிந்தது.</p>
<p style="text-align: justify;">மகாதேவனின் கைகளிலிருந்து பிரம்பை வாங்கி மூலையில் எறிந்தேன்.<br />
எனது ப்ரீஃப்கேஸை மேஜையில் வைத்து திறந்து ஒரு புத்தகத்தை எடுத்து அவரிடம் நீட்டினேன்.</p>
<p style="text-align: justify;">படியுங்கள் என்றேன்.</p>
<p style="text-align: justify;">“அடல்சென்ஸ் சைக்காலஜி&#8230; விடலைப் பருவத்து மனோவியல்” என்றார்.<br />
“உங்களை இந்த புத்தகத்தின் தலைப்பை படிக்கச் சொல்லவில்லை. உள்ளிருக்கும் விஷயங்களைத் தான் படித்துக்கொள்ளச் சொன்னேன். மற்றய ஆசிரியர்களிடமும் இந்த புத்தகத்தை பாஸ் ஆப் செய்யுங்கள்.<br />
பிரம்பும் பலாத்காரமும் பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது.<br />
பொறுமையும், பக்குவமும், புரிந்துணர்வும் தேவைப்படுகிற காலம் இது மிஸ்டர் மகாதேவன். தவறுகளுக்கு தண்டனை என்ன கொடுக்கலாம் என்பதை பற்றி யோசிக்காமல் தவறுகள் ஏன் நடக்கின்றன. அவை நடக்காதவாறு எப்படி அவற்றை தடுத்திருக்கலாம்னு யோசிக்க கத்துக்குங்க. இந்த வயசு மாணவ மாணவிகளிடம் அவர்களுடைய பாலுணர்வு பற்றியும் அவற்றை அவர்கள் எப்படி புரிந்து கொண்டு அவற்றிக்கு வடிகால் கட்டி, வழி நடத்தனும்னு சொல்லிக் கொடுங்க. சப்ளிமேட்டிங் செக்ஸுவல் டிரைவ்ஸ் பற்றி பேசுங்க&#8230; பாலியல் உணர்வுகள், பசி உணர்வு போல் ஒரு சாதாரண உடலியல் நிகழ்வு. அது குற்றம் சார்ந்த ஒன்றாய் அதனால் விளையும் தவறுகளை விவகாரமாக்கி, விகாரமாக்கி, அசிங்கப்படுத்தி அவர்களை கொடூரமாக குரூரமாக தண்டித்து ஒரு சேடிஸ்ட் போல நடந்துக்கிராதீங்க. இதுல எனக்கு நிறைய அனுபவம் இருக்கு&#8230; நீங்க போகலாம்&#8230;” என்றேன்.</p>
<p style="text-align: justify;">ஒரு மாதிரியான குழப்பத்தோடு மகாதேவன் வெளியேறினார்.</p>
<p style="text-align: justify;">“தம்பி, தெரியாம செய்ற தப்புக்கு வருந்தனும். தெரிஞ்சே செய்ற தவறுக்கு உன் சுயகௌரவத்த பாதிக்காம கொடுக்கப்படும் தண்டனையை ஆண்மையோடு ஏத்துக்கணும். ஆனா அதுக்கு முன்னால உங்கிட்டேயும் உன் ஃபிரண்ட்ஸ்க்கிட்டேயும் நான் நிறைய பேசனும்&#8230; தண்டனைய பத்தி அப்புறம் பேசுவோம்&#8230; முதல்ல தவறு ஏன் நடந்ததுன்னு பார்ப்போம். உனக்கு ஆட்சேபன இல்லேன்னா இன்னிக்கு மாலை உங்க வீட்டுக்கு வந்து உங்க பெற்றோர்களிட்ட பேசணும்&#8230; பயப்படாத எந்த விபரீதமும் நடந்துடாது&#8230; அந்த ஃபெஸ்ட் எய்டு பாக்ஸ்ல மருந்து இருக்கு&#8230; எடுத்து கன்னத்தில தடவிக்க&#8230; இப்ப வீட்டுக்கு போ”</p>
<p style="text-align: justify;">இவன் மகாதேவனைக் காட்டிலும் இன்னும் அதிகமான குழப்பத்தோடும் கலக்கத்தோடும் வெளியேறினான்.</p>
<p style="text-align: justify;">தாயின் பக்கத்தில் ஒண்டிக்கொண்டிருக்கும் ஆட்டுக் குட்டியைப் போல் அந்த பங்களாவின் பக்கத்தில் சிறியதாக ஒரு கார்ஷெட். அது இப்போது ஒரு வீடாக ஒடுங்கி நின்றிருந்தது.</p>
<p style="text-align: justify;">வாசலில் சைக்கிளை ரிப்பேர் செய்து கொண்டிருந்தவன் என்னைப் பார்த்தவுடன் அவசரமாக கைகளை துடைத்துக் கொண்டு எழுந்தான்.<br />
முகம் மலர்ந்திருந்தது.</p>
<p style="text-align: justify;">அதில் கொஞ்சம் மரியாதையுடன், பயமும் கலந்து இருந்தது.<br />
அவன் வழிகாட்ட நான் உள்ளே நுழைந்தேன்.</p>
<p style="text-align: justify;">சிறியதாக இருந்தாலும் சுத்தமாகவும் அடக்கமாகவும் இருந்தது ஹால்.<br />
இவர்கள் அந்த பங்களாவாசிகளின் வேலையாட்களாக இருக்கலாம்.<br />
கிழிசல் தெரியாத வண்ணம் குஷனின் உரைகள் கீழிருக்கும்படியாக புரட்டிப் போடப்பட்டிருந்தன.</p>
<p style="text-align: justify;">சுவரில் அவனது பெற்றோர்களின் மார்பளவு புகைப்படம் பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">பக்கத்தில் ஒரு முதியவரின் படம் மாலையோடு.</p>
<p style="text-align: justify;">அருகில் சென்று பார்க்க எத்தனித்த தருணம் உள்ளிருந்து யாரோ வரும் அரவம் கேட்டு எழுந்து நின்றேன்.</p>
<p style="text-align: justify;">அந்த பையனின் தாய்தான். சேலை முந்தானையால் இழுத்துப் போர்த்தியபடி கதவருகில் சற்று தள்ளியே நின்றபடி “வணக்கம்” என்றாள்.<br />
மறுகணம் மெல்ல விசும்பினாள்.</p>
<p style="text-align: justify;">தேம்பினாள்.</p>
<p style="text-align: justify;">குமுறினாள்.</p>
<p style="text-align: justify;">திடீரென்று என் கால்களில் விழுந்து கதறியழுதாள்.</p>
<p style="text-align: justify;">என் பாதங்களைப் பற்றிக் கொண்டு “மன்னிச்சுடுங்க” என்று மன்றாடினாள்.<br />
“அழாத ராஜேஸ்வரி” என்று மட்டும்தான் அப்போதைக்கு என்னால் சொல்ல முடிந்திருந்தது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://shanmugasiva.vallinam.com.my/?feed=rss2&#038;p=87</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கலகக்காரன்</title>
		<link>http://shanmugasiva.vallinam.com.my/?p=82</link>
		<comments>http://shanmugasiva.vallinam.com.my/?p=82#comments</comments>
		<pubDate>Sat, 29 Oct 2011 05:20:55 +0000</pubDate>
		<dc:creator>மா. சண்முகசிவா</dc:creator>
				<category><![CDATA[சிறுகதை]]></category>

		<guid isPermaLink="false">http://shanmugasiva.vallinam.com.my/?p=82</guid>
		<description><![CDATA[<p style="text-align: justify;">கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் நீயூரோ வார்ட் தன் காலை ஏழரை மணிக்கான சுறுசுறுப்புடன் இயக்கம் கண்டது.</p> <p style="text-align: justify;">எந்த நேரத்திலும் நியூரோசர்ஜன் டத்தோ டாக்டர் அறு வந்துவிடுவார்.</p> <p style="text-align: justify;">தாதிகளின் நடையில் ஒரு வேகம்.</p> <p style="text-align: justify;">ஓட்டத்திற்கும் நடைக்கும் இடையிலான ஒரு நகர்வு, இந்தப் பயிற்சி நர்ஸுகளுக்கே உரித்தானது. அவசரத்தைக் காட்டும் உடலின் மொழி அது.</p> <p style="text-align: justify;">தெரிந்தும் தெரியாதபடி சாயமிட்ட உதடுகளில் ஒரு நளினமான “ப்ளிஸ்” [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் நீயூரோ வார்ட் தன் காலை ஏழரை மணிக்கான சுறுசுறுப்புடன் இயக்கம் கண்டது.</p>
<p style="text-align: justify;">எந்த நேரத்திலும் நியூரோசர்ஜன் டத்தோ டாக்டர் அறு வந்துவிடுவார்.</p>
<p style="text-align: justify;">தாதிகளின் நடையில் ஒரு வேகம்.</p>
<p style="text-align: justify;"><span id="more-82"></span>ஓட்டத்திற்கும் நடைக்கும் இடையிலான ஒரு நகர்வு, இந்தப் பயிற்சி நர்ஸுகளுக்கே உரித்தானது. அவசரத்தைக் காட்டும் உடலின் மொழி அது.</p>
<p style="text-align: justify;">தெரிந்தும் தெரியாதபடி சாயமிட்ட உதடுகளில் ஒரு நளினமான “ப்ளிஸ்” என்ற கண்ணியமான கெஞ்சல், உள்ளே நிற்கும் உறவினர்களை ரவுண்ட்ஸ் முடியும் வரையில் வெளியில் காத்திருக்க சொல்லும்.</p>
<p style="text-align: justify;">டத்தோ டாக்டர் அறுவின் பார்வை ஒரு கணம் பரவலாக விசாரிப்பது போல் பார்த்து விட்டு சூர்யாவில் நிலைத்தது. ஒரு இளம் டாக்டர் கையில் ஏந்திய குறிப்புகளைப் பார்த்தவாறு சூர்யாவின் நிலைமையைப் பற்றி விளக்கினார்.</p>
<p style="text-align: justify;">“வைட்டல் சைன்ஸ்.. ஸ்டேடி<br />
பியூபிள் சலக்கிஸ்&#8230;”</p>
<p style="text-align: justify;">டத்தோ, சூர்யாவின் மேல் இமையை விலக்கி, டார்ச் விளக்கின் ஒளியில் பார்வையின் அசைவுகளை பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கினார்.</p>
<p style="text-align: justify;">மூளையின் வீக்கத்தைக் குறைக்க ட்ரிப்பில் மானிட்டால் கலக்க உத்தரவிட்டு விட்டு, &#8220;இளைஞன்&#8230; எனவே கொஞ்ச நாட்கள் காத்திருந்து பார்ப்போம்” என்றார் ஆங்கிலத்தில்.</p>
<p style="text-align: justify;">அவர் சூர்யாவைப் பார்த்தவாறு அதைச் சொன்ன போதிலும், அது தனக்காகச் சொல்லப்பட்டது போன்றிருந்தது செல்வத்திற்கு.</p>
<p style="text-align: justify;">டத்தோவும் அவரைச் சுற்றி நின்ற டாக்டர்கள், தாதியர் குழாம் நகர்ந்து சென்று விட்ட போதிலும் “கொஞ்ச நாட்கள் காத்திருந்து பார்ப்போம்” என்று சொன்னது அதே சப்த அதிர்வுகளுடன் ஒலித்துக் கொண்டே இருந்தது.</p>
<p style="text-align: justify;">விழி மூடிக்கிடக்கும் சூர்யாவைப் பார்த்தான். முற்றிலுமாக சுற்றியிருந்த வெள்ளை பேண்டேஜ் துணியினுள் முழுதுமாக சவரம் செய்யப்பட்ட, துளை போட்டு மூளைக்குள் கசிந்திருந்த ரத்தம் வெளியேற்றப் பட்ட கபாலம்.</p>
<p style="text-align: justify;">மூக்கினுள் செலுத்தப்பட்டக் குழாயினுள் செல்வது ஆக்ஸிஜனாகத்தான் இருக்கும்.</p>
<p style="text-align: justify;">வாயினுள் செருகியிருந்த நீண்ட குழாயின் மறுமுனை ‘படக்&#8230; படக்’ என்று அடித்துக் கொண்டிருக்கும் ஒரு எந்திரத்தோடு இணக்கப்பட்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">சுயமாக சுருங்கி விரியாத நுரையீரலின் வேலையான மூச்சு விடுதலை உடலுக்கு வெளியிலிருந்து செய்து கொண்டு இருந்தது அது.</p>
<p style="text-align: justify;">மௌனம்.</p>
<p style="text-align: justify;">விழிதிறவாத, வாய் பேசாத, செயலற்ற, உணர்வற்ற, உடலின் மௌனம்&#8230; &#8216;கோமா&#8217;. மழை நின்ற தாழ்வாரத்தில் சொட்டும் நீரைப் போலச் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருந்த குளுகோஸ் நின்று விட்டது.</p>
<p style="text-align: justify;">“நர்ஸ்” என்றழைத்தான் செல்வம்.</p>
<p style="text-align: justify;">“ஓ..” என்றவாறு ஓடி வந்தவள் ‘டிரிப்’பை சரி செய்தாள்.</p>
<p style="text-align: justify;">முகத்தை திருப்பாமலேயே “உன் அண்ணனா” என்றாள்.</p>
<p style="text-align: justify;">“இல்லை&#8230; நண்பன்” என்றான் செல்வம்.</p>
<p style="text-align: justify;">“நீ ஒருத்தன்தான் இந்த பத்து நாளா வர்ரே&#8230; வேற யாரும் இவருக்கு இல்லையா&#8230;?”</p>
<p style="text-align: justify;">“இல்லை”</p>
<p style="text-align: justify;">அவளிடமிருந்து ஒரு விசித்திரமான பார்வை.</p>
<p style="text-align: justify;">“இந்தக் கையை அசைக்க விடாம பிடிச்சுக்கணும்&#8230; சரியா ?”</p>
<p style="text-align: justify;">அவள் போன பின்பும் கூட அவள் விட்டு சென்ற பவுடர் வாசனையை நுகர முடிந்திருந்தது.</p>
<p style="text-align: justify;">சூர்யாவின் கையைப் பற்றும் போது, பல யுகங்களாக இவனோடு பழகிய நெருக்கம் தனக்கு எப்படி வாய்த்தது என் எண்ணத் தோன்றியது செல்வத்துக்கு.</p>
<p style="text-align: justify;">கம்போங் லிண்டோங்கன் வீடுகள் உடைபடும் போது கட்டப்பட்டது இந்த நட்பு.</p>
<p style="text-align: justify;">கண்களில் நெருப்புடன். “ஏன் எல்லாரும் அழுதுகிட்டு நிக்றீங்க&#8230; சாமான்கள எடுத்துகிட்டு எங்க போறிங்க&#8230; போவாதீங்க&#8230; போலீஸ்க்கு பயப்படறீங்களா ஏன், என்ன தப்பு செஞ்சீங்க.. எம்.பி. வரட்டும் மந்திரி புகார் வரணும். மினிஸ்டர் வந்தாத்தான் போவோம்னு சொல்லுங்க. போராட்டம் நடத்துனாத்தான் நியாயம் கிடைக்கும்&#8230; கலகம் பண்ணாத்தான் காரியம் நடக்கும்&#8230;” என்ற ஆவேசக்குரலுக்குரியவனான அந்த இளைஞன்தான் சூர்யாவென்று அப்போது செல்வத்திற்குத் தெரியாது.</p>
<p style="text-align: justify;">“ஏப்பா&#8230; கொஞ்சமாவது சண்டை போடேன்&#8230; பொட்டப்பயமாரி போடான்னா போயிறதா&#8230; கோர்ட்டுக்குப் போவேன்.. கேஸ் போடுவேன்னு எதிர்ப்பக்காட்டேன்&#8230; ச்சே&#8230;நீயேல்லாம் என்னா மனுஷம்பா&#8230;” என்று செல்வத்தின் சட்டையைய் பிடித்திழுத்து திட்டியவன்தான், அவனை அழைத்துச் சென்று கொண்டேய்னரில் தன்னோடு குடி வைத்துக் கொண்ட சூர்யா.</p>
<p style="text-align: justify;">அந்த சூர்யாவிடம்தான் வாழ்வு இத்தனைக் காலமாக முரட்டுத்தனம்.. அடிதடி.. வெட்டுக்காயங்கள்.. குண்டர்கும்பல்&#8230; லாக்கப்.. என்று விஷக் கோப்பையை ஏந்திக்கொண்டு தானிருந்திருக்கிறது.</p>
<p style="text-align: justify;">காலம், நெருப்பு வேலியை இவனைச் சுற்றி சதா எழுப்பிக் கொண்டே தானிருந்திருக்கிறது.</p>
<p style="text-align: justify;">இவற்றையெல்லாம் தாண்டிய ரணங்களோடு வாழ்ந்தவன்தான் இப்போது இரவல் மூச்சில் சுவாசித்துக் கொண்டிருக்கின்றான்.</p>
<p style="text-align: justify;">நினைக்க, நினைக்கத் துக்கம் தொண்டையை அடைத்தது.</p>
<p style="text-align: justify;">மௌனமான அழுகையையும், ரகசியமான கண்ணீருமின்றி வேறென்ன தரமுடியும் இந்த சூர்யாவிற்கு.<br />
அவன் காதுக்குள் மெதுவாய் சொன்னான் செல்வம்.</p>
<p style="text-align: justify;">“விழி திற சூர்யா&#8230;<br />
எத்தனை பாலைவனங்களை கடந்தது உன் பாதங்கள்..<br />
எத்தனை நெருப்பாற்றில் நீந்தியவன் நீ..<br />
எழுந்து நட நண்பனே&#8230;<br />
சகலத்தையும்  எதிர்கொள்ளும் யுத்தம் இது<br />
ஜெயிக்கப் போவது நீதான்&#8230; சூர்யா&#8230;<br />
இது சத்தியம்..”</p>
<p style="text-align: justify;">தூரத்தில் மலைகளுக்கும் பின்னால் இரவு முழுக்கப் படுத்துக்கிடந்த வெளிச்சம் மெல்ல எழ எத்தனிப்பது தெரிந்தது.</p>
<p style="text-align: justify;">இருள் நழுவித் தேய்ந்து கொண்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">சூரியப் பிரசவத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது.</p>
<p style="text-align: justify;">பனிக்குடம் உடைந்து சில்லென்ற காற்று முகத்தை வருடியது.</p>
<p style="text-align: justify;">அதிகாலை நேரத்தில், ரயில் பாதைக்குச் சற்றுத் தொலைவில், ஆளுயர வளர்ந்திருக்கும் லாலாங் புற்களின் நடுவில், பிரமாண்டமான ஒற்றைச் செங்கல் போன்ற அந்த கொண்டைனர் மேல் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு இருள் பிரியத்துவங்கும் வானத்தைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான் சூர்யா.</p>
<p style="text-align: justify;">மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">வாழ்வோடு போராடும் கணங்களில் மனதை ஒடுக்கும் வைராக்கியம் வேண்டும் அறிவு மனசிடம் ஆனையிட்டது.</p>
<p style="text-align: justify;">கண்களை மூடிக்கொண்டான்.</p>
<p style="text-align: justify;">கொழுந்து விட்டெரியும் தீயைக் கால்களில் கட்டிக் கொண்டு, பிடரிமயிர் சிலிர்க்கப் புரவி ஒன்று ஓடுகிறது. ஒரு துரிதமான தாளகதியில் சீரான அதன் குளம்போசை தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எங்கிருந்து புறப்பட்டு எதை நோக்கி ஓடுகிறது என்று புலப்படவில்லை. ஆனால் அதன் ஓட்டம், காற்றைக் கிழித்துக்கொண்டு காலத்தைக் கடந்து, கணத்தை வெல்லும் ஓட்டம். இப்போது குதிரையைக் காணவில்லை.<br />
குளம்படி ஓசை மட்டும் காதுகளில்&#8230; மெல்ல.. மெல்ல.. குறைந்து.. நிசப்தம்.</p>
<p style="text-align: justify;">தூரத்தில் ஒரு உருவம். பெண்ணுருவம்.</p>
<p style="text-align: justify;">நெருங்க நெருங்கத் தள்ளிச் செல்லும் உருவம். புகைமூட்டத்தினூடே&#8230; அம்மாவா?</p>
<p style="text-align: justify;">சூர்யாவிற்கு அந்த அதிகாலை நேரத்தில் தனிமையில்.. அழவேண்டும் போலிருந்தது. திடுக்கிட்டுத் திரும்பிய போது&#8230; செல்வம்.</p>
<p style="text-align: justify;">“என்ன தனியா ஒக்காந்து யோசிச்சுகிட்டு இருக்கே&#8230;?”</p>
<p style="text-align: justify;">கொண்டைனர் மேல் ஏறி வந்த செல்வம் கேட்டான்.</p>
<p style="text-align: justify;">“ஒன்னுமில்ல”</p>
<p style="text-align: justify;">“அப்படின்னா?”</p>
<p style="text-align: justify;">“ஒன்னுமே இல்லாத இந்த வாழ்க்கைய பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்”.</p>
<p style="text-align: justify;">முதன்முதலாக சூர்யாவின் குரலில் ஒருவித விரக்தியும் வேதனையும் கலந்திருப்பதை உணர்ந்தான் செல்வம்.</p>
<p style="text-align: justify;">“மனம் விட்டு பேச யாருமில்ல.. மடியில் படுத்து அழக்கூட எனக்கு மனுஷங்க இல்ல.”</p>
<p style="text-align: justify;">“ஏன் சூர்யா.. நானிருக்கேன்&#8230;” செல்வம் அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.</p>
<p style="text-align: justify;">“அப்பப்ப இப்படி தோணும்&#8230; அம்மா நெனவு வரும். அம்மாதான் எனக்கு எல்லாமுமா இருந்திச்சு.. அஞ்சு வயசுல அப்பா கேமரன் மலைல மானேஜரை வெட்டிட்டு ஜெயிலுக்கும் போயிருச்சு&#8230; அப்பா அவ்ளோதான். நானும், அம்மாவும் சுங்கைவே மார்க்கெட்டுல சீன தவுக்கே கிட்ட வேலை பார்த்தோம்&#8230; எட்டு வயசு எனக்கு அப்ப&#8230; அம்மா டி.பி. ஆஸ்பத்திரியில இருமி இருமி செத்துப் போச்சி, கடசியா பார்த்தப்ப கட்டிப் பிடிச்சு அழுதுச்சி&#8230;” அப்பனும் மொரடன்.. நீயும் மொரடன்.. புத்தியா பொளச்சிக்கடா..ன்னு அழுதுச்சி&#8230; இந்த மொரட்டுத்தனம் என் ரத்தத்துல இருக்கு&#8230;”</p>
<p style="text-align: justify;">“இல்ல சூர்யா&#8230; ரெத்தத்தில ஒன்னுமில்ல&#8230; எல்லாம் வாழ்நிலையும் சூழ்நிலையும்தான் காரணம்&#8230;”</p>
<p style="text-align: justify;">“இருக்கும்&#8230; அந்த சின்ன வயசுல அந்த சீனத்தவுக்கே கிட்ட வாங்கின அடி&#8230; பட்ட காயம்&#8230; என்னை மொரடனாக்கிடுச்சி&#8230; இல்லாட்டி நானும் ஒன்ன மாதிரி பாட்டு, கவிதைனு எழுதுவேன்&#8230; காலிப்பயல்க சிநேகம் எனக்குத் தேவப்பட்டது&#8230; அதுல கொஞ்சம் அன்பும் பாதுகாப்பும் இருந்தது. அடிதடியில வீரம் இருந்திச்சி&#8230; பொழச்சிக்கறதுக்கு அது தேவப்பட்டுச்சி&#8230; இந்தாப் பாரு&#8230;”</p>
<p style="text-align: justify;">கழுத்தின் பக்கவாட்டில் ஆரம்பித்து, இடது தோள்பட்டையில் இறங்கி நீண்டு படுத்திருந்தது அந்த தழும்பு, பாறை மேல் சயனித்திருக்கும் ஒரு மலைப் பாம்பு போல்.</p>
<p style="text-align: justify;">அந்த வெற்றுடல் பரமபதத்தில் ஆங்காங்கே நீண்ட, குட்டையான, தடித்த, மெல்லிய தழும்புகள் மின்னின திசைக்கொன்றாக.</p>
<p style="text-align: justify;">“வெட்டுக்காயங்கள காட்டி பீத்திக்கிரென்னு நெனைக்கிரியா&#8230; இல்ல வெக்கப்படுறேன்&#8230; சக மனிதன காயப்படுத்துனதுக்கும் காயம்பட்டதுக்கும், மனசு நொந்துதான் சொல்றேன்..”</p>
<p style="text-align: justify;">“உனக்குள்ள அந்த மாற்றம் எப்படி நடந்துச்சி?”</p>
<p style="text-align: justify;">“தெரியல&#8230; எல்லாத்துக்கும் காரணம் இருக்குத்தான்&#8230; கரெக்டா சொல்லத் தெரியல எனக்கு&#8230; எல்லாத்துக்கும் காரணம் கண்டுபிடிச்சிட முடியாதும்தான்&#8230; ஒன்னைப்பார்த்த உடனேயே எனக்கும் உனக்கும் சிநேகம் உண்டாச்சி&#8230; எப்படி&#8230; யார் யாருக்காகவோ, எது எதுக்கோ சண்டைப்போட்டுக்கிட்டு வெட்டு குத்துன்னு திரிஞ்சாலும் மனசுக்குள்ள ஒரு குரல்&#8230; அம்மாவோட குரலோ&#8230; இதெல்லாம், தப்பு தவறுன்னு சொல்லிக்கிட்டே இருந்திச்சு. அழுக்குச் சட்டையோட குப்பமேட்ல நிக்கிர சின்னப் பசங்கள பார்த்தேன். தோட்டத்த விட்டுட்டு இங்க தெருவுல நிக்கிர நம்ம பொம்பளைங்கள பார்த்தேன்&#8230; ஒன்னைமாதிரி&#8230; என்னை மாதிரி&#8230; படிக்க ரெடி&#8230; ஒழைக்க ரெடி&#8230; ஆளு படுத்து எந்திரிக்க ஒரு கூரை கூட இல்லாமத் தவிக்கிற பையன்கள பார்த்தேன்&#8230; மனசுல கொஞ்சோண்டு ஈரம் இருந்தாப் போதும் செல்வம்&#8230; மனசு தானா மாறும்&#8230; ஒரு நாள் தோனிச்சிச்சு, சண்டப் போட வேண்டிய எதிரியே வேரென்னு&#8230; அப்புறந்தான் மாறினேன்னு நினைக்கிறேன்.”</p>
<p style="text-align: justify;">“சூர்யா உலகத்துல நடக்கற அநியாயத்துக்கெல்லாம் ஒன்னாலயும் என்னாலயும் போராட்டம் நடத்தி ஜெயிக்க முடியாது&#8230; நம்ம நம்ம முன்னேற்றதான் நாம பார்த்துகனும்.”</p>
<p style="text-align: justify;">“போராடனும் செல்வம்&#8230; நமக்காகவும் மத்தவுங்களுக்காகவும் போராடனும்&#8230; வாழ்றதுக்கு அதுலத்தான் அர்த்தம் இருக்குதுன்னு தோனுது&#8230; அநியாயத்த எதிர்க்க பயப்படக்கூடாது&#8230; நீ சொகுசா வாழ்ந்தவன்&#8230; உனக்குத் தெரியாது&#8230; எனக்குத் தான் தெரியும். வாழ்றது எவ்ளோ கஷ்டம்னு&#8230; என்கிட்ட இருக்கறது இந்த உடம்பும் தைரியமும்தானே&#8230; என்ன மாரிப்பட்ட மனுசங்களுக்காக போய் சண்டப்போட்றதுதான் எனக்கு சந்தோசமா இருக்கு&#8230; நா இழக்கறதுக்கு ஒன்னுமில்லை செல்வம்&#8230; அம்மா சொன்ன மாதிரி நா மொரடன்தான். நாயமான, யோக்யமான மொரடனா இருந்துட்டுப் போரெனே&#8230; அம்மா இத கேட்டா செல்லமா திட்டும்.. உள்ளுக்குள்ள சந்தோசப்படும்.. இப்பெல்லாம் அடிக்கடி அது நெனவுத்தான்&#8230;” குரல் தழுதழுந்தது. மேலே பேச முடியாமல் ஏதோ தடுத்தது.</p>
<p style="text-align: justify;">செல்வம் சூர்யாவின் கைகளைப் பற்றிக் கொண்டான். நேசமிக்க கணங்களின் துளிகள் அவை.</p>
<p style="text-align: justify;">“சூர்யாவுக்கு நீதான் ஜாமின் எடுத்து கூட்டுபோக வந்திருக்கியா?” குரலில் ஒரு முரட்டுத்தனம் இருந்தது. அது போலிஸ் குரல். அப்படித்தான் இருக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">“யெஸ்” பவ்யமாக பதில் அளித்தான் செல்வம்.</p>
<p style="text-align: justify;">“என்னடா ‘யெஸ்’ ; தமிழ்ல பேச மாட்டீயா?” அதிகாரத்தோடு ஏளனமும் சேர்ந்துகொண்டது.</p>
<p style="text-align: justify;">&#8216;டா&#8217; என்பதில் இருந்த அலட்சியம். மரியாதைக் குறைவு கோபத்தை ஏற்படுத்தினாலும், தமிழில் பேசச் சொன்னது சந்தோஷமாக இருந்தது.</p>
<p style="text-align: justify;">“நீ என்ன பன்ரே?”</p>
<p style="text-align: justify;">“ஏ.டி.சியில எல்.எல்.பி படிக்கிறேன்&#8230; ரெண்டாவது வருஷம்”, குரல் கோபத்தைக் காட்டி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான் செல்வம்.</p>
<p style="text-align: justify;">சிகரெட் நுனியில் நெருப்பு பற்றிக்கொள்ளும் தருணத்தில் வந்த இந்த பதில், தலையை நிமிர்த்தி செல்வத்தைப் பார்க்கச் செய்தது. லைட்டரை அணைத்த கையோடு பற்ற வைக்கப்படாத சிகரெட்டை எடுத்து விட்டு செல்வதைக் கூர்மையாக பார்த்தார் இன்ஸ்பெக்டர் சந்திரன்.</p>
<p style="text-align: justify;">“சிட்&#8230; உட்காருப்பா.. ஒன் பேர் என்ன?”</p>
<p style="text-align: justify;">வார்த்தைகளில் இப்போது கொஞ்சம் மரியாதையும், குரலில் லேசான குழைவும் இருந்தது.</p>
<p style="text-align: justify;">“தேங்க்ஸ்” என்றவாறு உட்கார்ந்து கொண்டான்.</p>
<p style="text-align: justify;">“சூர்யாவை எப்படி தெரியும்&#8230; சொந்தமா ஃபிரண்டா?”</p>
<p style="text-align: justify;">“இப்பத்தான்.. ஒரு ரெண்டு வருஷமா&#8230; நெருக்கமான சிநேகம் சார்&#8230; என் படிப்புக்கு அவன்தான் பைனான்ஸ் பண்றான். அவன் நல்லவன் சார்&#8230; முழுநேரமா லாரி கிளினரா இருக்கான். இப்படி எங்கேயாவது போராட்டம்னா முன்னுக்குப் போய் நிப்பான்&#8230; சொன்னா கேக்கமாட்டான்.</p>
<p style="text-align: justify;">“வாட்&#8230;?” அதிர்ச்சி விழிகளில் இறங்கி வார்த்தையில் வெளிப்பட்டது.</p>
<p style="text-align: justify;">“இவன் ஒரு கேங்ஸ்டர்&#8230; எவனோ காசு கொடுக்ரான்னு ஃபேக்டரியில் கலாட்டா பண்ணியிருக்கான்&#8230; இவனா நீ படிக்க பணம் கொடுத்து உதவி பன்றான்?”, நம்பிக்கை அற்ற குரலில் பேசினார்.</p>
<p style="text-align: justify;">“சார்&#8230; சூர்யா முந்தித்தான் கேங்ஸ்ட்ரா இருந்திருக்கான். இப்ப இல்லையே&#8230; இப்பக்கூட அந்த சுங்கைபூலோ கெமிக்கல் ஃபேக்டரியில ஸ்டிரைக் பண்ண காரணம் இருக்கு&#8230; ரொம்ப கொடிய டோக்சிக் கெமிக்கல் சார். அங்க&#8230; எத்தனை வொர்கர்ஸ் பாதிக்கப்பட்ருக்காங்க&#8230; கேட்கப் போன இருபது பேரையும் வேலய விட்டு நிறுத்திட்டாங்க. சூர்யாவை விட்டா அவங்களுக்கு வேற ஆளு இல்ல&#8230;”</p>
<p style="text-align: justify;">“அதுக்கு யூனியன் இருக்கே&#8230; இவனுக்கு ஏன் இந்த வம்பு?”</p>
<p style="text-align: justify;">“யூனியனா? இவன் போய் சத்தம் போட்ட பின்னாலதான் சார் யூனியனே கண்ண முழிச்சுப் பாக்குது&#8230; இனிமேதான் அது படுக்கைய விட்டு எந்திருக்கனும்&#8230; பாவம் சார்&#8230; அவங்கள விடுங்க&#8230;”</p>
<p style="text-align: justify;">“யெனிவே. இவன் மேல கம்பிளேண்ட் கொடுத்திருக்காங்க.. செக்யூரிட்டி கார்டை அடிச்சிருக்கான் எம்.பி போன் பண்ணியிருக்கார்.. ஆக்ஷன் எடுத்துதான் ஆகனும். நீ எப்படிப்பா இவனோடு சேர்ந்தே? ஹோம் டவுன் எது?”</p>
<p style="text-align: justify;">“சுங்கைப் பட்டாணி&#8230; அப்பா தமிழ் ஸ்கூல் டீச்சர்&#8230; இப்ப இல்ல. அவருக்கு டீச்சர் வேல மட்டும்தான் தெரியும். காசு சேர்க்க தெரியல.. எந்தக் கட்சியிலும் இல்ல. வறுமையை எனக்கு உயில் எழுதி வச்சிட்டு போயிட்டாரு&#8230; அம்மா வீட்டு வேல செய்ராங்க&#8230; நாலு தங்கச்சிங்க&#8230; எல்லாம் ஸ்கூல்ல.. நான் கெட்க்கியில பார்ட் டைம் வேல செய்றேன். சூர்யா ஹெல்ப் பண்றான். படிச்சுக்கிட்டு இருக்கேன். வாழ்க்கையோட ஸ்ட்ரகல் தான்&#8230; சார்&#8230;”</p>
<p style="text-align: justify;">“ஆச்சரியமா இருக்குப்பா&#8230; நல்லா படிங்க&#8230; எதுவும் உதவி வேணும்னா கேளுங்க&#8230; ஆனா சூர்யா யாரோ காசு கொடுத்துத்தான் கலாட்டா செய்ரான்னு நெனச்சேன்&#8230;” குரலில் நம்பிக்கை இப்போது லேசாக இழையோடியது.</p>
<p style="text-align: justify;">“நோ.. போனமாசம் கிரீன் மௌண்ட்டன் தோட்டத்துல சம்பளப் பிரச்சினைக்கு சூர்யாதான் போய் ஸ்டிரைக் பண்ணான். யுபிஎம் எஸ்டேட்ட வித்தவனுங்க ஸ்கூல் நெலத்தையும் சேர்த்து வித்துட்டான்க&#8230; சூர்யாதான் அந்த தோட்டத் தொழிலாளிகளை எல்லாம் கூட்டிக்கிட்டு போனான் அந்த டெவலப்பர்கிட்ட&#8230; அந்த டெவலப்பரோட அடியாளுங்ககிட்ட அடியும் வாங்கிட்டு வந்தான்.. மொரடன் தான்.. ஆனா நியாயமானவன் சார்&#8230;”</p>
<p style="text-align: justify;">“கேட்க நல்லாத்தான் இருக்கு&#8230; மிஸ்டர் செல்வம். சட்டத்தை மீறக்கூடாது&#8230; வன்முறை கூடாது. இத சூர்யாகிட்டச் சொல்லுங்க&#8230;”</p>
<p style="text-align: justify;">“உண்மதான்.. இந்த வன்முறை கொஞ்சம் வித்தியாசமானது. ‘தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’னு சொன்னார் ஒரு கவிஞன்&#8230; இதுல இருக்குற வன்முறைதான் சூர்யாவுடைய வன்முறை. “கெடுக உலகம் இயற்றியான்’னு சொன்னாரு ஒரு புலவர்&#8230; அதுல இருக்குற வன்முறைதான் சூர்யாவுடைய வன்முறை எக்ஸிஸ்டென்ஷியலியம்.. படிச்சிருக்கீங்களா சார்&#8230; தமிழ்ல இருத்தலியல்னு சொல்றது” உதடுகள் துடித்தது&#8230; வார்த்தைகள் கட்டிப் புரண்டு கொண்டு வந்தது.. நெற்றியில் வியர்வைத் துளிகள்&#8230; நண்பனைப் பற்றி நல்லதாக சொல்லவேண்டும்&#8230; நிறையச் சொல்லி அவன் நல்லவன் என்பதை நிலைநிறுத்த வேண்டும் என்ற அவசரம்.</p>
<p style="text-align: justify;">“பொறுங்க&#8230; பொறுங்க மிஸ்டர் செல்வம் ரொம்ப உணர்ச்சிவசப்படறீங்க&#8230;”</p>
<p style="text-align: justify;">‘அந்த உடுப்புக்குள்’ இருக்கையில் உணர்ச்சியே தோன்றக் கூடாதோ இவருக்கு என்று எண்ணத் தோன்றியது.<br />
“இண்டியன் கேங்ஸ்டர்ஸ்&#8230; சீக்ரட் சொஸைட்டிக்கு நான்தான் பொறுப்பு&#8230; எங்கள பொறுத்த வரையல அவன் கேங்ஸ்டர்தான்&#8230; ரிகாட்ஸ் அதத்தான் சொல்லுது&#8230; ஒனக்குத் தெரியுமா அவன் உண்மையான பேரு ஆறுமுகம். அப்பன் ஏதோ கூலி பிரச்சனையில மானேஜர வெட்டிட்டு ஜெயில்ல இருக்கான்&#8230;”</p>
<p style="text-align: justify;">எல்லாமே தெரியும் சார்&#8230; நீங்க பேப்பர்ல, ரிக்காட்ல எழுதியிருக்கறத பாத்துட்டு சொல்றீங்க.. நா அவனோடு அன்றாடம் சாப்பிட்டு, தூங்கி, எந்திரிச்சு, அழுது, சிரிச்சி, வாக்குவாதம் பண்ணி, வாழ்க்கய பகுந்துகிட்டு சொல்றேன்.. சொல்லப்போனா அவன் என்னை காட்டிலும் நல்லவன் சார்&#8230;” மனசுக்குள் “மிஸ்டர் சந்திரன் அவன் உன்னைக் காட்டிலும் நல்லவன்” என்று சொல்லத் தோன்றினாலும் அப்படிச் சொல்வது இப்பொழுது இங்கே புத்திசாலித்தனமாகாது என்பதால் “என்னைக் காட்டிலும் நல்லவன் சார்” என்று அந்த ‘என்னை’ அழுத்தத்தோடு சொல்லி முடித்தான்.</p>
<p style="text-align: justify;">“அப்ப அவன் திருந்திட்டான்னு சொல்றீயா&#8230;?” நிதானமாக சிகரெட்டை பற்ற வைத்து, உள்ளிழுத்து, மெல்ல இதழ் வழியே புகையைக் கசிய விட்டவாறு கேட்டார்.</p>
<p style="text-align: justify;">மண்ணுக்குள்ளே ஓடுற ஜீவ நதி மாதிரிதான் எல்லா மனிதன்களுக்குள்ளேயும் ஒரு குணம் ஓடிட்டுத்தான் இருக்கு சார்&#8230; அது அன்பு செலுத்துனுங்கற குணம்&#8230; அதுக்கு வாய்ப்பே இல்லாம ஆக்கிடறது இந்த வாழ்க்க… நமக்கிருக்கிற சமூக- பொருளாதார, அரசியல், கலாச்சார நெருக்கடிக்கு எதிர்வினைதான் இந்த வன்முறை, அக்ரஷன், வயலன்ஸ். சார் நீங்க சட்டத்த மட்டும்தான் பாக்றீங்க.. சமூகத்த.. நீங்க சார்ந்த இந்த சமூகத்த பாருங்க&#8230; நிராதரவான&#8230; நிராகரிக்கப்பட்ட எங்கள மாதிரி&#8230;”</p>
<p style="text-align: justify;">“உஸ்ஸ்.. சாரி செல்வம்&#8230; இது போலிஸ் ஸ்டேசன்&#8230; இது பத்தி இன்னொரு இடத்துல, இன்னொரு சமயத்துல பேசுவோம். நீ இப்ப சூர்யாவ கொஞ்சம் அடக்கிவை. இவன் முகம் தெரியா எதிரிகளோட மோதுரான். அவன்க பிரச்சனைகள தீர்த்துகிற விதமே வேற.</p>
<p style="text-align: justify;">இத டாக்ஸியில் திரும்பும்போது சூர்யாவிடம் சொன்னதற்கு, அவன் சிரித்தான்.</p>
<p style="text-align: justify;">அதே ஏளன, எதற்கும் அஞ்சாத, எதையும் பொருட்படுத்தாத சிரிப்பு.</p>
<p style="text-align: justify;">“நீயும் இன்ஸ்பெக்டரும் உங்களுக்காக மட்டுமே மூச்சு விடுறிங்க&#8230; நான் எனக்கும் மத்தவுங்களுக்கும் சேர்த்தே மூச்சு விடுறேன்.. நம்ம எல்லாத்துக்கும் ஒரு நாள் மூச்சு நிக்கத்தான் போவுது.. உங்களுக்கு நோய் நொடியில நிக்கும்.. எனக்கு ஏதோ ஒரு நல்ல காரியத்துக்காக நிக்கும். நிக்கட்டுமே.. இங்கே பாரு செல்வம்.. நீ சீக்கிரமா இந்த சட்டப்படிப்பெல்லாம் படிச்சி முடிச்சிட்டு சட்டபடி போராடு.. நான் என் வழியில் மோதி பாக்ரேன்&#8230; இதுக்கெல்லாம் பயந்தா வாழ முடியுமா&#8230;?”</p>
<p style="text-align: justify;">இந்த வார்த்தைகளோடும், இந்த வாழ்வோடும் சூர்யா என்ற அந்த இளமனிதன் அடுத்த சில தினங்களில், முகம் தெரியாத சிலரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான், நினைவிழந்த நிலையில்.</p>
<p style="text-align: justify;">முப்பத்திரண்டு நாட்கள் ஜீவமரணப் போராட்டத்திற்குப் பிறகு இப்போது சூர்யாவிற்கு நினைவு திரும்பியிருந்தது.</p>
<p style="text-align: justify;">கடை விழியோரம் கண்ணீர் கசிந்திருந்தது. மெல்ல திறந்த விழி அர்த்தமுள்ள பார்வை பாய்ச்சியது. முகத்தின் உயிர்ப்பின் ரேகை படர்ந்திருந்தது. உடலின் ஒரு பக்கம் செயலிழந்து போயிருந்தது.</p>
<p style="text-align: justify;">“மூளையில் மறுபடியும் ரத்தம் கசியுது. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆபரேசன் பண்ணப் போறாங்க.. எல்லாம் சரியாயிடும்னு நம்பு” &#8211; செல்வத்தைப் பார்த்து மெல்லிய குரலில் பேசிய சூர்யாவின் குரலில் கலக்கம் இல்லை. தெளிவான செய்தி இருந்தது. விழி நீரைக் கட்டுப்படுத்த முடியாமல் செல்வம் நின்றான். ஆபரேஷன் தியேட்டருக்கு ஸ்டெச்சரில் தள்ளிக் கொண்டு போகும்முன் சூர்யா செல்வத்தைப் பார்த்தான். ஏதோ சொல்ல எண்ணுகின்றான் என்று செல்வம் அவன் முகத்தருகே குனிந்தான்.</p>
<p style="text-align: justify;">“என்னை அடிச்சவன்க நம்ம பையன்கதான்&#8230; பிடிபட்டுட்டான்கனு நேத்து இங்க வந்திருந்த இன்ஸ்பெக்டர் சந்திரன் சொன்னாரு.. போய் அவன்களப் பாரு.. பேசு&#8230; அவன்களுக்கு புரியவை&#8230; நம்ம பசங்கதானே&#8230;” இருமல் பேசமுடியாமல் தடுத்தது. முகமும் சொல்லும் ஒரு பக்குவத்தில கனிந்திருந்தது.<br />
நெஞ்சை வருடிக் கொடுத்தான் செல்வம்.</p>
<p style="text-align: justify;">“கலகம் செய்யப்போரேன் செல்வம்.. கடவுள்கிட்ட&#8230; ஜெய்ச்சுடுவேன்.. சண்ட மட்டும் நியாயமா இருந்தா..” மெல்லிய சிரிப்பு.. அதனூடே சலனமற்ற, சரளமான கொஞ்சம் ஏளனம் கலந்த அழுத்தமான வார்த்தைகள். ஸ்டெச்சர் தள்ளப்பட்டு, ஆபரேசன் தியேட்டருக்குள்ளே கொண்டு செல்லப்பட்டான் சூர்யா. கண்ணீரைத் துடைத்து விட்டு ஜன்னலின் வழியே, வெளியே பார்த்தான் செல்வம்.</p>
<p style="text-align: justify;">அங்கே இந்தோனியசக் காடுகளை அழிக்க தனவந்தர்கள் மூட்டிய தீயின் புகை மூட்டம் ஏற்படுத்திய தூசு மண்டலத்தினூடே மங்கலாக இன்னுமொரு சூரியன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://shanmugasiva.vallinam.com.my/?feed=rss2&#038;p=82</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நடப்பு</title>
		<link>http://shanmugasiva.vallinam.com.my/?p=77</link>
		<comments>http://shanmugasiva.vallinam.com.my/?p=77#comments</comments>
		<pubDate>Wed, 28 Sep 2011 11:52:50 +0000</pubDate>
		<dc:creator>மா. சண்முகசிவா</dc:creator>
				<category><![CDATA[சிறுகதை]]></category>

		<guid isPermaLink="false">http://shanmugasiva.vallinam.com.my/?p=77</guid>
		<description><![CDATA[<p style="text-align: justify;">கம்போங் தேசாவின் மற்றைய இல்லங்கள் அந்த நடுநிசியில் துயில் கொண்டிருந்தன. அந்தச் சிறிய வீட்டில் மட்டும் மனித ஆரவாரம் வழக்கத்திற்கும் மாறாக சற்று அதிகமாகவே இருந்தது. தொலைக்காட்சி பெட்டியின் முன்பாக ஐந்தாறு சிறுவர் சிறுமிகள் சற்று நெருக்கமாகவே அமர்ந்திருந்தனர். சற்று தள்ளி நடுநாயகமாய் ஒரு ஈஸி சேரில் பாச்சிஹசான் மடியில் தன் பேரனுடன் அமர்ந்திருந்தார். இருமருங்கும் நாலைந்து ஆண்களும் பெண்களுமாக உட்கார எது தோதாகக் கிடைத்ததோ அதையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு வசதியாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">கம்போங் தேசாவின் மற்றைய இல்லங்கள் அந்த நடுநிசியில் துயில் கொண்டிருந்தன. அந்தச் சிறிய வீட்டில் மட்டும் மனித ஆரவாரம் வழக்கத்திற்கும் மாறாக சற்று அதிகமாகவே இருந்தது. தொலைக்காட்சி பெட்டியின் முன்பாக ஐந்தாறு சிறுவர் சிறுமிகள் சற்று நெருக்கமாகவே அமர்ந்திருந்தனர். சற்று தள்ளி நடுநாயகமாய் ஒரு ஈஸி சேரில் பாச்சிஹசான் மடியில் தன் பேரனுடன் அமர்ந்திருந்தார். இருமருங்கும் நாலைந்து ஆண்களும் பெண்களுமாக உட்கார எது தோதாகக் கிடைத்ததோ அதையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு வசதியாக அமர்ந்துகொண்டிருக்க, தொலைக்காட்சிப் பெட்டி ஜகார்த்தாவில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் நெடுந்தூர நடைப்போட்டியை நேரிடையாக அஞ்சல் செய்து கொண்டிருந்தது.<br />
<span id="more-77"></span><br />
சிறுவர்களில் குணசேகரன் மட்டும் அடிக்கடி எழுந்து டிவியில் சப்தத்தை எந்தக் காரணமுமின்றி கூட்டுவதும் குறைப்பதுமாகவும் இருந்தான். அவன் கைகள் பரபரத்தற்கு இப்பொழுது இதுதான் அவனால் செய்ய முடிந்தது. கால்களின் பரபரப்பை, உந்துதலை அங்கே தொலைக்காட்சியில் தெரியும் தன் தந்தையின் கால்களுக்குள் மானசீகமாக இடமாற்றம் செய்து கொண்டிருந்தான்.</p>
<p style="text-align: justify;">குணாவிற்கு பதின்மூன்று பதினான்கு வயதுதான் என்றாலும் பார்ப்பதற்குக் கொஞ்சம் வயதுக்கு மீறிய வளர்ச்சி போல் தோன்றும். தந்தை நடைவீரர் நல்லசாமியின் மூன்று குழந்தைகளில் இவனே மூத்தவன். அவரைப் போலவே ஒல்லியான தேகம். அவர் சற்று கறுப்பு. அவனோ தாயைப் போல சற்று மாநிறம். சுறுசுறுப்போடு கூடிய துருதுருத்த பார்வை. களையான முகம்.</p>
<p style="text-align: justify;">தந்தையிடம் குணாவிற்கு எப்பொழுதுமே ஒரு லயிப்பு, பெருமை. டிவியின் சப்தத்தைக் கூட்டி வைத்துவிட்டு வந்து அமரும்போதெல்லாம் “இவர் என்னுடைய அப்பா. இதோ இந்தப் போட்டியில் முதலாவதாக வரப்போகிறாரே அவர்தான்&#8230; என்னுடைய அப்பா” என்பது போன்ற கம்பீரமான ஒரு பார்வையை உடன் அமர்ந்திருக்கும் மற்ற சிறுவர்களிடம் பூரிப்போடும் பெருமையோடும் செலுத்திவிட்டு அமர்ந்துகொள்வான். திடீரென்று எழுந்து அந்த ஹாலின் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு “இப்பத்தான் இந்த டிவியில நல்லாத் தெரியும்” என்பது போல் ஏதோ சொல்லிவிட்டு எல்லோரையும் பார்த்தான். டிவியில் கண்களையும் புலன்களையும் பதித்து ஒன்றிப்போன அந்தப் பெரியவர்கள் இவன் செய்ததையோ சொல்வதையோ கண்டு கொள்ளாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.</p>
<p style="text-align: justify;">இன்னும் சுமார் பத்து நிமிடங்களில் மலேசியாவைப் பிரதிநிதிக்கும் நல்லசாமியா அல்லது அவருக்குச் சற்று முன்னால் நடந்து சென்று கொண்டிருக்கும் தாய்லாந்து வீரரா தங்கப்பதக்கத்தைப் பெறப்போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். நல்லசாமியின் முகத்தில் சோர்வின் ரேகையே இல்லை. உடலை வேர்வை ஆராதித்துக் கொண்டிருந்தது. இடுப்பை வளைத்து நெளித்து, மடக்கிய கைகளை முன்னும் பின்னுமாகப் பக்கவாட்டில் வீசி வீசி அவர் நடக்கிறாரா அல்லது மெல்ல ஒடுகின்றாரா என்று சொல்ல முடியாது. இரண்டுக்கும் இடையிலான ஒரு நடையோட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;">அந்த விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவும் நல்லசாமியும் பெறப்போகும் முதல் தங்கம் இதுவாகத்தான் இருக்கும். இவருக்கு அந்தத் தேசத்து ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்து உற்சாகப்படுத்துவது இங்கே எல்லோருக்கும் கொஞ்சம் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவுமே இருந்தது.</p>
<p style="text-align: justify;">மெல்ல மெல்ல எல்லோருடைய மனதிலும் ஒரு பரவலான பரபரப்பு. காரணம் தாய்லாந்து வீரரின் நடையில் ஒரு தளர்ச்சி. முகத்தில் வேதனையின் சுளிப்பு. தோல்வியின் அருகாமையில் வெற்றி நழுவுகையில் ஏற்படும் ஒருவித நம்பிக்கையற்ற சோர்வு. இதற்கு மாறாக நல்லசாமியின் நடையில் ஒருவித அதீத வேகம் அதிகரிக்க, ஏதோ முடுக்கிவிடப்பட்ட எந்திரம் போல் அவர் நடக்க, வெகு அனாயசமாகத் தாய்லாந்து வீரரை முந்திச் செல்கிறார். நேர்முக வருணனையாளர் உணர்ச்சி வயப்பட்டு நாத்தழுதழுக்க உச்சஸ்தாயியில், நிகழ்ந்து கொண்டிருக்கும் வெற்றியை வார்த்தைகளாக்கி நெகிழ்ந்து கொண்டிருக்கிறார். குணா பக்கத்திலிருக்கும் நண்பனின் கைகளைப்பற்றி அழுத்திக் கொண்டு, எச்சிலைகூட விழுங்க மறந்தவனாய், உடலும் முறுக்கேறி, மூச்சை சற்று நேரம் நிறுத்தி, விழிகளை அகல விரித்து&#8230;</p>
<p style="text-align: justify;">இந்த மாதிரியான நேரங்களில் ஜெயலெட்சுமி தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள இயலாது தவிப்பாள், கணவனின் வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பாவிக்கும் பக்குவம் இருந்தென்ன, இந்தப் போட்டியின் உச்சக்கட்டத்தில் அவளால் உணர்ச்சி வயப்படாமல் இருக்க முடியவில்லையே, இது ஒரு விளையாட்டுப் போட்டி தானே என்ற உணர்வுக்கு அப்பால் இந்த வெற்றிக்குத் தன் கணவன் தன்னையே அர்ப்பணித்து, வருத்திக் கொள்கிறாரே என்று கசிந்து, கரைவாள். கண்களில் நீர்மல்க யாரும் பார்த்துவிடாதவாறு ஏதோ வேலையாகப் போவது போல் சமையலறைக்குச் சென்று கண்ணீரை துடைத்துக் கொள்வாள்.</p>
<p style="text-align: justify;">ஜெயலெட்சுமி வெளியில் வந்து எல்லோருக்கும் காபி பரிமாறுகையில் வீடே கலகலப்பாயிருந்தது. தன் கனத்த குரலில் பாச்சிஹசான் மனம்திறந்து பாராட்டிக் கொண்டிருந்தார். நல்லசாமியால் நமது நாட்டிற்குப் பெருமை என்று மலாய்க்காரரான அவர் புகழ்வதைக் கேட்கையில் எல்லோருக்குமே ஒரு நிறைவு. ஒரு நெகிழ்வு. அந்தக் குடியிருப்பில் அவர்தான் எல்லாருமே மதிக்கத்தக்க பெரியவர். தமிழர்களிடமும் மலாய்க்காரர்களிடமும் சமமாக சகஜமாக ஒருவித வாஞ்சையோடு பழகும் நல்ல மனிதர்.</p>
<p style="text-align: justify;">எல்லோரும் விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள். ஜெயலெட்சுமி குழந்தைகளைத் தூங்க வைக்கப் படுக்கையை எடுத்து விரித்துக் கொண்டிருந்தாள். மனதில் சொல்ல இயலாத ஓர் அமைதி. ஓர் ஆனந்தம்.</p>
<p style="text-align: justify;">குணா நாளை பள்ளியில் அவனுக்கு கிடைக்கவிருக்கும் பாராட்டுக்களை எண்ணிப் பூரித்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட மலேசியாவில் எல்லோருமே இன்று அப்பாவையும் அவரின் சாதனையைப் பற்றியும் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதாக அவன் நம்புகையில், இது வரையில் உணர்ந்திராத ஒருவிதமான பெருமை கலந்த மகிழ்ச்சி நெஞ்சமெல்லாம் பொங்கி பரவியது.</p>
<p style="text-align: justify;">அதே இன்ப மயமான உணர்வு தந்தையை வரவேற்க சுபாங் ஏர் போட்டில் காத்திருக்கையிலும், நல்லசாமிக்கு நகர மேயர் மாலை அணிவித்து அணைத்துக்கொண்ட போதும், பின் நல்லசாமி குணாவை அங்கிருந்த பிரமுகர்களுக்கு அறிமுகப்படுத்தும் போதும், பின் ஒரு பெரிய கரு நீலக் காரில் அவர்கள் இருவரையும் வீட்டருகில் வரையில் ஏற்றி வந்த போதும், மனமெல்லாம் வியாபித்து, உடலெல்லாம் ஊடுருவி ஆட்கொண்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">இந்த மகத்தான வெற்றியை நல்லசாமி, உறவினர்கள், நண்பர்கள். அலுவலக ஊழியர்கள், ஏன் நாடே கொண்டாடியது. ஆனால் அவர்களையெல்லாம் விட குணாதான் அவ்வெற்றியை மொத்தமாக உள்வாங்கி மகிழ்ந்தான். அந்த வெற்றி அவனுக்கு என்னவெல்லாமோ அர்த்தங்களை சொன்னது. அப்பாவின் பல ஆண்டுகால கடுமையான உழைப்பு. வெற்றியை இலக்காகக் கொண்டு அதை நோக்கி முன்னேறிய உறுதி, அதற்குத் தேவையான மனோபலம்.. அதன் பலன்கள்&#8230; என்று என்னவெல்லாமோ அவன் புரிந்துகொண்டான்.</p>
<p style="text-align: justify;">நினைவு தெரிந்த நாள் முதலாய் தான் தெரிந்து வைத்திருந்த அப்பாவை இப்போது புதிய பார்வையில், புதிய அர்த்தம் தொனிக்க, புரிய ஆரம்பித்ததை, புரிந்து கொண்டதாகத் தோன்றியதை எல்லாமுமாகச் சேர்த்து மனதுக்குள் பத்திரமாக சேமித்துக் கொண்டான்.</p>
<p style="text-align: justify;">புகழ் எவ்வளவு சுகமானது என்பதும், அது எவ்வளவு போதையானது என்பதுமான உண்மையும் அவனுக்கு புதிது.</p>
<p style="text-align: justify;">அதுவரையில் ஒரு சாதாரண டெலிகாம்ஸ் ஊழியராக இருந்த அப்பா, பத்திரிக்கைகளில் படமாக வந்ததும், தங்கப்பதக்கத்தை தூக்கி காட்டியபடி சரிந்து பால்பவுடருக்கு விளம்பரம் ஆனதும், ஐம்பது வெள்ளி சம்பளத்தில் உடனடியாக உயர்த்தப்பட்டதும், அது வரையில் ஒதுங்கியிருந்த சொந்தங்கள் திடீரென்று பாசமாக வழிந்ததும், கூட்டத்தோடு கூட்டமாகப் பள்ளியில் இருந்த அவன் குறிப்பிடதக்க ஒருவரின் மகன் என்று ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் அடையாளம் காட்டப்பட்டதும், தினமும் தினமும் பத்திரிகைகளின் விளையாட்டுச் செய்திகளில் அப்பாவை பற்றி ஏதும் வந்திருக்கிறதா என்று அவனை ஆவலுடன் பார்க்க வைத்ததுமான அந்த வெற்றியின் பல பரிமாணங்களை, அவன் மீது அது ஏற்படுத்தியிருந்த பாதிப்புக்களை, தனித்தனியாக சிந்திக்கச் சிந்திக்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனந்தமாகவும் இருந்தது.</p>
<p style="text-align: justify;">சமீப காலமாக அவனுடைய மன உலகத்தில் ஒரு புதிய பிரதேசத்தில் உற்சாகமாகவும் உல்லாசமாகவும் உலவ முடிந்தது சற்று புதுமையாகத்தான் இருந்தது.</p>
<p style="text-align: justify;">“உன் அப்பா எடுத்த பெயரை காப்பாத்துறாப்பல நல்லா படி” தலைமையாசிரியரின் இந்த அறிவுரை வழக்கமானதானாலும் இப்போது அது மனதில் ஆழமாகப் புதிய அர்த்தகனங்களுடன் இறங்கி பரவலாகப் பறந்தது. தன்னைப் பற்றியதான தன்னுடைய பார்வையுமே மாற்றம் கொண்டது.</p>
<p style="text-align: justify;">அவன் பாடங்களை மனனம் செய்யும் போதெல்லாம் மனத்திரையில் அப்பா கால் வலிக்க, இடுப்பு நோக வேகவேகமாக நடப்பார்.</p>
<p style="text-align: justify;">இந்த இன்பமயமான நிகழ்காலம், ஒரு நினைவு கூறத்தக்க கடந்த காலமாக மாற இரண்டு ஆண்டுகள் ஆயின. மாறுதலுக்கெல்லாம் மாறுதலாக ஈராண்டுகள் கழித்து மணிலாவில் நடந்த போட்டி அமைந்தது.</p>
<p style="text-align: justify;">நடைவீரர் நல்லசாமி போட்டிக்குப் புறப்படும் முன்பாகவே தங்கப்பதக்கத்தை பத்திரிக்கைத்துறை விளையாட்டு விமர்சகர்கள் அவருக்கே உறுதி செய்துவிட்டது போன்று எழுதித் தள்ளினார்கள். மலேசியா பெறப்போகும் மொத்தத் தங்கப்பதக்கங்களில் நிச்சயமானது, நிச்சயமில்லாதது, உறுதியாக எதிர்பார்ப்பது, அரைகுறையாக எதிர்பார்ப்பது என்றெல்லாம் கணக்குப்போட்ட விமர்சகர்கள், ஜகர்த்தாவில் நடந்த போட்டியில் வெற்றிக்கு முன்பாக நல்லசாமியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத குறையை, தங்களின் முந்திய கணிப்பின் பலஹீனத்தை நிறைவு செய்வது போல் இம்முறை தங்கத்தில் நல்லாசமியின் பெயரைப் போட்டிக்கு முன்பாகவே மணிலாகாரர்கள் பொறித்து விட்டதைப் போன்று எழுதினார்கள்.</p>
<p style="text-align: justify;">ஆனால் நல்லசாமியோ, அந்தப் போட்டியில் ஏழாவது நபராக முன்னே சென்றவர்களை விரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தார்.</p>
<p style="text-align: justify;">வயதாகி விட்டது, போதிய பயிற்சி இல்லை என்று விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்களும், அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த முட்டை, பால் அலவன்சு நீண்ட காலமாக நிறுத்தப்பட்டது ஒரு காரணம் என அவர் அலுவலகத் தொழிற்சங்கத் தலைவரும், வலதுகால் நரம்பொன்று திடீரென்று வீங்கியதால் வந்த வினையென்று ஸ்போர்ட்ஸ் கவுன்ஸில் தலைவரும், மருத்துவரும், மணிலாவின் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் கொசுவலை கொடுக்காததால் முந்தின இரவு நல்லாசமியும் தானுமே தூங்க இயலாமல் போய் விட்டது ஒரு காரணம் என்று அவரது கோச்சுமாக ஆளுக்கு ஆள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை அறிக்கை மேல் அறிக்கை விட்டுத் தோல்வி என்ற கசப்பான உண்மைக்கு நியாய முலாம் பூச முயன்றனர். தோல்வியின் தாக்கத்தை சம்பந்தப்பட்டவர்கள் எங்காவது எவர் மேலாவது இறக்கி வைக்க வேண்டுமே!</p>
<p style="text-align: justify;">ஒரு பொன்னான வாய்ப்பை, தங்கத்தை இழந்தது நல்லசாமிக்கும், ஸ்போர்ட்ஸ் கவுன்சலுக்கும், ஏன் நாட்டிற்குமே ஏமாற்றமாக இருந்தது. இப்பவுமே அந்த ஏமாற்றத்தை வலிக்கும் தன் நெஞ்சில் வேதனையுடன் மொத்தமாக உள்வாங்கி வருந்தியவன் குணாதான்.</p>
<p style="text-align: justify;">அந்த வேதனையின் உச்சத்தை அவன் தந்தையை அழைத்துச் செல்ல சுபாங் ஏர்போட்டுக்குச் சென்றபோது முழுதுமாக உணர்ந்தான். அவரை அழைத்துப்போக அப்போது அவன் மட்டுமே வந்திருந்தான். அவரைப்  பார்த்தபோது கண்கள் கலங்க, விம்மல் மேலெழ நின்றான். நல்லசாமி வழக்கம் போல்  மெல்ல சிரித்தபோதும்&#8230; அதற்குப் பெயர் சிரிப்பா, ஆறுதலாக அவன் தோள்களைப் பற்றி அழுத்த ஒரு கணம் அணைத்துக் கொண்ட போதும் சப்தம் போட்டு அழ வேண்டும் போல் இருந்தது.</p>
<p style="text-align: justify;">சுற்றும் முற்றும் பார்த்தவாறு அடக்கிக் கொண்டான். அடக்கிக் கொண்டது அடங்கியா விடுகிறது, மாறாக ஆட்கொண்டு விடுகிறதே. ஏர்போர்ட்டில் பஸ்ஸுக்கு காத்திருக்கையில் விரக்தியும் எரிச்சலுமாய் அவனை மென்று விழுங்கியபோது அது கசிந்தது. கண்களையும் மறைத்து. கிள்ளான் பஸ் நிலையத்தில் டாக்ஸியில் வீட்டுக்கு போகலாம் என்று இருவரும் தீர்மானித்து முயன்ற போதும் இடத்தைச் சொன்னதும் திரும்பிவர ஆள் கிடைக்காது என்று டாக்ஸிகாரர்கள் மறுத்த போதும், மனதுக்குள் பெரு வெள்ளமாக பிரவாகமெடுத்தது கரையோர மரங்களையும் செடிகளையும் வேரோடு, வேரடி மண்ணோடு பேரிரைச்சலோடு ஊழி வெள்ளமாக அடித்துச் சென்றது. மனசுக்குள் காலங்காலமாகக் கட்டி அழகு பார்த்த ஏதோ ஒன்று இடிந்து, சரிந்து, சிதைந்து வெள்ளத்தோடு போய்விட்டதை உணர்ந்தான். குணா அழுதான்.</p>
<p style="text-align: justify;">தராத பக்குவத்தை இன்றைய தோல்வியும் யதார்த்தமும் நேற்றைய வெற்றியின் சுகமும், புகழின் போதையும் தரும்போது ஏன் விரக்தியும் அழுகையுமாய் வருது என்று தன்னையே நொந்து கொண்டான்.</p>
<p style="text-align: justify;">“ம்ம இன்னும் அழு. இந்த எரிச்சலும் விரக்தியும் போதாது உனக்கு&#8230; “பக்குவம்” அது வலிய வருந்திப் பெறுவது அல்ல. தானாக கனிவது. அந்த கனிதலுக்கு இந்த வேதனையும் விரக்தியும் தானே உரம்” பஸ்ஸில் வீடு திரும்பும் வரையில் இதே ரீதியில் சிந்திப்பது கொஞ்சம் அர்த்தம் உள்ளதாகப்பட்டது.</p>
<p style="text-align: justify;">நடைவீரர் நல்லசாமி இனி வேலைக்கும், மார்கெட்டுக்கும், வீட்டுக்குமாத்தான் நடக்க முடியுமேயொழிய நாட்டுக்காக நடக்க முடியாது என்பதுபோல் பரவலாகப் பேசப்பட்டது.</p>
<p style="text-align: justify;">அவர் நடந்து நடந்து காராக் நெடுஞ்சாலையின் ஒரு பக்கம் தேய்ந்து விட்டதனால் பொதுப்பணித் துறை அவரிடம் “டோல்” வசூலிக்க பரிசீலித்து வருவதாக அலுவலகத்தில் அவர் காதுபட கேலி பேசப்பட்டது.</p>
<p style="text-align: justify;">குணா இன்று பள்ளியில் கூட்டத்தில் ஒருவனாக தான் கலந்து கரைந்து காணாமல் போனது போன்று உணர்ந்தான்.</p>
<p style="text-align: justify;">“ப்பூ.. இவ்வளவுதானா எல்லாம்” என்ற சலிப்பு மனசு முழுசுமாக வந்து ஆக்ரமித்துக் கொண்டது.</p>
<p style="text-align: justify;">இந்த மாற்றத்திற்கெல்லாம் சிகரமாக ஒன்று நடந்தது.</p>
<p style="text-align: justify;">ஒரு சூடான நண்பகற் பொழுதில் நல்லசாமியின் குடியிருப்பின் அருகாமையில் பெரிதும் சிறிதுமாக நாலைந்து புல்டோசர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. அந்த நிலங்களை ஒரு ஜப்பானியக் கம்பெனி ரசாயணக் கழிவுகளை கொட்டுவதற்கு வாங்கி விட்டதாகவும், கூடிய விரைவில் எல்லோரும் இடத்தை காலி செய்யுமாறும் ஒரு இரும்பு தோப்பி கையில் வரைப்படங்களுடன் சொல்லிச் சென்றது. மண் அள்ளும் எக்ஸ்கவேட்டர் ஒன்று தன் இரும்பு தும்பிக்கையை தூக்கி பிளிரி மிரட்டி விட்டு நகர்ந்தது.</p>
<p style="text-align: justify;">அந்தக் குடியிருப்பில் இருந்தவர்களையெல்லாம் கவலை கவிழ்ந்தது. அன்று இரவு பாச்சிஹசானின் தலைமையில் கூட்டம். அவரவர்களுக்குத்தெரிந்த அரசியல்வாதிகளையும், ஆட்சி மன்ற உறுப்பினர்களையும் சந்தித்து இந்த வீட்டு அழிக்கும் படலத்தை ஒத்திப்போட அவகாசம் கேட்க தீர்மானமானது.</p>
<p style="text-align: justify;">நல்லசாமி தலைமையில் நகர மேயரையும், விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்திக்க ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் நல்லசாமி இது மாதிரியான, தன்னை முன்னிலை படுத்தி எழுப்பும் விண்ணப்பங்களும் வேண்டுகோள்களும் எந்தப் பலனையும் அளித்ததில்லை. அளிக்கப் போவதுமில்லை என்று நிராகரித்துவிட்டது எல்லோருக்குமே ஏமாற்றமளித்தது.</p>
<p style="text-align: justify;">அதன்பின் அதனால் எந்தப் பாதிப்பும் அற்றவனாய் வழக்கம்போல காலை, மாலை என்று தினந்தோறும் பயிற்சிக்குப் புறப்பட்டு நடையாய் நடக்கலானார் நடைவீரர் நல்லசாமி. இன்னும் ஆறுமாதத்தில் மணிலாவில் நடக்கவிருக்கும் போட்டியே அவரை இந்த விரட்டு விரட்டியது. அவர் தினமும் கண்ணுக்குத் தெரியாத எதையோ துரத்திக்கொண்டு வேக வேகமாக நடந்தார். இழந்த பெயரை அவருக்கு மீட்டுத்தர வேண்டும் என்று அவரின் கால்களின் தசைநார்கள் நாளுக்கு நாள் உறுதி கொண்டன. இந்த போட்டிக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்வதிலேயே அவர் தன் வீட்டுப் பிரச்சனை, அலுவலகப் பிரச்சனை, பணப்பிரச்னை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமா, செளகரியமாக மறந்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">இந்த ஆண்டு இறுதித் தேர்வு எழுதவிருக்கும் குணாவினால் வீடு இடிக்கப்படும் என்ற அச்சமும், தந்தையால் அதுகுறித்து ஏதும் செய்ய இயலாமல் போவது மட்டுமல்லாமல், அவர் தன் நடைபோட்டியே குறியாய் இருப்பதும் வியப்பாக&#8230; வியப்பு விரக்தியாக&#8230; விரக்தி எரிச்சலாக&#8230; எரிச்சல் சினமாக பரிணாமம் கண்டது.</p>
<p style="text-align: justify;">தந்தையைப் பற்றியதான தன் கடந்தகால பிரமிப்பும் பெருமையும் தன்னுள் குறைத்து கலைந்து போனதையும் ஒரு புதிய, பெரிய வீடு கட்டித்தர முடியாமல் போனாலும் பரவாயில்லை. இருக்கும் இந்தப் பலகை வீட்டையாவது தந்தையால் காப்பாற்ற முடியாது என்ற யதார்த்த உண்மையையும், இன்னாருடைய மகன் என்ற உணர்வாலும் உந்துதலாலும் அவன் கஷ்டப்பட்டு படித்து வருவதும் பல்கலைக்கழகம் போகப்போவதாகக் கற்பனை செய்து லயித்ததும்கூட முட்டாள்தனமாக படுவதையும், தனது மதிப்பீடுகள், அபிலாஷைகளை யாரோ கருக்கலைப்பு செய்தது போன்ற தன் மனோநிலையையும் அவ்வப்போது ஜெயலெட்சுமியிடம் பிரலாபித்தான்.</p>
<p style="text-align: justify;">அவன் வயதுக்கு மீறி சிந்திப்பதைப் பார்த்து அவள் மலைத்துப் போனாள். தன்மைந்தன் இன்னமும் பையன் அல்ல, அவன் மனிதனாகின்றான் என்ற மலர்ச்சி அவளுக்கு மகிழ்ச்சிதான். இருந்தாலும் அவனின் இந்தக் கழிவிரக்கம்?</p>
<p style="text-align: justify;">அவனால் மனிதர்களையும் சம்பவங்களையும் தாண்டி அதன் பின்னால் இயங்கும் மனித இயல்புகளை பற்றியும் சிந்திக்க தெரிந்திருந்தது குறித்து ஒரு பூரிப்புத்தான். இருந்தாலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்த கண்ணுக்குத் தெரியாத, விலக்கிவிட முடியாத ஒரு மாயத்திரை?</p>
<p style="text-align: justify;">ஜெயலெட்சுமி புழுங்கினாள். அவளால் மனதுக்குள் ரகசியமாக அழத்தான் முடிந்தது. அழுதாள்.</p>
<p style="text-align: justify;">போட்டியும் வந்தது.</p>
<p style="text-align: justify;">அன்று மாலை குணா புத்தகங்களோடு வெளியில் புறப்பட்டான். ஜெயலெட்சுமிக்கு அது வியப்பாக இருந்தது. அன்றிரவு அவனது அப்பாவின் நடைப்போட்டி மணிலாவிலிருந்து நேரிடை ஒளிபரப்படுவதை அவனுக்கு நினைவூட்டினாள். தனக்குக் கணக்கு பரீட்சை இருப்பதாகவும், அதற்காக நண்பன் ஒருவன் வீட்டில் படிக்கப்போவதாகவும் அவன் மிகச் சாதாரணமாகச் சொன்னான்.</p>
<p style="text-align: justify;">ஜெயலெட்சுமி அதிர்ந்தாள்.</p>
<p style="text-align: justify;">அவனின் இந்த மாற்றம் அவளால் ஜீரணிக்கக் கூடியதாக இல்லை. இருக்கும்படி வற்புறுத்தினாள். கெஞ்சினாள்.</p>
<p style="text-align: justify;">“அப்பா அவருடைய எதிர்காலத்துக்காக நடக்கிறார். நான் என்னுடைய எதிர்காலத்துக்காக படிக்கிறேன். நீங்க வீட்டைப் பாத்துக்குங்க&#8230; புல்டோசர் வந்து இடிச்சிறாம&#8230;” என்று மட்டும் கூறிவிட்டு நகர்ந்தான்.</p>
<p style="text-align: justify;">ஜெயலெட்சுமி பிரமித்துப்போய் ஒரு கணம் செய்வதறியாது மலைத்து சிலையானாள். அவன் சொன்னது நிஜம். நெஞ்சைச் சுடும் நிஜம்.</p>
<p style="text-align: justify;">அன்றிரவு நண்பனின் வீட்டு மாடியில் ஒரு அறையில் குணா கணக்குப் புத்தகத்தோடு தன்னைச் சுற்றி எதுவுமே நடவாதது போல் அமர்ந்திருந்தான். கீழே அவனது குடும்பத்தினரும் டிவி முன்பாக ஆரவாரம் செய்துக் கொண்டிருந்தது அவன் காதுகளில் விழத்தான் செய்தது. போட்டி கடுமையாகத்தான் இருக்கும் போல் தோன்றியது.</p>
<p style="text-align: justify;">நல்லசாமியின் கால்கள், தாங்கள் புதிய வரம் பெற்று வந்தவை போன்று தம் வலிமையையும் வேகத்தையும் நிருபித்துக் கொண்டிருந்தன.</p>
<p style="text-align: justify;">நல்லசாமியின் வீட்டில் சிறுவர் சிறுமிகளும், அண்டை வீட்டார்களும், பாச்சிஹசானும் ஆவலோடு வெற்றியை எதிர்நோக்கி டிவியின் முன்பாக குழுமியிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">ஜெயலெட்சுமி டிவியையும் வாசலையும் மாறிப் மாறிப் பார்த்திருந்தாள்.</p>
<p style="text-align: justify;">கீழே ஹாலில், டிவியில் அறிவிப்பாளர் தன் கனத்த குரலில் கர கரத்துக் கொண்டிருந்தார். குணாவின் நண்பர் குடும்பத்தினர் கைதட்டி குதூகலித்துக் கொண்டிருந்தனர். உற்சாகத்தின் உச்சாத்தில் ஒரு கணம் பெண் வீல் என் கத்தினாள்.</p>
<p style="text-align: justify;">குணாவின் கண்கள் கணக்குப் புத்தகத்தில், கால்களில் ஏதோ ஒருவிதப் பரபரப்பு. நெற்றியில் சொட்டுச்சொட்டாக வேர்வைத் துளிகள் முதுகுத் தண்டின் ஊடே ஒருவிதச் சிலிர்ப்பு. இது அந்த நடைப்போட்டியின் கடைசி நிமிடங்கள் என் உள்ளுணர்வு சொல்லிற்று.</p>
<p style="text-align: justify;">விசில் சப்தத்திற்கும் கைதட்டலுக்கும் இடையில் உச்சத்திற்கு ஏறிய அறிவிப்பாளரின் தொனி சகஜ நிலைக்குத் திரும்ப, குணா முடிவை ஒருவாறாக யூகித்துக் கொண்டான்.</p>
<p style="text-align: justify;">குணா கணக்கு புத்தகத்தை மூடினான். நாற்காலியில் சாய்ந்து கால்களை நீட்டிச் சரிந்தான்.</p>
<p style="text-align: justify;">விழிகளை மெல்ல மூடினான்.</p>
<p style="text-align: justify;">இமைகளின் விளிம்பில் இரண்டு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் முத்தாய்க் கோர்த்து கன்ன மேடுகளில் வழிந்து கணக்குப் புத்தகத்தை நனைத்தது.</p>
<p style="text-align: justify;">ஜெயலெட்சுமி எழுந்து சமையலறைக்குச் சென்று முந்தானையால் கண்களை பொத்தி மௌனமாக அழுதாள். இம்முறை கணவனுக்காக அல்ல, மகனுக்காக.</p>
<p style="text-align: justify;">நல்லசாமியின் வெற்றியை நாடே கொண்டாடுவதாக அந்த அறிவிப்பாளர் கூறிக்கொண்டிருந்தார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://shanmugasiva.vallinam.com.my/?feed=rss2&#038;p=77</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
	</channel>
</rss>

